Thursday, January 8, 2009

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமது அலி துரானி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இஸ்லாமாபாத் : கசாப்பை பாகிஸ்தானியன் என்ற உண்மையை வெளியிட்டதால், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமது அலி துரானி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கான உத்தரவை, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி நேற்றிரவு பிறப்பித்த்தார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " "முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசும் போது, பிரதமரை கலந்து பேசாமல் கருத்துக்களை தெரிவிக்க கூடாது. இந்த நடைமுறையை மீறியதற்காக துரானி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல் நடத்திய கசாப் பாகிஸ்தானியன் என்ற நாட்டின் ரகசியத்தை வெளியிட்டதன் காரணமாகவே துரானி நீக்கப்பட்டார் என்று பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவனான கசாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமது அலி துரானி கூறியதை செய்தி சேனல்கள் வெளியிட்டன.

அதன்பிறகே, "ஆம்... கசாப் எங்கள் நாட்டைச் சேர்ந்தவனே. இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்படுகிறது," என்று பாகிஸ்தான் தகவல்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் ஒப்புக்கொண்டார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது சாதிக்கும் இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் உறுதி செய்தார்.

மும்பையில் கடந்த நவம்பர் 26-ம் தேதி அத்துமீறி நுழைந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 160-க்கும் மேற்பட்டோரைக் கொன்றனர்.

இந்த பயங்கரவாதிகளில் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். விசாரணையில் கசாப் தான் ஒரு பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பதை ஒப்புக் கொண்டான். தனக்கு சட்ட உதவி அளிக்கக் கோரி பாகிஸ்தான் அரசுக்கு கடிதமும் அனுப்பினான். அஜ்மல் எனது மகன்தான் என்று பரித்கோட்டில் உள்ள அவனது பெற்றோரும் ஒப்புக்கொண்டிருந்தனர்.

ஆனால், பாகிஸ்தான் அரசு மட்டும் கசாப் தமது நாட்டைச் சேர்ந்தவன் அல்ல என்று உலக நாடுகளை ஏமாற்றி வந்தது.

தற்போது, துரானி உண்மையை வெளியிட்ட பிறகு வேறு வழியின்றி பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

ஆனால், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நீக்கி விட்டு தாம் முகமூடியை ஒருபோதும் களையப் போவதில்லை என்று மீண்டும் நிரூபித்துள்ளது.

No comments: