Monday, August 22, 2011

ஒரு ஊர்ல ஒரே ஒரு ஆயா!

மோனோவி என்ற கிராமம்/ நகரம்/ மாநகரத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு.’ ஆச்சர்யமாக இருக்கிறதா? 2010 அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் எய்லர் என்ற 77 வயது மூதாட்டி மட்டும் வசிக்கிறார். 2000இல் மோனோவியில் இரண்டு நபர்கள் இருந்தார்கள் என்றும், அந்த மற்றொருவர் எய்லரின் கணவர் என்றும் புள்ளிவிவரம் சொல்கிறது. அவர் 2004ல் காலமானதால் இன்று அதன் மக்கள் தொகை ‘ஒன்று’. 1971-ல் இந்த இடத்தை எய்லர் தம்பதியர் வாங்கினார்கள்.

அந்த அம்மணி இன்று அங்கு 5000 புத்தகங்கள் கொண்ட பொது நூலகத்தை நடத்துகிறார். நெப்ராஸ்கா மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தின் பெயர், கிராம நிர்வாக அலுவலர், பொருளாளர் எல்லாம் நம்ம அம்மணி எய்லர்தான். அரசாங்க ஆவணங்களிலும் இந்தக் கிராமத்தின் பெயர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதைப் பார்க்க ஏகப்பட்ட பார்வையாளர்கள் வருகிறார்களாம். இந்தக் குறும்புக்கார பாட்டியிடம் ஊரைப் பற்றிப் பேசச் சொன்னால், தம் கணவர் இறந்த பிறகு தங்கள் ஊரில் மக்கள் தொகை 50 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது, சந்தோஷம்தானே என்று நக்கல் விடுகிறாராம்.

லாட்டரி என்பது மார்ட்டின் குடும்பத் தொழில்

1980ன் பிற்பகுதியில் கோவைத் தெருக்களில் கூவிக் கூவி லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த ஒருவர், அடுத்த பதினைந்து வருடங்களுக்குள் பல வட கிழக்கு மாநிலங்களில் யார் முதல்வராக வர வேண்டும் என்று தீர்மானிக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார் என்பதை உங்களால் நம்ப முடியுமா? அப்படி உயர்ந்தவர்தான் இப்போது நில அபகரிப்பு வழக்கில் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் ‘லாட்டரி கிங்’ என்றழைக்கப்படும் சாந்தியா மார்ட்டின். ‘தவறான வழியில் சேர்த்த செல்வம் ஒருநாள் கவிழ்த்து விடும்’ என்று உண்மையை இப்போதாவது மார்ட்டின் புரிந்துகொண்டிருப்பார் என்கிறார்கள் அவரால் பழிவாங்கப்பட்ட தொழில் எதிரிகள்.

லாட்டரி என்பது மார்ட்டின் குடும்பத் தொழில் என்றுகூடச் சொல்லலாம். அவரது பெற்றோர் பர்மாவில் லாட்டரி பிஸினஸ் செய்து கொண்டிருந்தவர்கள். பின்னர் உள்நாட்டுக் குழப்பத்தால் அங்கிருந்து ஓடிவந்து அருணாசல பிரதேசத்தில் செட்டில் ஆனவர்கள். இப்படித்தான் வடகிழக்கு மாநிலங்களோடு மார்ட்டினுக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் கோவையில் வந்து தமது லாட்டரி பிஸினஸைத் தொடர்ந்தார் மார்ட்டின். அவருக்கு வலது, இடது கையாக விளங்கியவர் அவரது மைத்துனர் ஜான் பிரிட்டோ. அருணாசல பிரதேஷ், சிக்கிம், பூடான், நாகாலாந்து மாநிலங்கள் லாட்டரி நடத்த முடிவு செய்தபோது, முழு விற்பனை உரிமை பெற்றதிலிருந்துதான் மார்ட்டினுக்கு வசூல் வேட்டை.

அந்த மாநிலங்கள் குறிப்பிட்ட தொகைக்கு டிக்கெட்டுகளை அச்சடித்து, கமிஷனைக் கழித்துக்கொண்டு மார்ட்டின் கையில் கொடுத்துவிடும். அவர் இந்தியா முழுவதும் விநியோகிப்பார். இங்கேதான் தில்லுமுல்லு. அந்த அரசாங்கங்கள் அடித்த லாட்டரி சீட்டுகளைத் தவிர கோடிக்கணக்கில் கள்ள லாட்டரி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்படும். அப்படி விற்கப்பட்ட கள்ள டிக்கெட்டுகள் மூலம் புரண்டன கோடிகள். பின்னர் ஒரு கட்டத்தில், சில மாநிலங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு லாட்டரி டிக்கெட்டை அச்சடித்து விநியோகிக்கும் பொறுப்பைத் தனியாருக்கு காண்ட்ராக்ட் கொடுத்தவுடன், கணக்கு வழக்கு இல்லாமல் சகட்டுமேனிக்கு அச்சடித்து, விற்று பணத்தைக் குவித்தார்கள்.

சில மாநிலங்களில் தினக் குலுக்கல் நடந்தபோது விற்காத டிக்கெட்டுகளின் பட்டியலை உடனுக்குடன் பெற்று, அந்த டிக்கெட்டுகளுக்குப் பரிசு விழுந்ததாக அறிவித்து விடுவார்கள். இந்த கோல்மால்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகளும் உடந்தை. எனவே தான் யார் முதல்வராக வர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் வகையில் ஒவ்வொரு தேர்தலிலும் கோடிக்கணக்கில் செலவழிப்பார் (முதலீடு?). ஒரு கட்டத்தில் மார்ட்டினுக்கு குவிந்த பணத்தை எண்ணுவதற்கென்று 40 பெண்களை வேலைக்கு வைத்திருந்தார்களாம்!

தமிழ்நாட்டில் 2003ஆம் வருடம் லாட்டரிக்குத் தடை போடப்பட்டது. 2006ஆம் ஆண்டு ஜெ. ஆட்சியில் இருந்தவரை மார்ட்டின் போன்றவர்கள் எவ்வளவோ முயன்றும் தடை நீக்கப்படவில்லை. ஆனால், உள்ளூர் காவல் துறையின் உதவியுடன், கள்ளத்தனமாக லாட்டரி விற்பனை நடந்து கொண்டிருந்தது. சேர்த்த பணத்தில் கோவை, சென்னை என்று பல நகரங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்தார். ஒரு சேனலைத் தொடங்கி விட்டார்.

கருணாநிதி லாட்டரித் தடையை நீக்காவிட்டாலும் லாட்டரி அதிபரான மார்ட்டினுக்கு மறுவாழ்வு கொடுத்தார் என்று சொல்லலாம். கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் ‘இளைஞன்’ படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு மார்ட்டினுக்குக் கிடைத்தது. எந்தத் தமிழ் சினிமா கதாசிரியரும் கருணாநிதியைப் போல ஐம்பது லட்சம் சம்பளமாகப் பெற்றிருக்க மாட்டார்கள். ஆளும் குடும்பம் மார்ட்டின் சொல்படி கேட்டது. மதுரைத் தளபதியின் மனைவிக்கு இவர் வாங்கிக் கொடுத்த சொத்து இப்போது வில்லங்கமாகி இப்போது அவரையும் வழக்கில் பின்ன வைக்க, காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

எந்தக் கட்சித் தலைவரையும் பணத்தால் வளைக்கக் கூடியவர் மார்ட்டின். கேரள மாநிலத்தில் லாட்டரி விவகாரத்தில் ஆதாயம் பெற மார்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிகையான தேசாபிமானிக்கு இரண்டுகோடி நன்கொடை கொடுத்தார். இவருக்காக கேரளாவுக்கு வழக்காட வந்தவர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி. செம்மொழி மாநாட்டில் ஒரு கமிட்டியில் இடம் பிடித்துவிட்டார். தி.மு.க. ஆட்சியில் இவர் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் குப்பைத் தொட்டிக்குப் போயின. மாறாக யாரை பழி வாங்க வேண்டும் என்று இவர் நினைத்தாரோ அவர்கள் பொய்ப் புகார்களில் பழிவாங்கப்பட்டார்கள். அப்படிப் பழிவாங்கப்பட்டவர்களில் பத்திரிகை அதிபரும் ஒருவர்.

பொது மேடைகளில் அவ்வளவாக தலை காண்பிக்க மாட்டார் மார்ட்டின். இப்போதும் தம் பணம் தம்மைக் காப்பாற்றும் என்று அவர் நம்பி செயல்படுவதாகச் சொல்கிறார்கள். மார்ட்டின் பணம் எதுவரை பாயுமோ?

சாக்ஸுக்காகவும் சன் நிறுவனத்துக்காகவும் இன்று திரையுலகில் பரிதாபப்பட யாருமில்லை என்பதுதான் உண்மை நிலை.

விஷால் நடித்த படம் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’. இதன் தயாரிப்பாளர் அவரது சகோதரர் விக்ரம் கிருஷ்ணா. படம் முடிந்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. தமிழ் நாடு உரிமை ஆறு கோடி," என்றார் விக்ரம். எங்களுக்கு தமிழ்நாடு முழு உரிமை வேண்டாம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தவிர மற்ற ஏரியாவுக்கு ரேட் சொல்லுங்க," என்றார் சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ‘சாக்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா. அப்ப நாலு கோடி கொடுங்க," என்றார் விக்ரம். நான்கு கோடியில் அட்வான்ஸ் கை மாறியது. ஆனால், சென்னை ஏரியாவில் படத்தை யாருக்கும் விற்காத நிலையில் 40 தியேட்டர்களில் ரிலீஸ் என்ற விளம்பரம் வந்தது. அதிர்ந்து போய்விட்டார் விக்ரம். நீங்க எப்படி இந்த ஏரியாவில் ரிலீஸ் செய்யலாம்," என்று கேட்க, ஏய் மிஸ்டர்... இந்தா உன் படம். இந்த ஏரியாவில் வசூல் செய்த நாற்பது லட்சம். எடுத்துக் கொண்டு போ. ஏதாவது மேலே பேசினால் அவ்வளவுதான்," என்று மிரட்டப்பட்டார் விக்ரம். அதிகாரத்திலிருந்த பலரிடம் முட்டி மோதியதில் எந்தப் பலனுமில்லை.

இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்தான். இதுபோல் குறைந்தது 50 வயிற்றெரிச்சல் கதைகளைச் சொல்கிறது தமிழ்த் திரைப்பட உலகம். உதாரணத்துக்குச் சில:

தயாரிப்பாளர்களையும் தியேட்டர் அதிபர்களையும் ஏமாற்ற, பல யுக்திகளைக் கடைப்பிடித்தார். ‘சினிமா உலகம்’ கறுப்பு - வெள்ளை பரிமாற்றத்தில் இருப்பதால் இவரது யுக்திகள் சுலபத்தில் செயல்பட்டன. படத்துக்குப் பேசிய தொகை 1 கோடி என்றால் கணக்கில் காட்டப்படுவது 50 லட்சமாகத்தான் இருக்கும். கறுப்பு அல்லது வெள்ளையில் பேசிய ஒரு தொகையைக் கொடுக்காமல் இழுத்தடிப்பதும், சில வேளைகளில், அதிகார பலம் காரணமாகக் கொடுக்காமலேயே இருப்பதும் நடந்திருக்கிறது. சில சமயங்களில் படம் நன்றாக ஓடினாலும் ‘வசூலே கிடையாது. ஊத்திக்கிச்சு... நீ தான் பணம் கொடுக்கணும்’ என்று மிரட்டப்பட்ட சம்பவங்களும் உண்டு.

ஒரு படத்தை வாங்குவது என்று சாக்ஸ் தீர்மானித்துவிட்டால் ‘தாங்கள் வாங்கப் போவதாக’ச் செய்தியைக் கசிய விடுவார்கள். வேறு எந்த விநியோகஸ்தரும் தலையிட மாட்டார். இறுதியில் ஒரு விலை கொடுத்து ‘சன்’ வாங்கிவிடும். இந்த அஜால்குஜால் வேலைக்கு அடிபணிந்து வெறுத்துப் போனது ஒரு பிரபல மூன்றெழுத்துப் பட நிறுவனம். ஆட்சி மாறிய பின்தான் இப்போது மீண்டும் படத் தயாரிப்புக்குத் திரும்பியிருக்கிறது.

தங்களுக்கு யாராவது படத்தை விற்காவிட்டால் தங்கள் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் விமர்சனம் என்ற பெயரில் நார் நாராய்க் கிழித்துத் தொங்கப் போடுவார்கள். ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைக்காது. சன் குழுமத்தின் ஆசி, ஆதரவுடன் சாக்ஸால் இதையெல்லாம் நிகழ்த்த முடிந்தது.இப்படிப் பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும். ‘முற்பகல் செய்யின்’ கதைபோல இன்று புழலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் சாக்ஸ்.

சாக்ஸ் குடும்பம் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டது. இவரது பெற்றோர் பர்மாவிலிருந்து அகதிகளாக ஓடி வந்தவர்களாம். அப்பா தர்மராஜ், லிப்டன் தேயிலை நிறுவனத்தில் பணியாற்றினாராம். சாக்ஸின் ஒரிஜினல் பெயர் வெங்கடேஷ். ஒரு ஸ்டைலுக்காக இப்போது அழைக்கப்படும் பெயருக்கு மாறியிருக்கிறார். ஆனால், இவர் தந்தையுடன் இப்போது சரியான பேச்சு வார்த்தையில்லையாம். ‘பெத்த மனம் பித்து’ என்ற நிலையில் நீதிமன்றத்துக்கு மகனைப் பார்க்க வந்த தந்தையைத் திட்டி அனுப்பிவிட்டாராம் சாக்ஸ்.

பட விஷயங்களிலும் சரி, தனிப்பட்ட விஷயங்களிலும் சரி, தம்முடன் யார் தகராறு செய்தாலும், அடி, உதை என்று களத்தில் இறங்க குண்டர் படை ஒன்று தயாராக வைத்திருந்தாராம். தம்முடன் தகராறு செய்த ஒரு ஓட்டல் அதிபர் மகனை பழிவாங்கும் நோக்கில் அண்ணா சாலையில் அவரது ஓட்டலை அடித்து துவம்சம் செய்தது இவரது குண்டர் படை. வெளியே வராத அட்டகாசங்கள் பல உண்டு.

லயோலா கல்லூரியில் கலாநிதி மாறனுடன் ஏற்பட்ட நெருக்கம் இன்றுவரை தொடர்கிறது. சாக்ஸை அம்போவென்று கலாநிதியால் இப்போது கைவிட முடியாது. அப்படி விட்டால் கலாநிதியை அவர் மாட்டிவிட்டு விடக்கூடும். எனவே சாக்ஸை ஜாமீனில் கொண்டு வரும் முயற்சி நடக்கிறது. புகார் கொடுத்தவர்களிடம் செட்டில்மெண்ட் நடக்கிறது. ஏற்கெனவே புகார் கொடுத்த ஐந்து பேர் வாபஸ் வாங்கி விட்டார்கள். ஆனால், தினம் ஒரு புகாரில் மறு கைது செய்யப்படுகிறார் சக்ஸேனா. பட சம்பந்தமான கேஸ் தவிர நில அபகரிப்பிலும் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

‘எந்திரன்’ விவகாரத்தில் நஷ்டப்பட்டுப் போன தியேட்டர்களுக்கு 35 கோடி செட்டில் செய்திருக்கிறார்கள். புகார் கொடுத்த செல்வராஜ் என்பவர் வீட்டில் மத்திய அரசின் வருமான வரித்துறை ரெய்ட் நடத்தியது. தமது செல்வாக்கால் புகார் கொடுத்தவர்களை இப்படியும் பயமுறுத்துகிறது சன். தமிழக அரசு வழக்குகளை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி விட்டது. சாக்ஸுக்காகவும் சன் நிறுவனத்துக்காகவும் இன்று திரையுலகில் பரிதாபப்பட யாருமில்லை என்பதுதான் உண்மை நிலை. இதற்கிடையில் கலாநிதிக்கு எதிராக ஒரு வாக்குமூலத்தை வாங்க சி.பி.சி.ஐ. முயன்று வருகிறது.

Sunday, August 21, 2011

மிக்ஸ்டு அல்வா , உருளை தயிர்வடை

மிக்ஸ்டு அல்வா

தேவையானவை : உருளைக்கிழங்கு - கால் கிலோ, கேரட் துருவல் - ஒரு கப், பாதாம் பருப்பு - 25, தேங்காய் துருவல் - ஒரு கப், பால் - 300 மில்லி, ரவை - 100 கிராம், சர்க்கரை - 250 கிராம், நெய் - 100 மில்லி, முந்திரிப்பருப்பு - 10, பொடித்த ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை : உருளைக்கிழங்கை வேகவைத்து கட்டி இல்லாமல் உதிர்த்துக் கொள்ளவும். பாதாம் பருப்பை ஊற வைத்து, தோலை உரித்த பின், மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். துருவிய கேரட், தேங்காய் துருவலையும் பால் சேர்த்து தனித்தனியாக அரைக்கவும். அனைத்து விழுது களையும் உதிர்த்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடி கனமான அகன்ற கடாயில் சர்க்கரையோடு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து கொதித்ததும், ஒரு கரண்டி பால் விட்டால் சர்க்கரையில் உள்ள அழுக்கு ஓரமாக ஒதுங்கும். அதைக் கரண்டியால் எடுத்துவிட்டு... ரவையை சேர்த்து, கொதித்ததும் சிறிது நெய் விட்டு கிழங்கு கலவையை சேர்த்துக் கிளறவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து, நன்கு கிளறவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் மீண்டும் நெய் விட்டுக் கிளறி இறக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி, முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

- என்.பாப்பா, பாளையங்கோட்டை



உருளை தயிர்வடை

தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - அரை கிலோ, அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், அரைத்த இஞ்சி - பச்சை மிளகாய் - கொத்தமல்லி விழுது - ஒரு டீஸ்பூன், தேங்காய் விழுது - அரை டீஸ்பூன், தயிர் - ஒரு கப், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், சர்க்கரை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை : ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, அரிசி மாவு, இஞ்சி - பச்சை மிளகாய் - கொத்தமல்லி விழுது, உப்பு ஆகியவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

கடைந்த தயிரில் சர்க்கரை, உப்பு, தேங்காய் விழுது சேர்த்துக் கலந்து... கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டவும். தட்டில் கொஞ்சம் தயிர் விட்டு அதன் மேல் வடைகளை வைத்து, பிறகு மீண்டும் கொஞ்சம் தயிரை வடைகளின் மேல் விட்டு பரிமாறவும். தயிரில் ஊற வைத்தால் வடை கரைந்துவிடும்.

விருப்பப்பட்டால் சிறிது மிளகுத்தூள் தூவி பரிமாறலாம்.

- பூமா ராகவன், சென்னை-24

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

மிக்ஸ்டு அல்வா: பாலுடன் சிறிதளவு மில்க்மெய்டும் சேர்த்தால் சுவை கூடும்.

உருளை தயிர்வடை: அரிசி மாவுக்குப் பதிலாக சோள மாவு அல்லது ரவை சேர்த்தால், அதிக ருசியாக இருக்கும்.

30 வகை ரசம்,

சௌத் இண்டியன் சூப்பர் சூப்!’-
இது, நம்ம ஊர் ரசத்துக்கு வெளிநாட்டவர்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர். நாக்கின் ருசி நரம்புகளைத் தூண்டி, சாப்பிடும் அனுபவத்தை ஆனந்தமாக்குவதால்தான், நம்முடைய சாப்பாட்டில் ரசத்துக்கு ஸ்பெஷல் இடஒதுக்கீடு கொடுத்திருக்கிறோம். அத்தகைய ரசத்தை, இங்கே 30 விதமாக சமைத்து திக்குமுக்காட வைக்கிறார் சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்.

''இளநீர் ரசம், ஆப்பிள் ரசம், மாங்காய் ரசம் என வித்தியாசமான ரசங்களுடன், குடும்ப ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும் வகையில் மருத்துவ குணம்மிக்க இஞ்சி ரசம், ஓமவள்ளி ரசம், திப்பிலி ரசம் போன்றவற்றையும் தந்திருக்கிறேன்'' என்ற வசந்தா, சொல்லும் முக்கியமான டிப்ஸ் -

''பொங்கி வரும்போதே ரசத்தை இறக்கிவிடவேண்டும். அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது.'' உங்களுக்காக 30 வகை ரசத்தையும், அழகுற அலங்கரித்து இங்கே பரிமாறுகிறார் செஃப் ரஜினி!

கொட்டு ரசம்

தேவையானவை: புளித் தண்ணீர் - 2 கப், ரசப்பொடி - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ரசப்பொடி செய்ய - தேவையானவை: தனியா - 300 கிராம், மிளகு - 100 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், சீரகம் - 25 கிராம், மஞ்சள்துண்டு - சிறியது, காய்ந்த மிளகாய் - 20-லிருந்து 30 அல்லது காரத்துக்கு ஏற்றப்படி (கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்).

செய்முறை: புளித் தண்ணீரை கொதிக்கவிடவும். புளி வாசனை போனவுடன் உப்பு, ரசப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு பொங்கு பொங்கியவுடன் கீழே இறக்கி... கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

முருங்கைப் பிஞ்சு ரசம்

தேவையானவை: முருங்கைப் பிஞ்சு (நறுக்கியது) - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், தக்காளி - 2, மிளகு - சீரகத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, தக்காளி, முருங்கைப் பிஞ்சு ஆகியவற்றுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். இதில் தேவையான தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.

வெங்காய ரசம்

தேவையானவை: தனியா - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், தக்காளி - 2, நறுக்கிய வெங்காயம் - கால் கப், புளித் தண்ணீர் - 2 கப், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சித் துருவல், பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கி விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும் (தேவைப்பட்டால் இன்னும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை தூவவும் .

கொத்தமல்லி ரசம்

தேவையானவை: தக்காளி - 3, தனியா - 2 டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, கொத்தமல்லியுடன் தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். பெருங்காயம் தேவை இல்லை.



கறிவேப்பிலை ரசம்

தேவையானவை: கறிவேப்பிலை - ஒரு கப், துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், புளி - ஒரு சிறிய உருண்டை,

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நெய் - சிறிதளவு, கடுகு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியில் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதனுடன் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் ஓரிரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

பொரித்த ரசம் - 1

தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - 2 கப், தக்காளி - 2, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

அரைக்க: துவரம்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மிளகு - ஒரு டீஸ்பூன் (சிறிது நெய்யில் வறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுக்க வேண்டாம்).

செய்முறை: பருப்புத் தண்ணீர், தக்காளி துண்டுகள் சேர்த்து தக்காளி வேகும் வரை கொதிக்க விடவும். (அல்லது பருப்பு, தக்காளி துண்டுகளை ஒன்றாக வேக வைத்து மசிக்கவும்). இதில் தேவையான அளவு அரைத்த பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, பொங்க வைத்து, கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து... கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.

பொரித்த ரசம் - 2

தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்புத் தண்ணீர் - 2 கப், காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு - ஒரு கப், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தனியா, உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து, சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன் பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, உப்பு கலந்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து.... கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கவும்.

திப்பிலி ரசம்

தேவையானவை: கண்ட திப்பிலி - 10 கிராம், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சம் பழ அளவு, எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு திப்பிலியை வறுக்கவும். கீழே இறக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும் காய்ந்த மிளகாய், புளி, மிளகு, சீரகம் ஆகியவற்றை இதில் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு, இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கரைத்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கீழே இறக்கி, கடுகு தாளிக்கவும் .

ஒப்பட்டு ரசம்

தேவையானவை: வேக வைத்த கடலைப்பருப்பு - அரை கப், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன், புளித் தண்ணீர் - 2 கப், ரசப்பொடி - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வேக வைத்த கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் துருவலை சேர்த்து கெட்டியாக அரைத்து, வாணலியிலில் சேர்த்து கிளறிக் கொள்ளவும். புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். பெருங்காயத்தூள், ரசப்பொடி, உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு, பருப்புக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.

ஆப்பிள் ரசம்

தேவையானவை: பொடியாக நறுக்கிய ஆப்பிள் - ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு (நன்றாக மசித்துக் கொள்ளவும்) - அரை கப், தக்காளி துண்டுகள் - கால் கப், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள் ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகளை 3 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும் (குழைய வேகவிட வேண்டாம்). பிறகு, இதில் தக்காளி துண்டுகள், மசித்த பருப்பு, வறுத்து அரைத்த விழுது,

மஞ்சள்தூள் உப்பு சேர்த்து, இரண்டு கொதி விட்டு இறக்கவும். எண்ணெ யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப் பிலை கிள்ளிப் போடவும்.

துவரம்பருப்பு ரசம்

தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - 2 கப், தக்காளி சாறு - அரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு - மிளகு - மிளகாய் அரைத்த பொடி - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, அரைத்த பொடி, உப்பு பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பொங்கி வரும்வரை கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.

கிள்ளு மிளகாய் ரசம்

தேவையானவை: காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், புளித் தண்ணீர் - 2 கப், கறிவேப்பிலை, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.

செய்முறை: புளித் தண்ணீரை 5 நிமிடம் கொதிக்கவிட்டு... உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடுகு மற்றும் இரண்டாக கிள்ளிய மிளகாயை எண்ணெயில் தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். கடைசியில் கறிவேப்பிலையை கிள்ளி சேர்க்கவும்.

மைசூர் ரசம்

தேவையானவை: வேக வைத்த துவரம்பருப்பு - அரை கப், தக்காளி - 6, வெல்லம் - சிறிய துண்டு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நெய், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நெய்யில் கடலைப்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவப்பாக வறுத்துக் கொள்ளவும் (சீரகத்தை வறுக்க வேண்டாம்). மிக்ஸியில் தண்ணீர் விட்டு, வறுத்து வைத்திருப்பவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். கூடவே சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தக்காளியை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தக்காளி சாறு, வேகவைத்து மசித்த துவரம்பருப்பு மற்றும் பருப்பு வேகவைத்த தண்ணீர் இவற்றுடன் அரைத்த விழுதையும் சேர்த்து, உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். வெல்லம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

மிளகு ரசம்

தேவையானவை: புளித் தண்ணீர் - 2 கப், மிளகு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் புளித் தண்ணீரை விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து புளிவாசனை போகும் வரை கொதிக்க விடவும். பிறகு அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும்.

மாங்காய் ரசம்

தேவையானவை: மாங்காய் துருவல் - அரை கப், துவரம்பருப்பு, மிளகு - தலா 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, தக்காளி சாறு - கால் கப், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாங்காய் துருவலை சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஆறியபிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தக்காளி சாறு, உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து... கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.

அரைத்து விட்ட வேப்பம்பூ ரசம்

தேவையானவை: காய்ந்த வேப்பம்பூ - 2 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று, புளித் தண்ணீர் - 2 கப், கடுகு, நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கும்போது, தக்காளியையும் அரைத்து எடுக்கவும். இதனுடன் தேவையான புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, உப்பு சேர்க்கவும். நெய் அல்லது எண்ணெயில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

திடீர் ரசம்

தேவையானவை: புளி - எலுமிச்சம் பழ அளவு, துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - 6 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளி, துவரம்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகிவற்றை லேசாக எண்ணெயில் வறுத்து, மிக்ஸியில் பவுடராக செய்து கொள்ளவும். இதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்து, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற் றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ரசம் தேவைப்படும் போது ஒரு பாத்திரத்தில் இந்தப் பொடியை போட்டு, தேவையான தண்ணீர் விட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சட்டென்று செய்யக் கூடியது இந்த ரசம்.

டொமேட்டோ ப்யூரி ரசம்

தேவையானவை: டொமேட்டோ ப்யூரி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு கப்,

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், ரசப்பொடி - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: டொமேட்டோ ப்யூரியில் தேவையான தண்ணீர் விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். பிறகு ரசப்பொடி, உப்பு, பெருங்காயத்தூள் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும்.

தனியா ரசம்

தேவையானவை: தனியா - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், தக்காளி - கால் கிலோ, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தனியா, காய்ந்த மிளகாய், துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து அரைக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து, வறுத்து அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றை அதனுடன் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு கீழே இறக்கி, கடுகு தாளிக்கவும்.

பார்லி ரசம்

தேவையானவை: பார்லி - ஒரு கப், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு - அரை கப், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடிக்கவும். பார்லியில் 3 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும் இந்த தண்ணீருடன் தக்காளி சாறு, மிளகு - சீரகப் பொடி, உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

மோர் ரசம்

தேவையானவை: மோர் - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், வெந்தயம், கடுகு - தலா அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: துவரம்பருப்பு, தனியா, வெந்தயம், மிளகு ஆகியவற்றை வறுத்து, சீரகத்தை சேர்த்து அரைக்கவும். மோரில் மஞ்சள்தூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து லேசாக சூடு செய்து (கொதிக்க வைக்க வேண்டாம்) கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.



புளி இல்லாத ரசம்

தேவையானவை: தக்காளி சாறு - 2 கப், வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - அரை கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (நீள வாக்கில் கீறியது) - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : உளுத்தம்பருப்பையும், மிளகையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். தக்காளி சாறு, பருப்புத் தண்ணீர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, அரைத்த பொடியையும் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். கீறிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கீழே இறக்கி, எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

புதினா ரசம்

தேவையானவை: புதினா இலைகள் - ஒரு கப், மிள காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி சாறு (அ) புளித் தண்ணீர் - 2 கப், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினா இலைகளை தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும் இந்த நீரில் உப்பு, மிளகாய்தூள், சீரகத்தூள் பெருங்காயத் தூள், தக்காளி சாறு அல்லது புளி தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.



இஞ்சி ரசம்

தேவையானவை: இஞ்சித் துருவல் - கால் கப், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு - 2 கப், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இஞ்சித் துருவலுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, துவரம்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு, தக்காளி சாறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

இளநீர் ரசம்

தேவையானவை: இளநீர் - 2 கப், தக்காளி சாறு - அரை கப், துவரம்பருப்பு, மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், இளநீர் வழுக்கை - கால் கப், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கடைசியில் இளநீர் வழுக்கையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் இளநீர், தக்காளி சாறு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்க்கவும்.

ஸ்பெஷல் எலுமிச்சை ரசம்

தேவையானவை: தக்காளி - 3, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கப், சீரகம் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், கடுகு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், ஆகியவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும் இதனுடன் தேவையான தண்ணீர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். கடைசியாக, நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

அரைத்துவிட்ட பூண்டு ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு பல் - 10, புளித் தண்ணீர் - 2 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.

செய்முறை: துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பூண்டு பல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். அதில் அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

ஓமவள்ளி ரசம்

தேவையானவை: ஓமவள்ளி இலை - 5, சுக்கு - ஒரு சிறிய துண்டு, மிளகு - அரை டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தக்காளி சாறு - 2 கப், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக அரைக்கவும். இதை தக்காளி சாறுடன் கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும்.



ஸ்பெஷல் பூண்டு ரசம்

தேவையானவை: புளித் தண்ணீர் - 2 கப், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், தக்காளி - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சிறிதளவு எண்ணெயில் துவரம்பருப்பு, சீரகம், பூண்டு ஆகியவற்றை வதக்கி கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் தக்காளி துண்டுகளை வேகவிடவும். பிறகு அரைத்த விழுது, உப்பு சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

உருண்டை ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - கால் கப், புளித் தண்ணீர் - 2 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து, அரைத்து ஆவியில் வேக விடவும். வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

புளித் தண்ணீருடன் மஞ்சள்தூள் சேர்த்து, புளி வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வறுத்து அரைத்த விழுதை இதில் சேர்த்து, உப்பு போடவும். ஆவியில் வேக வைத்து எடுத்த பருப்பு கலவையிலிருந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி ரசத்தில் போட்டு, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.

சென்னை நகரின் வயது 371.

தமிழகத்தின் தலைநகர் சென்னை, சரித்திரப் புகழ் வாய்ந்தது. அதன் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ம் தேதி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் 'சென்னை தினம்' என்ற கொண்டாட்ட தினமாக மாறி இருக்கிறது.

ஒரு சாதாரண மீன்பிடி கிராமமாக தோன்றி இன்று இந்தியாவின் 4-வது பெரிய நகரமாக விளங்கும் சென்னை நகரின் வயது 371.

சென்னை... ப்ளாஷ்பேக்...

1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதிதான் இப்போது சென்னை என்று அழைக்கப்படும் 'மெட்ராஸ்' உருவானது.

சென்னையில் ஐரோப்பியர்கள் வந்து குடியேறத் தொடங்கிய பின்னரே அது நகரமாக வளர ஆரம்பித்தது. இங்கு முதலில் குடியேறியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். இவர்கள் 1552-ம் ஆண்டு சென்னையின் ஒரு பகுதியாகவும், கடற்கரை பகுதியாகவும் இருந்த சாந்தோமில் குடியேறி வணிகம் செய்து வந்தனர்.

தற்போது உயர்நீதிமன்ற கட்டடம் இருக்கும் இடத்தில் சென்னக்கேசவர் கோயில் இருந்தது. அந்த கோயிலைச் சுற்றி ஒரு குப்பம் இருந்தது. அதற்கு 'சென்ன கேசவப்புரம்' என்பது பெயர்.

1639 ஆகஸ்ட் 22-ம் தேதி கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஃபிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் 'சென்னப்பட்டினம்' என்று அழைக்கப்பட்டது.

சென்னப்பட்டினத்துக்கு தெற்கே உள்ள ஊர் 'மதராசு' என்று அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஆங்கிலேயர்கள் ஒன்று சேர்த்து 'மெட்ராஸ்' என்றும் தமிழர்கள் 'சென்னப்பட்டினம்' என்றும் அழைத்தனர்.

1997-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி 'மெட்ராஸ்' என்ற பெயரை 'சென்னை' என்று மாற்றினார்.



சென்னைச் சிறப்புகள்...

பழைய சென்னப்பட்டினத்துக்கு அதிக பெருமைகள் இருக்கின்றன. இந்தியாவின் முதல் கிறிஸ்தவ தேவாலயம், முதல் மருத்துவமனை, முதல் பொழுதுபோக்கு மையம், முதல் நகராட்சி போன்றவை சென்னையில்தான் தோன்றின.

இன்று, சென்னை சாஃப்ட்வேர், உயிரி தொழில்நுட்பம், கார் உற்பத்தி, சுற்றுலா, கலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது.

சுமார் 75 லட்சம் மக்கள் தொகையுடன் இந்தியாவின் 4 பெருநகரங்களில் முக்கிய பெருநகராக சென்னை இருக்கிறது.

மிகப் பெரிய மருத்துவமனைகள் நிறைந்து மருத்துவத் துறையின் தலைமையிடமாகவே சென்னை திகழ்கிறது. அப்பலோ, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், மியாட், ராமச்சந்திரா என பல புகழ் பெற்ற மருத்துவமனைகள் இங்கு இருக்கின்றன.

ஐ.டி. துறையில் பெங்களூருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மும்பைக்கு அடுத்து சினிமா தயாரிப்பில் இரண்டாவது இடத்தில் சென்னை இருக்கிறது.

அதே நேரத்தில், குடிநீர், வடிகால் வசதி, மின்வெட்டு, வாகன நெரிசல் போன்ற சிக்கல் நகரின் பெருமையை குறைக்கும் அம்சமாக இருக்கின்றன. உலகின் இரண்டாவது நீள அழகிய கடற்கரை இங்குள்ள மெரினாதான்.

அதிக குளிர், அதிக வெப்பம் இல்லாத நகரம் என்பதால் அதிகமானோர் இங்கேயே தங்கி விட விரும்புகிறார்கள். நாளுக்கு நாள் நகரின் மக்கள் தொகை அதிகரிக்க இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.



சென்னை பல்கலைக்கழகம்!

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த போது, சென்னை மாநகரம், மெட்ராஸ் பிரசிடென்சி என்கிற நிர்வாகத்தின் கீழ் இருந்தது. 1839-ம் ஆண்டில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் தங்களுக்கு உயர்கல்வி கற்க சிறந்த அமைப்பு இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். இதற்காக, 70,000 பேர் கையெழுத்துப் போட்டு ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு 1857-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. ஒரிசா, கேரளா, பெங்களூரு, மங்களூர், ஆந்திரா வரையில் இந்த இதன் எல்லை இருந்தது.

சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும் அதன் எதிரில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகமும் இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுள் சில.

சிறப்புமிக்க நூலகங்கள்...

* சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம், தேசிய களஞ்சிய நூலகங்களுள் ஒன்றாக இருக்கிறது. இதன் அடிக்கல் 1890-ம் ஆண்டு நாட்டப்பட்டு, 1896&ம் ஆண்டு ஆரம்பிக்கபட்டது. அப்போதைய மதறாஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இதற்கு சூட்டப்பட்டது.

* தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கிறது. 3.75 லட்சம் சதுர அடிப் பரப்பில் சுமார் 180 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறது.

மக்கள் தொகை...

சென்னையின் மக்கள் தொகை சுமார் 75 லட்சம். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418 மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25% மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மார்வாரி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன.

ஆடுகளம்...

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது.

இவ்வாறு பற்பல சிறப்புகளை தன்னகத்தேக் கொண்டிருக்கும் சென்னையில் உங்களுக்குப் பிடித்த முக்கிய அம்சங்களை இங்கே பகிரலாமே!

Friday, August 19, 2011

காங்கிரஸ் பேரியக்கம் இனி சாதிக்குமா? அல்லது சமாதியாகுமா?


இந்திய தேசிய காங்கிரஸ்", 1885 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு இப்படித்தான் பெயரிடப்பட்டது. பிறகு 1969 இல் ஏற்பட்ட பிளவில் "இந்திரா காங்கிரஸ்" என்று நாமகரணத்தை சூட்டிக் கொண்ட ஒரு கோஷ்டி தான் இன்றைக்கு, தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற அடிப்படையில் பழைய வரலாற்றையும் தன்னோடு இணைத்துக் கொண்டு, நூற்றாண்டு கடந்த இந்தியாவின் நடப்பிலிருக்கும் ஒரே கட்சி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. அந்த இந்திரா காங்கிரஸும், சமீபகாலமாக "இத்தாலி காங்கிரஸ்" என்று புலகாங்கிதத்துடன் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நிகழ்வுகள் சென்று கொண்டிருக்கின்றன!

சரியாகச் சொல்லப்போனால், இக்கட்சி ஆரம்பித்ததன் நோக்கமே படித்த இந்தியர்களுக்கு இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஆங்கிலேயர்களுக்கு இணையாக உயர்பதவி வேலைகளை வாங்கித் தருவது தான். ஆனால் நம்ம துரைமார்கள் 'எஸ்மா' 'டெஸ்மா' வெல்லாம் போட்டு இவர்களை வெளுத்துக் கட்டியதால், லைட்டா கொள்கையை சேஞ்ச் பண்ணிக்கிட்டு, ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் என்பதை தங்கள் கொள்கையாக வைத்துக் கொண்டது! (ஆஹ... கொள்கைன்னு எல்லாம் எதையாவது புடிச்சிகிட்டு தொங்கறது இல்லைன்னு அப்பவே முடிவு பண்ணிட்டாங்க போல!)

அதேமாதிரி, 1907 லயே கோஷ்டி அரசியலிலும் பின்னி பெடலெடுத்திருக்காங்க நம்ம காங்கிரஸ்காரங்க! அதிரடி குரூப்புக்கு பாலகங்காதர திலகரும், அமைதிப்படைக்கு கோபாலகிருஷ்ண கோகலேயும் ஆள் சேர்த்து விளையாடியிருக்காங்க! நம்ம தங்கபாலு, இளங்கோவனுக்கெல்லாம் அவங்ககிட்ட தான் காப்பி ரைட் இருக்கு!

அடுத்ததா 1915 வாக்கில் ஆங்கிலேயர்கள்ட்ட இருந்து நம் நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் என்ற ஒரே ஒரு இலக்குடன் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவில் களம் காண வந்திறங்கிய காந்திஜிக்கு, தன்னுடைய போராட்டங்களை உடனடியாக செயல்படுத்த, நாடு தழுவிய கிளை அமைப்புகளையும், தொண்டர்களையும் கொண்ட ஒரு அமைப்பாக காங்கிரஸ் தென்படவே, அதில் தன்னை இணைத்துக் கொண்டு போரிட ஆரம்பித்தார்.
1920 க்குப் பிறகு அவர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு வடிவமைத்த போராட்டங்கள் தான், அதுவரையிலும் சுகமாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்து ஒவ்வொரு வெள்ளைக்காரனுக்கும், கீழே மிளகாயைச் செறுகி பற்றவைத்தது போல் ஆகிவிட்டது. அடுத்த பத்து ஆண்டுகளிலேயே இனி இங்கிருந்தால் மரியாதையில்லை, வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவெடுத்துவிட்ட அவர்கள், இவர்களை அப்படியே விட்டுச் சென்றால் உலகையே ஆட்டிப் படைத்துவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்டனர். அதனால் தான் இதை அமைதியற்ற பிராந்தியமாக எப்பொழுதும் வைத்திருக்க வேண்டி, சிலபல உள்ளடி வேலைகளைச் செய்வதற்கு அடுத்த 15 வருடங்கள் அவர்களுக்கு தேவைப்பட்டது!

அதனால் தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எத்தனையோ பேர் தங்கள் உயிர் முதல் எண்ணற்ற தியாகங்களைச் செய்திருந்தாலும், வெள்ளையர்களை வெளியேறத் தூண்டிய அதி தீவிரமான, மக்கள் எழுச்சியுடன் கூடிய வித்தியாசமான போராட்டங்களை முன்னெடுத்ததன் மூலம், "இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்தவர் மஹாத்மா காந்தி" என்று இன்றுவரையிலும் மக்களால் போற்றப்படும் உன்னத இடத்தைப் பிடித்திருக்கிறார்!

அப்படிப்பட்ட தேசத்தந்தை மஹாத்மா காந்தியின் பெயர், ஒரு மந்திரச்சொல்லாக நேருவின் மகள் இந்திராவின் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்ட பிறகு, விமானஓட்டியாக இருந்தாலும், இத்தாலிய மருமகளானாலும், ஸ்பானிஷ் மருமகனானாலும் எளிதாக பிரதமராகும் வாய்ப்போ அல்லது அதற்கு நிகரான அதிகாரமோ, மிக இலகுவாக இந்திய மக்களால் அவர்களுக்கு சாத்தியமாகிவிடுகிறது!

அவர்களுக்கு, காந்திஜியின் பிரதான ஆயுதமான "அஹிம்சை" வழியில் நாட்டை நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. பதவியை தக்கவைக்க அவசரநிலை பிரகடனப்படுத்தி அடக்குமுறை ஆட்சியை சாதாரணமாகச் செய்வார்கள். தம் நாட்டின் ஒரு பிரிவு குடிமக்களின் வம்சாவளியினர் அண்டை நாட்டில் சிறுபான்மை சமூகம் என்ற காரணத்தால் அடிமைப்படுத்தப்படும் போது, அந்த ஆட்சியாளர்களிடம், ஏன் அப்படிச் செய்கிறாய் என்று தட்டிக் கேட்டு(!), "இந்தா பிடி ஆயுதம், அவர்கள் எத்தனை லட்சம் பேர் என்றாலும், கொன்று கூறுபோடு!!" என்றும் சொல்வார்கள்!! -(
ஆனால் தங்கள் பெயருக்குப் பின்னால் காந்தி என்ற பெயரை மட்டும் மறக்காமல் போட்டுக் கொள்வார்கள்!
19 ஆம் நூற்றண்டில் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் உமேஷ் சந்திர பானர்ஜி என்ற ஒரு பெங்காலித் தொண்டர். ஆனால் இன்றோ இத்தாலி காந்தி அமெரிக்க சிகிச்சைக்கு செல்லும் போது, சில கழிசடைகளும், கற்றுக் குட்டிகளும் தான் காங்கிரஸைக் காப்பாற்றப் போகும் குழுவில் இடம்பெற்றிருக்கின்றார்கள். ஆனால் இன்றைய நிலையில் அங்கு எல்லா தகுதிகளுடனும் மூத்த காந்தியவாதியான பிரணாப் முகர்ஜி என்ற வங்க தேசத்தவருக்கு அக்குழுவில் ஒரு உறுப்பினர் அடையாளம் கூட வழங்கப்படவில்லை!!

இவ்வளவு ஏன்? இந்த அல்ட்ரா மாடர்ன் காந்தி குடும்பத்தில் எவரும் பிரதமராக முடியாத சூழ்நிலை வந்தபொழுது, எந்தவொரு காங்கிரஸ் காரனும் கிடைக்காமல் ஒரு முன்னால் நிதித்துறை அதிகாரிக்கே இரண்டு முறையாக அந்த வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது! அவரும் எந்தத் தவறு நடந்தாலும் நான் வெறும் சைனிங் அத்தாரிட்டி மட்டுமே, டெஸிஷன் எடுப்பதெல்லாம் மேனேஜ்மெண்ட் தான் என்கிற ரீதியிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்!

இவர்களது ஆட்சி பற்றியும் அதன் ஊழல்கள் பற்றியும் சொல்ல வேண்டுமானால் அரைத்த மாவையே அறைப்பது போல் சலிப்பு ஏற்பட்டுவிடும். உடனே ஜனதா கட்சியினரும், பிஜேபி யினரும் ரொம்ப யோக்கியமா ஆட்சி நடத்தினாங்களா? அது இதுன்னு வந்திடுவாங்க. அதனால இந்த கட்சியைப் பற்றி மட்டும், அதன் எதிர்காலத்தை மட்டும் நாம் கொஞ்சம் கூர்ந்து பார்த்தோமானால், வெளிச்சம் எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை என்பது தான் நிதர்சனம்!

கடந்த 15 வருடங்களாக மத்திய ஆட்சியை நிர்ணயம் செய்து கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தில், மூன்று மாதங்களுக்கு முன்பு ஒருவர் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்கிறார்... இன்று வரையிலும் புதிய தலைவரை நியமிக்கக் கூட முடியாமல் கட்சி கோமா நிலையில் இருக்கிறது!! இங்குள்ள பல கோஷ்டிகளும் தங்கள் தங்கள் தலைவர்கள் தலைமையில் தினம் தினம் வேடிக்கை விநோத சண்டைக்காட்சிகளை மக்களுக்கு மாநிலத்தலைநகரின் மையப்பகுதியில் அரங்கேற்றிக் காட்டிக் கொண்டிருக்கின்றன!

அதில் ஒரு கோஷ்டித் தலைவர், ராஜினாமா தலைவரை நில அபகரிப்பு வழக்கில் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று வேறு மிரட்டுகிறார்!! இப்படியெல்லாம் பேசும் அவர் மனநோயாளியா? அல்லது இதையெல்லாம் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொது மக்கள் எல்லோரும் பைத்தியங்கள், என்ன கூத்தடித்தாலும் நமக்கு ஓட்டுப்போட்டு பதவியில் அமர்த்திவிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் அதி புத்திசாலியா? என்று புரியவில்லை!

இப்படி எல்லா முக்கிய மாநிலங்களிலும் கரையான் புற்றுகளாய் வளர்ந்து கொண்டிருக்கும் கோஷ்டிச் சண்டைகளை அடிக்கடி தட்டிச் சுத்தம் கூட செய்யாமல் அப்படியே விட்டுவிட்டது தான் இன்றைக்கு காங்கிரஸ் என்னும் ஆலகால விருட்சத்தின் ஆணி வேரையே பெறுமளவில் அரித்துவிட்டது. இந்த நிலையில் தான், இதுவரையிலும் விழுதாக இருந்து மரத்தை தாங்கிப்பிடித்திருந்த மேலிருக்கும் (டெல்லியில்) கட்சி அமைப்பும் தள்ளாட்டம் கண்டிருக்கிறது.

இந்த அ.மா. காந்தி குடும்பத்தைத் தவிர வேறொருவர் அந்த இடத்திற்கு வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இப்பொழுது செய்யப்பட்டிருக்கும் "புதிய ஏற்பாடு!" நிச்சயமாக கட்சியை தாங்கிக்கொண்டிருக்கும் விழுதுகளை துவளச் செய்துவிடும்! இதில் எள்ளளவும் சந்தேகமில்லை!!

ஏனோ மஹாத்மா காந்தி சொன்ன வாசகங்கள் தான் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது. "பல்வேறு கருத்துக்கள் கொண்டோர் ஒன்றிணைந்து இந்த காங்கிரஸ் பேரியக்கத்தில் ஒற்றுமையுடன் செயல்படுவதற்கான காரணம் ஒன்று தான். அது தான் "சுதந்திரம்". எப்பொழுது அந்த சுதந்திரம் நமக்கு கிடைக்கிறதோ, அத்துடன் இந்த காங்கிரஸ் பேரியக்கத்தையும் கலைத்துவிட வேண்டும்" என்று!

பாரிஸ்டர் பட்டம், பகட்டான வெளிநாட்டு வாழ்க்கை, இத்தியாதிகளையெல்லாம் துறந்து, ஒற்றை ஆடையுடன், மக்களோடு மக்களாக, கடைசிவரை தொடர்ந்து சேவை செய்து, மதக்கலவரங்களை தடுக்கும் அடுத்தகட்ட போராட்டத்தில் முதல்பலியாக தன்னையே கொடுத்துக் கொண்ட ஒரு மஹான் சொன்ன வார்த்தைகள் என்றும் பொய்த்துப் போகாது!! உண்மையில் சொல்லப்போனால் அந்த "ஸ்தாபன காங்கிரஸ்" என்பது அறுபதுகளின் இறுதியோடு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால் அந்த உரிமையை தனதாக்கிக் கொண்டு நேற்றுவரையிலும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த "இத்தாலி காங்கிரஸ்" மத்திய தலைமைக்கே தகுதியான ஆளில்லாமல் ஐசியூ வில் இருக்கிறது!! இதற்கும் ஒரு முடிவு ஏற்பட்டால் தான் இந்தியாவில் புது சிந்தனையோடும், சித்தாந்தங்களோடும் கூடிய உன்னத தலைவர்களைக் கொண்ட நல்லதான சில புதிய கட்சிகள் தோன்றி, இந்தியாவுக்கு ஒரு நல்ல விடிவுகாலம் கிடைக்கும்!!!

நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி தெரிஞ்சுகொள்வது,

நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி தெரிஞ்சுகொள்வது, கடைகாரர் எல்லா போன்களும்
தரமானதுதான்னு சொல்லுவார். உங்கள் நோக்கியா போனின் தரத்தை
எளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06# டயல் செய்ங்க.சில எண்கள் வரும். இதை "IMEA" நம்பர் என்று சொல்லுவாங்க.((International Mobile Equipment Identity)(கேள்விபட்டுருபீங்க).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.

Phone serial no. x x x x x x ? ? z z z z z z z
(XXXXXX - Approval code,ZZZZZZZ - Serial number)




ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம்


0 2 அல்லது 2 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு EMIRATES ,தரம் : மோசம்

0 8 அல்லது 8 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு GERMANY , தரம் : சுமார்

0 1 அல்லது 1 0 என்றால் அந்த போன் தயாரான நாடு FINLAND ,தரம் : நல்ல தரம்


0 4 என்றால் அந்த போன் தயாரான நாடு CHINA . தரம் : நல்ல தரம்

( சீனா என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய சாப்ட்வேர் வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)



0 3 என்றால் அந்த போன் தயாரான நாடு KOREA . தரம் : நல்ல தரம்


0 5 என்றால் அந்த போன் தயாரான நாடு BRAZIL . தரம் : சுமார்


0 0 என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது. தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.


1 3 என்றால் அந்த போன் தயாரான நாடு AZERBAIJAN ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.


இது தவிர வேறு எண்கள் இருந்தால் இங்கு சென்று IMEA NUMBER CHECK சரி பார்த்து கொள்ளுங்கள்.


அதேபோல் நீங்கள் *#06# டயல் செய்தவுடன் வரும் எண்கள்தான்
Battery ளையும் இருக்கிறதா என்று சரி பார்த்துகொள்ளுங்கள். இனிமேல் NOKIA MOBILE வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க. பதிவு பயனுள்ளதாக இருந்துருக்கும் என நம்புகிறேன்.


அமெரிக்கா வாங்கும் அடி - நமக்கும் ஆப்பாகுமா?

இது ஒரு அமெரிக்காவில் உள்ள ஒரு நண்பர் எழுதிய பதிவு
=====================================================================================
அமெரிக்கக் கனவான்கள் மீண்டும் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு முந்தைய இரு ரிசசன்களிலும் (2001. 2008) ஆப்பு வாங்கி, வேலையை இழந்தவன் என்பதால், இப்போதைய நடப்புகளை உற்று கவனித்து வருகிறேன்.

2007ல் பங்குச்சந்தை பல புதிய உச்சங்களைப் பெற்று மேல்நோக்கிச் சென்றுகொண்டே இருந்தது. அப்போது மெதுவாக நிதி நிறுவனங்களில் பண நெருக்கடி, கொடுத்த கடன் திரும்பவில்லை என்று முணுமுணுத்தார்கள். தொடர்ந்து வேலையிழப்பு விகிதம் அதிகரிக்கிறதே என்று சில பொருளாதார பத்தி எழுத்தாளர்கள் புருவம் சுருக்கினர். ’நாம் ஒருவேளை ரிசசனை நெருங்கிக்கொண்டிருக்கிறோமோ..ச்சே..ச்சே..இருக்காது. நாம் இருப்பது வலிமையான அமெரிக்கா ஆச்சே’ என்று மெதுவாக விஷயத்தை ஓப்பன் செய்தனர். அடுத்து 2008 ஜனவரியில் ஸ்டாக் மார்க்கெட்டில் அடி விழுந்ததும் ‘வந்தாச்சு..வந்தாச்சு..ரிசசன் வந்தாச்சு..இப்போ என்ன செய்யணும்னா..’ என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார்கள்.
இப்போது நம் கவலையெல்லாம், அதே வரிசையில் விஷயங்கள் நடக்கத் தொடங்கியிருப்பது தான். பேங்குகள் மூடப்படும் விகிதம் 9% அதிகரித்திருப்பதாக ஒரு அறிக்கை சொல்கிறது. வேலையிழப்பு விகிதம் சென்ற மாதத்தை விட 66% அதிகரித்திருப்பதாக மற்றொரு செய்தி சொல்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தின் மிக நெருக்கடியான காலகட்டம் என்று பொருளாதார வல்லுநர்கள் அலறுகிறார்கள்.

இந்த பொருளாதார மேதைகளும், கம்பெனிகளும் வெளியில் சொல்லாத விஷயம் ஒன்று உண்டு. 2008ல் ஆரம்பித்த ரிசசன் 2010ல் முடிந்ததாக வெளியில் சொல்லப்பட்டாலும் அது உண்மை அல்ல. அதன் தொடர்ச்சியே இப்போது நாம் காண்பது. (அதற்கு உதாரணமாக சிங்கப்பூரில் இன்றும் சூடு பிடிக்காத, வங்கி நிதி பெருமளவில் தேவைப்படும் ஷிப் பில்டிங் பிசினஸ்) அப்போது ரிசசன் பிரச்சினையை அணைக்க கரன்சியை பிரிண்ட் செய்து அப்போதைக்கு விஷயத்தை மூடியது அமெரிக்கா. அப்போதே பலரும் ‘இது சரியான வழி அல்ல’ என்று சொன்னார்கள். ஆனாலும் அப்போது அமெரிக்காவிற்கு வேறு வழியில்லை. அதன்பிறகு அதை மறந்து போனார்கள். அவர்களுக்கு என்ன தான் பிரச்சினை?

அதற்கு அண்ணன் ரொனால்டு ரீகன் காட்டிய வழியே அடிப்படைக் காரணம். ’ஒரு நாடு எவ்வளவு கரன்சியை அச்சிடுகிறதோ, அதற்கு இணையான தங்கத்தை தன் ரிசர்வ் பேங்கில் ஈடாக வைத்திருக்க வேண்டும்’ என்ற கரன்சி மதிப்பை நிர்ணயிக்கும் பொதுவிதியை ரீகன் தூக்கிக்கடாசினார். தேவைப்படும்போது செனட் ஒப்புதலுடன் பிரிண்ட் செய்துகொள்ளலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்தார். . இதன் மூலம் ஏராளமான ’பேப்பர்’ கரன்சி பல வருடங்களாக பிரிண்ட் செய்யப்பட்டது.
தன் நாட்டாமைத்தனத்தால் பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்குவதற்கான பொது கரன்சியாக டாலரை முன்னிறுத்தியது அமெரிக்கா. அந்த வகையில் வெறும் பேப்பரை எல்லா நாடுகளுக்கும் கரன்சி என்ற பெயரில் ஏற்றுமதி செய்தது. இப்போது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் அந்த பேப்பரை கோடிக்கணக்கில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. அதை அமெரிக்காவிடம் திரும்பக் கொடுத்து, அதற்கு ஈடான தங்கள் கரன்சியை கேட்டாலே போதும், நம் நிதிநிறுவன அதிபர்கள் போல் அமெரிக்கா ஓட வேண்டியிருக்கும்.

உற்பத்தித்துறை சுத்தமாக வீழ்ந்து போன நிலையில், ;நாடு முன்னேற செலவளி’ என்ற மந்திரத்துடன் அமெரிக்கப் பொருஆதாரம் தள்ளாடி நடைபோடுகிறது. கொஞ்ச வருடங்களுக்கு ஒருமுறை பணத்தட்டுப்பாடு வருவதும், அச்சடித்து அதை சமாளிப்பதுமாக ஓட்டிய அமெரிக்கா, இப்போது நெருக்கடியின் உச்சத்தை எட்டியிருப்பதாகவே தெரிகின்றது. மீண்டும் அச்சடிக்க செனட் ஒப்புதல் வாங்கியாகிவிட்டது. ’ஆனால் இப்படியே எத்தனை நாள்?’ என்ற பயமே இப்போது அனைவரையும் பிடித்து ஆட்டுகிறது.

தற்போதைய நிலையில் தொழில் துறையில் அடுத்து என்ன நடக்கும் என்பது நாம் அறிந்ததே..நம் கம்பெனியை தூக்கி நிறுத்துவதற்கென்றே இருக்கும் மேனேஜ்மெண்ட் புண்ணியவான்கள் எப்படியெல்லாம் இதை உபயோகித்து லாபத்தை கூட்டலாம் என்று பார்ப்பார்கள். போனஸ், இன்க்ரிமெண்ட் பற்றி பேசவே மாட்டார்கள். ஒருத்தன் தலையில் மூன்று ஆள் வேலையை ஏற்றி, புதிதாக ஆள் எடுப்பதை தவிர்ப்பார்கள். இதுவரை கம்பெனி லாபத்தில் இயங்குவதையும், அதனால் சேர்ந்துள்ள உபரிநிதி பற்றியும் பேசுவதை விடுத்து, ‘கம்பெனியைக் காப்பாற்ற நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்று சொல்லி மேலும் கசக்கிப் பிழிய எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள். நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பதை இறுக்கினால், அவற்றைச் சார்ந்த புராஜக்ட்கள் நிறுத்தப்படும். தொடர்ந்து ஐடி போன்ற சேவைத் துறைகளும் அடி வாங்கும்.

பொதுவாக எங்கள் துறையில் 3டி மாடல் செய்ய ஒருவர், அதில் இருந்து 2டி டிராயிங்(ஐஸோ) எடுக்க இன்னொருவர். அதில் ஸ்ட்ரெஸ் அனலிஸ் செய்ய இன்னொருவர். எல்லாவற்றையும் செக் பண்ண குவாலிட்டி ஆள்/எஞ்சினியர் ஒருவர் என்றே இருப்பர். ஆனால் சென்ற 2008 ரிசசனை அடுத்து வேலை தேடியபோது, அனைத்துக் கம்பெனிகளும் சொல்லி வைத்தாற்போல் மேற்சொன்ன நான்கு வேலையும் தெரியுமா என்று கேட்டு விரட்டி அடித்தார்கள்.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது நம் வேலையை மட்டுமல்லாது பிறரது வேலைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வதும் நம் தகுதியை மேலும் வளர்த்துக் கொள்வதுமே. அதுவே நம்மை இனிவரும் காலங்களில் காப்பாற்றும். ‘இது என் வேலையல்ல’ என்று எதையும் ஒதுக்காமல் அதையும் தெரிந்து கொள்வோம்!

மேலும், பாஸ்-ஐ கொஞ்சநாளைக்கு முறைக்காமல் குத்து மார்னிங் சொல்வதும் நலம் பயக்கும்!

தி.மு.க.,வினர் மீது, சொத்துக் குவிப்பு வழக்கு

நில மோசடி வழக்குகளையடுத்து, தி.மு.க.,வினர் மீது, சொத்துக் குவிப்பு வழக்குகளைப் பதிவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்குள் இந்த நடவடிக்கை துவங்கும். அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதும், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், "மாஜி' அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் நில மோசடி மற்றும் இடம், கடை ஆக்கிரமிப்பு வழக்குகளில், தொடர்ந்து கைதாகி வருகின்றனர். சிலர் குண்டர் சட்டத்திலும் கைதாகியுள்ளனர். நில மோசடி வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நில மோசடி வழக்குகளைக் கண்டித்து, கோர்ட்டில் தி.மு.க., வழக்கு தொடர்ந்தது. பெரும்பாலான வழக்குகளில், தி.மு.க., நிர்வாகிகள் எளிதில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக, அரசுக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.,வினரை அடக்கி வைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, தி.மு.க., நிர்வாகிகள் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, முக்கிய தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பினாமிகளின் சொத்து விவரங்களை உளவுத்துறை சேகரித்து வருகிறது. மேலும், இந்தச் சொத்துகள் வருமானத்தில் வாங்கியதா அல்லது மிரட்டி வாங்கப்பட்டதா என விசாரிக்கின்றனர். சொத்துகளை வாங்க, உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலைத் தயார் செய்யும்படி, அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, சொத்துக் குவிப்பு வழக்குகளில், மேலும் பல தி.மு.க., நிர்வாகிகள் கைதாக வாய்ப்புள்ளது.

Thursday, August 18, 2011

தற்போது மதுரையை கலக்கும் ஜாதித் தலைவர்கள்

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை பொதுவாக ஜாதிக் கட்சித் தலைவர்கள் என்றாலே அது முக்குலத்தோர் அல்லது தலித்களை முன்னிறுத்தியே இருக்கும். ஒவ்வொரு தேவர் ஜெயந்தியின் போதும் சுவர்கள் மற்றும் பிளக்ஸ் மூலம் முக்குலத்தோரில் யார் லைம் லைட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். சேதுராமன் (மீனாட்சி மிஷன்), சேதுராமத் தேவர், வாண்டையார், முருகன்ஜி, பி டி அரச குமார் என தலைவர்கள் மாறிக் கொண்டேயிருப்பார்கள். தலித்களில் ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன், சாத்தை பாக்யராஜ், கிருஷ்ணசாமி, முருக வேல் ராஜன், திருமா வளவன் என தலைவர்கள் மாறிக் கொண்டேயிருப்பார்கள்.

ஆனால் பொதுவாக மற்ற சமுதாயங்களில் இருந்து குறிப்பிட்ட நபரை முன்னிறுத்தி ஆராதிப்பது குறைவாகவே இருக்கும். கரிக்கோல் ராஜ், சவுந்திர பாண்டியன், பாபு நாயுடு என பெயர்கள் அடிபடுமே தவிர தொடர் பிரச்சாரம் குறைவாகவே இருக்கும்.
ஆனால் இப்போது இருவர் அடிக்கடி போஸ்டர்களிலும், பேனர்களிலும் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தனியரசு (கொங்கு வேளாள இளைஞர் பேரவை, மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்), மற்றொருவர் பெரிஸ் மகேந்திரவேல் (நாடார் மஹாஜன சங்கம்).

மதுரை மாவட்டத்தில் இதுவரை கொங்கு வேளாளர்கள் மிக ஆக்டிவ்வாக அரசியலில் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டதில்லை. இப்போது தனியரசின் மூலம் ஒருங்கிணைக்கப் படுகிறார்கள். “எங்களின் தனி அரசே” போன்ற பஞ்ச் வசனங்களுடன் திருமணங்களுக்கும், கோயில் விழாக்களுக்கும் பிளக்ஸ், போஸ்டர்கள் அடிக்கப்படுகின்றன. அவர் மாநிலம் தழுவிய அரசியல் சக்தியாக மாற நினைக்கிறாரோ என்னவோ?

மற்றொருவரான பெரிஸ் மகேந்திரவேல், தொழிலதிபர். உசிலம்பட்டியில் இருக்கும் பெரிஸ் பிஸ்கட் தொழிற்சாலை இவருடைய குடும்பத்தைச் சார்ந்த்துதான். முதன் முதலில் மடிட்சியாவின் (மதுரை மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு) உசிலை வட்டார இணைச் செயலாளராக இருந்தார். மெதுவாக வளர்ச்சி பெற்று அதில் முக்கியப் பொறுப்புக்கு வந்தார். பின்னர் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நிர்வாகக்குழு பொறுப்பு, பின்னர் செயலாளர் என அதிலும் முக்கியப் பொறுப்பு. எனவே ஓரளவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்புள்ள பதவிகளில் இவர் இருக்கிறார்.
தற்போது இவரை வாழ்த்தியும் மதுரையில் பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அரசியல் ஆசை இவருக்கும் துளிர் விடுவதையே இது காட்டுகிறது.

ரோஜாவே டீனேஜை தாண்டிவிட்டாள் என்றால், என் தலைமுறை ‘இளைஞர்’ என்கிற கவுரவத்தை இழந்துவருகிறது என்றே பொருள்.

விளையாட்டுத்தனமாக இருபது ஆண்டுகள் ஓடிவிட்டதை நினைக்கும்போது கவலையாகவும், அச்சமாகவும் இருக்கிறது. மயிருதிர்ந்துப்போன முன் தலையை கண்ணாடி முன்பாக தடவிப் பார்க்கிறேன். ரோஜாவே டீனேஜை தாண்டிவிட்டாள் என்றால், என் தலைமுறை ‘இளைஞர்’ என்கிற கவுரவத்தை இழந்துவருகிறது என்றே பொருள்.

1992 – இந்த வருடத்தை யார் மறந்தாலும் தமிழ் சினிமா மறக்காது. அப்போதெல்லாம் கார்த்திக்தான் அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நாயகன். 91 தீபாவளிக்கு தளபதியோடு, அமரன் போட்டி போடும் என்றெல்லாம் பெருத்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஏனெனில் ‘ராக்கம்மா கையத் தட்டு’வை விட, அமரனின் ‘வெத்தலைப் போட்ட ஷோக்குலே’ ஆடியோ சூப்பர் டூப்பர் ஹிட். ஏனோ அமரன் தாமதமாகி 92 பொங்கலுக்கு வெளியாகி மொக்கை ஆனது. தொடர்ந்து வெளியான கார்த்திக்-பாரதிராஜா காம்பினேஷனில் நாடோடித் தென்றலுக்கும் டவுசர் அவிழ்ந்தது. இன்று உலகத் தமிழர்களிடையே பல்வேறு காரணங்களால் பிரபலமான ரஞ்சிதாவின் அறிமுகம் நிகழ்ந்த படமிது. பிற்பாடு என்.கே.விஸ்வநாதனின் நாடோடிப் பாட்டுக்காரன் வெளியாகி, கார்த்திக்கின் மானத்தை வசூல்ரீதியாக காப்பாற்றியது.

மன்னன், சின்னக் கவுண்டர் படங்கள் வசூலில் சரித்திரம் படைத்தது. கடலோரக் கவிதைகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் சோலோவாக கோலோச்சிக் கொண்டிருந்த சத்யராஜூக்கு பெரிய லெட்-டவுன் இந்த ஆண்டில். ஆனால் அடுத்த ஆண்டே வால்டேர் வேற்றிவேல் மூலமாக தனக்கான மாஸ்டர் பீஸை அடையாளப் படுத்திக் கொண்டார்.

சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை வசூல்ரீதியாக மட்டுமின்றி, அரசியல்ரீதியாகவும் சூட்டைக் கிளப்பியது. இன்று புரட்சித்தளபதி, சின்னத் தளபதி, செவன் ஸ்டார், ராக்கிங் ஸ்டார், லொட்டு, லொசுக்கு ஸ்டார்களுக்கெல்லாம் டைட்டிலில் விஷ்க் விஷ்க் சவுண்ட் போட்டு அலப்பறை செய்வதற்கு அண்ணாமலையே முன்னோடி.

மலையாள இயக்குனர் பரதனின் ‘ஆவாரம்பூ’ சூப்பர்ஹிட் பாடல்களோடு வெளிவந்து மண்ணைக் கவ்வியது. ஆனாலும் தீபாவளிக்கு அவரது இயக்கத்தில் வெளியான ‘தேவர் மகன்’ இன்றளவும் எவர்க்ரீன் ஹிட். முந்தைய தீபாவளிக்கு குணாவில் மாஸ் இழந்த கமல் ‘சிங்காரவேலன்’ மூலமாக மீண்டெழுந்தார். தேவர் மகனில் சிவாஜிக்கு தேசிய விருது ஜஸ்ட் மிஸ். அதையும் கமலே தட்டிக் கொண்டார்.

டாக்டர் கேப்டன் விஜயகாந்தின் அட்டகாச மேற்கத்திய பாணி நடனத்தில் வெளிவந்த ‘பரதன்’ குறிப்பிடத்தக்க ஒரு படம். பி.சி.ஸ்ரீராம் இயக்கிய மீரா (விக்ரம் அறிமுகம் என்று சொல்வார்கள். ஆனால் அவர் 89லேயே ஸ்ரீதரின் ‘தந்துவிட்டேன் என்னை’யில் அறிமுகமாகி விட்டார்) மரண அடி வாங்கியது. முரளி நடிப்பில் ராஜ்கபூர் இயக்கிய ‘சின்னப்பசங்க நாங்க’ சர்ப்ரைஸ் ஹிட். முந்தைய ஆண்டில் சாதனைப்படமான சின்னத்தம்பியை கொடுத்த பிரபு-வாசு காம்பினேஷன் ‘செந்தமிழ்ப்பாட்டு’ படம் மயிரிழையில் தப்பித்தது. 91ல் என் ராசாவின் மனசிலே மூலம் ஹீரோவாக அறிமுகமான ராஜ்கிரண், அடுத்த வெள்ளிவிழாப் படமான அரண்மனைக் கிளியை தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியிட்டார். இன்னும் நிறைய படங்கள். நினைவில் இருந்தவற்றை குறிப்பிட்டிருக்கிறேன். 92ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் வசூல் ஆண்டு.

பரபரப்பான சம்பவங்களை வைத்து படமெடுத்துக் கொண்டிருந்த ஆர்.கே.செல்வமணி, முதன்முறையாக ஒரு காதல் படமெடுத்து வெள்ளிவிழா கண்டார். இன்று ஆந்திர அரசியலின் சூறாவளியான ரோஜா மலர்ந்தது அப்போதுதான்தான்.

1992, ஆகஸ்ட் 15. அப்போதெல்லாம் இந்தியா, மூவர்ணக்கொடி என்று கேட்டாலே ரட்சகன் நாகார்ஜூனா மாதிரி நரம்புகள் புடைக்கும். தேசிய நீரோட்டத்தில் கலந்து, பகுத்தறிவு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போயிருந்த பருவமது. பள்ளியில் ஒருக்கா, தெருமுனையில் மறுக்கா கொடியேற்றிவிட்டு, தேசக்கொடிக்கு மரியாதை செலுத்தினோம். மடிப்பாக்கத்தில் அப்போது மொத்தமாக மூன்றே மூன்று காங்கிரஸ்காரர்கள் இருந்ததாக நினைவு. ஒருவர் தலைவர். மற்றவர் செயலாளர். மீதியிருந்தவர் பொருளாளர். அதில் ஒருவர் (என்னுடைய நாலுவிட்ட மாமா. ஐந்து விட்ட அக்காவை அவருக்கு கட்டிக் கொடுத்திருந்தோம்) சேவாதள சீருடையில் – யாருமே இல்லாத டீக்கடையில் டீ ஆற்றுவது மாதிரி – ஒரு கம்பத்தை அவரே நட்டு, ‘பாரத்மாதாகீ ஜே’ சொல்லி, அவரே கொடியேற்றி, அவரே கைத்தட்டி, ஒவ்வொரு கதவாக தட்டி சாக்லேட் கொடுத்து சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்.

டி.டி. தொலைக்காட்சியில் காலை பதினோரு மணியளவில் சிறப்பு ஒலியும், ஒளியும். முதல் பாட்டு ‘அண்ணாமலை அண்ணாமலை ஆசை வெச்சேன் எண்ணாமலே’ என்பதாக நினைவு. இன்றைய காஞ்சனாவான சரத்குமார் ஃபுல் ஹீரோவாக நடித்திருந்த ‘சூரியன்’ அன்றுதான் வெளியானது. செம்பருத்தியில் அறிமுகமான ரோஜாவின் இரண்டாவது படம். பவித்ரன் இயக்கம். இணை இயக்கம் ஷங்கர். ‘லாலாக்கு டோல் டப்பிமா’ பாட்டு பட்டையைக் கிளப்பியது. இந்தப் பாடல் ஒரு விபத்தாக மாறி, அடுத்தடுத்து வால்டர் வெற்றிவேல், ஜெண்டில்மேன் என்று பல படங்களில் பிரபுதேவா அயிட்டம் டேன்ஸராக பலமாக உருமாறி, இந்துவில் கதாநாயகனாகி, காதலனில் மாஸ் ஹீரோவாகி.. அது ஒரு தனி வரலாறு.

‘ஒளியும், ஒலியும்’ முடியும் நேரத்தில் வந்தது அந்தப் பாட்டு. மணிரத்னத்துக்கு முதன்முறையாக இளையராஜா தவிர்த்த புது இசையமைப்பாளர். கமல், ரஜினி, கார்த்திக், பிரபு என்று மாஸ் ஹீரோக்களை விட்டு விட்டு, தளபதியில் துண்டு கேரக்டரில் நடித்த அரவிந்தசாமியை ஹீரோவாக்கியிருந்தார். அதற்கு முன்பாக மதுபாலாவும் அவ்வளவு பிரபலமில்லை. அழகனில் மூன்றாவது, நாலாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

எங்கள் வீட்டருகில் பானு அக்கா என்றொருவர் இருந்தார். பதினெட்டு, பத்தொன்பது வயதிருக்கும். பரதநாட்டியம் கற்றுக் கொண்டு நிகழ்ச்சிகளில் ஆடிக்கொண்டிருந்தார். ஒருமுறை அவரது நாட்டிய நிகழ்ச்சிக்கு போகும்போது, கூட வேனில் இன்னொரு சூப்பர் ஃபிகரும் இருந்தார். அவர்தான் மதுபாலா. பானுவும், மதுபாலாவும் ஒரே கட்டத்திலேயே சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார்கள். குடும்ப சினிமா பின்னணி இருந்ததால் மதுபாலா சுலபமாக நடிகையாகிவிட்டார். பானு என்ன ஆனாரோ தெரியவில்லை.

அதே ஆண்டில் ‘சித்திரைப் பூக்கள்’ படம் மூலமாக மடிப்பாக்கத்தில் இருந்து இன்னொரு ஹீரோயினும் அறிமுகமானார். அவர் வினோதினி. இந்து படத்தின் ‘எப்படி, எப்படி சமைஞ்சது எப்படி?’ பாட்டில் கெட்ட ஆட்டம் போட்டவரும் மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர்தான். சாரதா டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் என்னுடைய சீனியர். அடக்க ஒடுக்கமாக இன்ஸ்டிட்யூக்கு வந்து சென்றுக் கொண்டிருந்தவரை, ஸ்க்ரீனில் வேறுமாதிரி பார்த்தபோது கிடைத்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமில்லை. இதே ஆண்டு என் பள்ளித்தோழன் ஆனந்தராஜின் அண்ணன் கணேசராஜூ ’சின்னத்தாயி’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். மடிப்பாக்கமே சினிமாப்பாக்கமாக மாறிவிட்ட ஆண்டு அது. இப்போதும் கூட பழம் பெரும் நடிகைகள், நடிகர்கள், டெக்னீஷியன்கள் நிறைய பேர் இந்த ஊரில் வசிக்கிறார்கள்.

ஓக்கே, மீண்டும் ரோஜாவுக்கு வருவோம்.

வேனில் பார்த்த அதே மதுபாலா ‘சின்ன சின்ன ஆசை’ என்று டிவியில் பாடுவதைப் பார்த்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. முதல் தடவை கேட்டபோதே வசீகரிக்கும் பாடல்கள் அரிதானவை. சின்ன சின்ன ஆசை அந்தவகை. குறிப்பாக உதய சூரியன் வேகமாக மேலெழும் பாடலின் ஆரம்பக் காட்சியில் வரும் இசை. ‘ரோஜா’வைப் பார்த்தேவிட வேண்டும் என்கிற ஆசை, பேராசையாய் கிளம்பியது.

மறுநாள் வகுப்பில் கூடி பேசினோம். எல்லோரையுமே சூரியனை விட ரோஜா கவர்ந்திருந்தாள். ஆலந்தூர் பாலாஜி என்பவனுக்கு தேவி தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் ஆள் யாரையோ தெரிந்திருந்தது. அவர் மூலமாக மொத்தமாக இருபது டிக்கெட்டுகள் ரிசர்வ் செய்தான் பாலாஜி. சொந்தக் காசை போட்டு டிக்கெட் வாங்கிவிட்டு, பிற்பாடு எங்களிடம் வசூல் செய்ய நாய்படாத பாடு பட்ட பாலாஜியை இப்போது நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

அதற்கு முன்பாக ஸ்கூல் கட் அடித்துவிட்டு பார்த்திருந்த ஒரே படம் செம்பருத்தி (காசி தியேட்டரில்). தேவிக்கு பஸ்ஸில் கூட்டமாக போகும்போது கொஞ்சம் பயமாகவே இருந்தது. யாராவது தெரிந்தவர் பார்த்துத் தொலைத்தால்? தேவி தியேட்டருக்கு பக்கத்திலேயே ப்ளோ ப்ளாஸ்ட் லிமிடெட்டின் மண்டல அலுவலகம் வேறு இருந்துத் தொலைத்தது. இதே கம்பெனியின் பாரிமுனை கிளையில் அப்பா வேலை பார்த்தார் என்றாலும், அடிக்கடி இங்கே வருவார்.

ஒருவழியாக தியேட்டருக்குள் போய் அமர்ந்தபிறகு படப்படப்பு குறைந்தது. ரோஜா ஏகத்துக்கும் ஆச்சரியப்படுத்தினாள். ரோஜாவில் சித்தரிக்கப்பட்ட நெல்லை சுந்தரபாண்டியபுரம் மாதிரியான டீசண்டான கிராமத்தை இன்றுவரை நான் எங்குமே நிஜத்தில் காணமுடிந்ததில்லை. அர்விந்த்சாமி கம்ப்யூட்டர் இன்ஜினியர். அதுவரை கம்ப்யூட்டரை கண்ணில் மட்டுமே பார்த்திருந்தவனுக்கு, அதுக்கு ஒரு இன்ஜினியரும் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. தேசக்கொடியை தீவிரவாதிகள் எரிக்க, அதை விழுந்து புரண்டு அர்விந்த்சாமி அணைக்க.. எங்கள் நெஞ்சங்களிலும் பற்றியெறிந்தது தேசவெறி. க்ளைமேக்ஸில் ரோஜா தன் கணவனோடு இணைந்ததைக் காண நேர்ந்தபோது கிடைத்த நிம்மதி சிலாக்கியமானது. ஒரு ஃபிகரை பிரபோஸ் செய்து, அவள் ஏற்றுக் கொண்டபோது கூட இந்த நிம்மதி கிடைத்ததில்லை.

அதுவரை சினிமாவில் பார்த்த கேமிரா வேறு. ரோஜா காட்டிய கேமிரா வேறு. பாத்திரங்களின் பின்னாலே கேமிரா நடந்தது, ஓடியது, குலுங்கியது. பாடல் காட்சிகளில் மொக்கையான டிராலி மூவ் மாதிரி மட்டமான டெக்னிக்குகள் இல்லை. காட்சிகள், படமாக்கம் எல்லாவற்றையும் தாண்டி ஈர்த்தது இசை. ஏ.ஆர்.ரகுமானைப் பற்றி இந்தியா டுடேவில் ஒரு சிறிய துணுக்கு மட்டுமே வாசித்திருந்த நினைவு. அப்போது அவருக்கு வயது 23 என்பதை அறிந்து பெரிய ஆச்சரியம்.

ஏதோ ஒரு நாள் கட் அடித்துவிட்டு படம் பார்த்தோம் என்றில்லாமல், அடுத்த சில மாதங்களுக்கு ரோஜா எந்நேரமும் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தாள். பி.பி.எல் சேனியோவில் ரோஜா கேசட்டை தேய்த்து, தேய்த்து ரெண்டு, மூன்று கேசட் வாங்க வேண்டியதாயிற்று. ‘காதல் ரோஜாவே’ மனப்பாடமானது. ‘புது வெள்ளை மழை’ பாடலில், அதுவரை தமிழ் சினிமாவில் கேட்காத பல ஓசைகளை கேட்க முடிந்தது.

அர்விந்த்சாமி தீவிரவாதிகளிடம் அடைபட்டிருந்தபோது போட்டிருந்தது மாதிரியே ஒரு ரெட் கலர் ஸ்வெட்டர் வாங்கிக் கொண்டேன். கொளுத்தும் கோடையில் கூட ‘தெய்வத்திருமகள் கிருஷ்ணா’ மாதிரி கழட்டாமலேயே அந்த ஸ்வெட்டரோடு அலைந்திருக்கிறேன். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆகிவிடலாமென்ற கனவோடு, மடிப்பாக்கத்தில் ஆரம்பித்திருந்த கம்ப்யூட்டர் சென்டருக்குப் போய் வேர்ட் ஸ்டார் எல்லாம் கற்றுக் கொண்டேன். மேலும் சில வருடங்களுக்கு தேசபக்தி நூறு கிரேடு செண்டிக்ரேடுக்கு குறையாமல் உஷ்ணமாகவே இருந்தது. அதற்கு ரோஜா ஒரு காரணம். பிற்பாடு +2 ஃபெயில் ஆகிவிட்டு வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டு, ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது சிந்திக்க நிறைய நேரம் கிடைத்தது. பாழாய்ப்போன அந்த சிந்தனையால் அந்த 100 டிகிரி செண்டிக்ரேடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, இப்போது 0 டிகிரி செண்டிக்ரேடாக உறைந்துப் போயிருக்கிறது.

இப்போது ரோஜாவை திரும்பிப் பார்க்கும்போது அது ஒரு மைல்கல் என்பதை அப்பட்டமாக உணரமுடிகிறது. தமிழ் சினிமாவை இந்திய அளவுக்கு நேரடியாக கொண்டுச்சென்ற முதல் படமாக தோன்றுகிறது. சுபாஷ்கய்தான் தேசிய இயக்குனர் என்கிற பாலிவுட்டின் அடாவடியை, இப்படத்தின் மூலமாக அடித்து நொறுக்கினார் மணிரத்னம். தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை ஏற்றுக்கொண்டு, இந்திக்காரர்கள் மதிக்கும் கவுரவத்தை ஏற்படுத்தித் தந்தது ரோஜா. முன்னரே பாலச்சந்தர், எஸ்.எஸ்.வாசன் போன்றவர்கள் இந்தியில் வெற்றிக்கொடி நாட்டியிருந்தாலும், அந்த வெற்றிகள் தற்காலிகமானவை. மணிரத்னம் ரோஜாவில் கண்ட வெற்றி, இன்றளவுக்கும் தொடர்கிறது. சுதந்திர தினம் என்றாலே ‘பாரதவிலாஸ்’ என்கிற டி.டி.யின் அரதப்பழசான சம்பிரதாயமும் நொறுங்கிப் போனது. இந்தியிலும், தமிழிலும் குடியரசுதினம், காந்திஜெயந்தி, சுதந்திரதினம் என்று எண்ணற்ற முறை ரோஜா ஒளிபரப்பானது.

ஏ.ஆர்.ரகுமான் இந்திய சினிமா என்கிற எல்லையைத் தாண்டி ஆஸ்கரையே வென்றுவிட்டார். ‘சொட்டு நீலம் டோய், ரீகல் சொட்டு நீலம் டோய்’ போன்ற டிவி ஜிங்கிள்களுக்கு இசையமைத்தவரின் இன்றைய உயரத்தின் அச்சாணி ரோஜா.

ரோஜாவுக்கு இன்று வயது இருபது. முதல்முறை பார்த்தபோது கிடைத்த அதே அனுபவம், இப்போது பார்க்கும்போதும் கிடைக்கிறது என்பதுதான் இப்படத்தின் தனித்துவம். இன்னும் முப்பதாண்டுகள் கழிந்தாலும் இதே காட்சியனுபவத்தை ரோஜா வழங்குவாள் என்பதில் எனக்கு சந்தேகம் ஏதுமில்லை.

எழுதியவர் யுவகிருஷ்ணா at Wednesday, August 17, 2011
வகை அனுபவம், சினிமா, மசாலா மிக்ஸ்

ஹஸாரேவின் நோக்கம்தான் என்ன? கார்ப்பரேட் சதியா… ஊழல் ஒழிப்பா… ஆட்சிக் கவிழ்ப்பா…?

லஞ்சம் – ஊழல் – கறுப்புப் பணத்துக்கெதிராக கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்துவரும் ‘போராட்டங்கள்’, இலக்கு தவறி வெறும் அரசியலாக, விளம்பர யுத்தமாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது.

உடனே, ஊழலுக்கு ஆதரவா என உணர்ச்சிவசப்பட வேண்டாம். எத்தனையோ ஆண்டுகள் இருக்குமிடமே தெரியாமல் இருந்த அன்னா ஹஸாரே திடீரென ஒரு நாள் லஞ்சத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தியாவை ரட்சிக்க முளைத்ததும், அடடா முழு பெருமையும் அவருக்கே போவதா என கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் அதற்கு பங்காளியாக முனைந்ததும், அதில் ஹஸாரேவும் பாபாவும் குழாயடிச் சண்டை போட்டதும் மறந்திருக்க நியாயமில்லை.


லோக்பாலுக்கு ஒரு உண்ணாவிரதம், வலுவான லோக்பாலுக்கு இன்னொரு உண்ணாவிரதம், காங்கிரஸ் தலைவர்கள் தன்னை விமர்சித்ததற்காக ஒரு உண்ணாவிரதம், அந்த விமர்சனங்களை விலக்கிக் கொள்ளும் வரை ஒரு உண்ணாவிரதம், ஆகஸ்ட் 15 -ல் ‘மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக’ தடையை மீறி ஒரு உண்ணாவிரதம், அதற்காக கைது செய்யப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்ட பின்னும், தான் சொல்வதைத்தான் அரசு கேட்க வேண்டும் என்ற பிடிவாத உண்ணாவிரதம்… ஆக உண்ணாவிரதம் மட்டும்தான் ஹஸாரேவின் குறிக்கோளா?

இந்த கிளிப்பிள்ளைக்கு உண்ணாவிரதம் என்பதை மட்டும் சொல்லிக் கொடுத்தவர்கள், உண்ணாவிரதம் தாண்டி என்ன செய்யலாம் என்பதைச் சொல்ல மறந்துவிட்டார்களா?

ஆகஸ்ட் 15 ம் தேதி அறிவித்தபடி தடையை மீறி உண்ணாவிரதம் ஆரம்பித்தார் ஹஸாரே. ‘சட்டத்துக்குப் புறம்பான இந்த போராட்டத்தை’ அடக்க போலீசார் கைது செய்தனர். திகார் சிறையில் அடைத்தனர். அங்கும் உண்ணாவிரதம் தொடர்ந்தது. ஹஸாரேவின் போராட்ட நோக்கம், அதனால் விளையும் பயன்கள் என்னவென்றே யோசிக்காமல், மெழுகுவர்த்தி ஏந்திய ‘உயர்நடுத்தட்டு போலிகளின்’ பின்னால் உழைக்கும் மக்களும் அணி திரண்டுவிட்டனர். இது ஹஸாரேவின் வெற்றி என்று மீடியா கொண்டாட ஆரம்பிக்க, அரசு இப்போது இறங்கி வந்து சமரசம் பேசுகிறது.

இன்று திகார் சிறையில் ஹஸாரே குழுவுக்கும் அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையே நிகழ்ந்த முக்கிய உரையாடல் இது:

அரசு பிரதிநிதி: அன்னாஜி, உங்களுக்கு என்னதான் வேண்டும்… எங்களை வேலை செய்ய விடுங்கள்…

ஹஸாரே: உண்ணாவிரதத்துக்கு என்னை அனுமதிக்க வேண்டும். நான் விரும்புமிடத்தில் இருப்பேன். எந்த நிபந்தனையும் ஏற்கமாட்டேன்.

கேஜ்ரிவால்: எந்த நிபந்தனையையும் ஏற்கமாட்டோம். எத்தனை நாட்கள் உண்ணாவிரதம் என்பதை யாரும் முடிவு செய்யக் கூடாது.

அரசுப் பிரதிநிதி: 7 நாட்கள் அதிகபட்சம். வேண்டுமானால் இரண்டொரு நாட்கள் வரை நீட்டித்துக் கொள்ளலாம். எழுத்துப் பூர்வாக வேண்டுமானாலும் தருகிறோம். நீங்கள் விரும்பும் வரை இருக்க எப்படி அனுமதிக்க முடியும்… நகரின் இயக்கம் பாதிக்குமே பரவாயில்லையா…

ஹஸாரே: அதுபற்றி நான் கவலைப்பட முடியாது. நீங்கள் சொல்லும் நிபந்தனைகளையும் ஏற்க முடியாது…

அரசுப் பிரதிநிதி: சரி, உண்ணாவிரதமே வேண்டாம். நீங்கள் வேண்டுவது என்ன… மீண்டும் ஒரு குறைந்தபட்ச சமரசத்தோடு அரசு பேச விழைகிறது. சம்மதமா?

ஹஸாரே: முடியாது. எனக்கு இப்போது நிபந்தனையற்ற அனுமதி வேண்டும். ஒரு மாதமாவது நான் உண்ணாவிரதமிருப்பேன்.

அரசுப் பிரதிநிதி: லோக்பாலில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை குழுவுடன் அமர்ந்து பேசுங்கள். அதன்பிறகே பாராளுமன்றத்தில் வைக்கப்படும். அதுவரை போராட்டத்தை ஒத்திப் போடுங்கள்.

ஹஸாரே, கேஜ்ரிவால்: இல்லை இல்லை… உண்ணாவிரதம்தான் முக்கியம். அதை தள்ளிப் போட முடியாது. நாங்கள் சொல்வதை இப்போது அரசு கேட்கட்டும். மற்றவற்றை அப்புறம் முடிவு செய்யலாம்!

-இது கற்பனை உரையாடல் அல்ல. செவ்வாய்க்கிழமை இரவிலிருந்து புதன்கிழமை இரவு வரை திரும்பத் திரும்ப ஹஸாரே கோஷ்டிக்கும் அரசுப் பிரதிநிதிகள் கோஷ்டிக்கும் இடையே நிகழ்ந்த நிஜ உரையாடலின் ஒரு பகுதிதான்.


ஆக, சமரசமோ பிரச்சினைக்குத் தீர்வோ ஹஸாரேவுக்கும் அவரை பின்னிருந்து ஆட்டுவிப்பவர்களுக்கும் தேவையில்லை. அவர்களது நோக்கம் உண்ணாவிரதம். ‘தேசம் ஸ்தம்பித்தது… மக்கள் கொந்தளிப்பு… இரண்டாவது சுதந்திரப்போர் ஆரம்பம்… ஊழல் காங்கிரஸ் விரட்டப்பட்டது’ என்ற தலைப்புச் செய்திகள்தான்.

ஒரு எதிர்க்கட்சியாக தங்களால் செய்ய முடியாததையெல்லாம் ஹஸாரே என்ற முகமூடியை வைத்து செய்கிறது பாஜக என்ற குற்றச்சாட்டை கிட்டத்தட்ட மெய்ப்பித்தது அருண் ஜெட்லியின் இன்றைய நீ…ண்ட உரை!

அவரது பேச்சை இன்று பாராளுமன்றத்தில் கேட்டேன். லோக்பாலை வலுவாக்க அவர் கோரியதை விட, பிரதமர் மன்மோகன் சிங் கையாலாகதவர் என்பதை மீண்டும் மீண்டும் கூறி பதிய வைப்பதில்தான் குறியாக இருந்தார்.

இன்னொரு பக்கம் காங்கிரஸ் ஏன் ஹஸாரேவுக்காக இவ்வளவு தூரம் இறங்கி வருகிறது, கெஞ்சுகிறது என்ற கேள்வியை கேட்காதவர்கள் ரொம்ப குறைவு.

கைது செய்யப்பட்ட பிறகு ஒருவர் உண்ணாவிரதமிருந்தால், கட்டாயப்படுத்தி வாயில் உணவைத் திணிப்பது ‘திகார் மரபு’. விடுதலை என்று அறிவித்த பிறகு போக மறுத்தால் குண்டுகட்டாக தூக்கிப் போய் எங்காவது இறக்கிவிடுவதும் போலீஸ் மரபுதான். எத்தனை லட்சம் பேர் சிறைக்கு வெளியே காத்திருந்தாலும், போலீஸ் நினைத்தால் அதைச் சாதித்திருக்கிறது. ஆனால் ஹஸாரேவுக்கு மட்டும் சிறப்புச் சலுகை!

நல்ல தலையணை, திண்டெல்லாம் போட்டு மார்வாடி மாதிரி அவர் வீற்றிருக்கிறார் அறையில். அவரைத் தேடி அவரது சகாக்கள் வருகிறார்கள். மந்திராலோசனை மாதிரி கூட்டம் நடக்கிறது. பின்னர் கிளம்பிப் போய் வெளியில் உள்ள ‘வெள்ளைக் காலரில் அழுக்குப்படாத’ கூட்டத்துக்கு செய்தி சொல்கிறார்கள் கிரண்பேடியும், சிசோதியும். அதிலும் இந்த சிசோதி, திடீரென ரிலீசாகி வெளியில் போகிறார்… திடுமென்று உள்ளே வந்து ஹஸாரேயுடன் மந்திராலோசனை நடத்துகிறார்.

அட… என்னதான் நடக்கிறது? இதற்கு முன், இதைவிட நியாயமான காரணங்களுக்காக எத்தனையோ பேர் கைதாகி சிறைவாசம் அனுபவித்தார்களே, அவர்களுக்குக் காட்டப்படாத சலுகைகள் ஹஸாரே கோஷ்டிக்கு ஏன்?

அப்படியெனில், தலைநகரில் இடதுசாரிகள் பேசிக் கொள்வதைப் போல, இந்த ஹஸாரே நாடகத்தில் காங்கிரஸுக்கும் பங்குள்ளதா? ராம்தேவ் நாடகத்தை பிசுபிசுக்க வைத்த காங்கிரஸ், ஹஸாரே நாடகத்துக்கு மட்டும் ஏன் வெற்றிகரமான இரண்டாவது, மூன்றாவது நாள் போஸ்டர்களை அடித்துக் கொண்டிருக்கிறது?

இது ஜனநாயக நாடு. கருத்து சுதந்திரம் நன்றாகவே உள்ளது. நினைத்ததைப் பேசவும், அரசு அனுமதியோடு அதற்கு செயல்வடிவம் தரவும் சட்டம் இடம்தருகிறது. ஆனால் ஆட்சி மாற்றத்துக்கேற்ப ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இதற்கு புதிய விளக்கங்களைத் தருவது வாடிக்கை. அதே நேரம், தனிமனிதர் ஒருவர் அரசு தன்னிஷ்டப்படி ஆட வேண்டும் என எதிர்ப்பார்ப்பது சரிதானா? எனில் தேர்தல், பாராளுமன்றம், அமைச்சரவை எதற்காக? இதே மிரட்டலை அனைத்துக் குழுக்களும் மேற்கொள்ளலாமா?

எந்த அதிகாரமும் இல்லாத ஒரு நபர், மக்கள் ஆதரிக்கிறார்கள் என்ற ஒரே விஷயத்தை வைத்துக் கொண்டு, ஒரு சர்வாதிகாரி போல நடந்துகொள்வதும், மக்கள் பிரதிநிதிகளான பிரதமர் உள்ளிட்டோரை கேவலமாக விமர்சிப்பதும் சரிதானா? எனில் இந்த உரிமையை அனைத்து போராட்டக்காரர்களுக்கும் இனி தருவார்களா மத்திய மாநில அரசுத் தரப்புகளில்? உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டத்துக்கென இனி குறிப்பிட்ட இடம்தான் என்ற வரையறையை எந்த அரசும் விதிக்கக் கூடாது. போராட்டக்காரர்கள் விரும்பிய இடத்தில்தான் போராட்டம் நடக்கும் என்ற நிலையை உறுதிப்படுத்துமா அரசு?

-இந்தக் கேள்விகளை எழுப்புவோரை உடனே காங்கிரஸ் ஆதரவாளர்கள் அல்லது ஊழல் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தவும் ஒரு கூட்டமே அலைகிறது. அவர்களின் குழு மனப்பான்மைக்கு நாம் தலைவணங்கிப் போகமுடியாதல்லவா?

இதில் யாரும் வெளியில் சொல்லாத ஒரு கேவலம் இந்த இரண்டு தினங்களிலும் அரங்கேறி வருகிறது… முக்கிய பிரமுகர்கள் சிலர் ஹஸாரேவுக்கு ஆதரவாக திகார் சிறைக்கு வெளியில் நின்று சீன் போடுவதை மீடியா நன்றாக கவர் செய்ய ‘சிறப்பு உபசரிப்புகளை’ச் செய்து வருகின்றனர். குறிப்பாக டிவி சேனல்காரர்களுக்கு. எப்படி இருக்கிறது ஊழல் எதிர்ப்பு லட்சணம்!

இந்த முறை காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்து ஹஸாரேவை அடக்குகிறது… பாஜக முட்டுக் கொடுக்கிறது. அடுத்த முறை, அதிகார கோல் பாஜக கையில் கிடைத்ததும் விழும் முதல் அடியும் ஹஸாரே மீதுதான் இருக்கும், அவர் உண்மையிலேயே ஊழலை எதிர்த்து நின்றால்.

இல்லாவிட்டால், ராலேகான் சித்தியின் சர்வாதிகாரியாக அந்த ஐந்துவருடங்களை ஓட்டிவிடுவார் ஹஸாரே… கார்ப்பரேட் தர்மகர்த்தாக்கள் இருக்கும்வரை, ஹஸாரேக்களால் புதுப்புது ஷோக்களை அரங்கேற்ற முடியாதா என்ன?

-ஷைலேந்தர் உதவியுடன், தலைநகர் புது டெல்லியிருந்து…

குறிப்பு 1: கட்டுரையாளர் ஜெய்பிரகாஷ் பாண்டே தலைநகர் டெல்லியில் 25 ஆண்டுகாலம் அரசியல் நிருபராக, நாட்டின் முதல்நிலை பத்திரிகையான ‘சரஸ்சலீலி’ன் ஆசிரியராக பணியாற்றியவர். பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை ஆகிய மூன்று அதி உயர் அமைப்புகளிடமிருந்தும் அங்கீகார அட்டை பெற்றவர். அனைத்து அரசியல் மற்றும் அதிகார மட்டத்திலும் நல்ல தொடர்புகள் கொண்டவர். குறிப்பாக, ஹஸாரே போராட்ட அரசியல் குறித்து ஏராளமான கட்டுரைகளை இவர் எழுதி வருகிறார்.

என்வழிக்காக அவர் தந்துள்ள சிறப்புக் கட்டுரையின் தமிழ் வடிவம் இது! இதில் உள்ள கருத்துக்கள் கட்டுரையாளருடையவைதான். ஆனால், அவரது கேள்விகளில் உள்ள அடிப்படை முகாந்திரம் மறுக்க முடியாதது என்பதால், ஒரு வார்த்தையைக் கூட நீக்காமல் வெளியிட்டுள்ளோம்!

குறிப்பு 2: ‘தலைவரே ஆதரவு தெரிவித்த ஒரு விஷயத்தை விமர்சிப்பதா’ என சிலர் திரிபை ஏற்படுத்த முயலக்கூடும். தலைவர் ஆதரித்தபோது இருந்த நிலைவேறு. இன்றைக்கு அதில் பல்வேறு சந்தேகங்கள் வந்திருக்கின்றன. ஒரு மூத்த பத்திரிகையாளர் கண்டறிந்த உண்மைகளை எழுதியுள்ளார். மெய்ப்பொருள் காணும் ஒரு முயற்சியே இந்தக் கட்டுரை.

-என்வழி

கே.பி.என் ட்ராவல்ஸ் காண்பித்த உயிர் பயம்

கே.பி.என் ஆம்னி பஸ்கள் தொடர் விபத்தின் காரணமாக அதில் பிரயாணம் செய்வதை சமீபகாலாமாக தவிர்த்து வந்தேன். சென்ற மாதம் கூட ஒரு முக்கிய விஷயமாக சென்னை செல்வதற்கான அவசியம் ஏற்பட்டது. ரிட்டர்ன் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டும், புறப்படுவதற்கான டிக்கெட் கன்பார்ம் ஆகாமல் கடைசி நேரத்தில் கே.பி.என்’னையே நாட வேண்டி இருந்தது. எனக்கும், என்னுடன் வரவிருந்த ஒரு நண்பருக்கும் அதில் துளியும் இஸ்டமில்லை. அதனால் அந்த பிரயானத்தையே ரத்து செய்தோம். கே.பி.என்’னின் அலட்சியத்தால் ஏற்பட்ட தொடர் விபத்துகளும், உயிர் இழப்புகளுமே அதற்கு காரணம்.

சென்ற வாரம் மீண்டும் அவசரமாக சென்னை செல்ல நேரிட்டது. சென்னையில் இருந்து நண்பர் ஒருவர் சேலம் வந்திருந்தார். அன்று இரவே புறப்பட்டு மறுநாள் காலை இருவரும் சென்னையில் இருக்க வேண்டிய சூழ்நிலை. காலையிலேயே தட்கலில் இருவருக்கும் ரயில் டிக்கெட் பதிவு செய்தேன். இரண்டும் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தது. இரவுக்குள் கன்பார்ம் ஆகிவிடும் என்று நம்பிக்கை இருந்தது. மாலையில் எனக்கு மட்டுமே டிக்கெட் கன்பார்ம் ஆனது, நண்பருக்கு கடைசி வரை கன்பார்ம் ஆகவில்லை. மாலை வரை இதையே நம்பி இருந்தது தான் தப்பு!

வேறு வழி இல்லாமல் இருவருக்கும் உடனே கே.பி.என்’னில் டிக்கெட் பதிவு செய்தேன். குளிர் சாதனமற்ற பேருந்தில் கடைசி இரண்டு சீட் தான் கிடைத்தது. அதுவும் ஒரு டிக்கெட் ரூபாய் நானூறு என்று. விலை கொஞ்சம் அநியாயம் தான். அவ்வளவு விலை கொடுத்து ரிஸ்க் எடுக்கனுமா? தினமும் நாளேடுகளில் படித்த கே.பி.என் பேருந்துகளின் விபத்து செய்திகளும், புகைப்படங்களும் மனத்திரையில் விரிந்து மறைந்தது. எத்தனயோ பேருந்துகள் இவர்கள் இயக்குகிறார்கள், எல்லா பேருந்துமா விபத்தில் சிக்கியது? ச்சே ச்சே ஒன்னும் ஆகாது என மனதிலேயே நினைத்துக்கொண்டு பேருந்தில் ஏறினோம்.

நேரம் சுமார் இரவு பத்துமணி.. பேருந்து புறப்பட சில நிமிடங்களே இருந்ததால் ஒரு நபர் வந்து அனைவருடைய பயணச்சீட்டையும் ஒவ்வொன்றாக சரி பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது தான் தெரிந்தது நான் அமர்ந்துள்ள சீட்டை என்னால் பின்னால் சாய்க்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்து பார்த்தும். ம்.ஹும்.. அசையவில்லை. ஒரு வேலை என்னால் அதை செய்ய முடியவில்லையா? முதன் விமான பயணத்தில் கூட சீட்டை பின் புறம் சாய்ப்பதில் எனக்கு சிரமம் இருந்ததில்லையே. ஒரு வேலை பேருந்தின் கடைசி சீட் என்பதால் அந்த வசதி இல்லையோ? சரி நண்பரின் சீட்டை சோதித்தால் தெரிந்துவிடும் என்று அருகில் திரும்பி பார்த்தேன். அவர் ஏற்கனவே தன் சீட்டை பின்னால் சாய்ந்து சொகுசாக தூங்க ஆயத்தமாகிக்கொண்டு இருந்தார்.

“அப்போ எனக்கு மட்டும் தான் இந்த சோதனையா!” என நினைத்துக்கொண்டு பேருந்து டிக்கெட் சரிபார்த்துக்கொண்டு இருந்த அந்த நடத்துனரை அழைத்தேன்! அவர் பல முறை அதை சாய்க்க முயற்சித்தும் கூட பலனில்லை. வேறொருவரை உடனே அனுப்பி வைக்கிறேன் என்று கூறி அவர் சென்றார். இரு நிமிடங்களில் பேருந்து நகர ஆரம்பித்தது. ஆனால் யாரும் அதுவரை வரவில்லை. வேறென்ன செய்ய? அதனால் ஒன்னும் பாதிப்பில்லை என விட்டுவிட்டேன். அது தான் நான் செய்த தவறு என்பதை பின்பு உணர்ந்தேன். பேருந்து புறப்பட்டு அறை மணி நேரம் இருக்கும். முதுகும், கழுத்தும் சுள்ளென வலிக்கத் தொடங்கியது. தூக்கம் என் கண்ணை துளைத்தது. ஆனால் உறங்க முடியவில்லை. சீட் கொஞ்சம் சாய்ந்தவாறு பழுது அடைந்து இருந்திருந்தால் கூட இந்த பிரச்சனை இருந்திருக்காது. அதுவோ 90 டிகிரி நேர்கோட்டில் நின்று என்னை பாடாய்படுத்தியது. என் நிலை புரிந்தவராய் நண்பர் தன் சீட்டில் இடம்மாற என்னை அழைத்தார். இது மிகவும் சிரமமாக இருக்கிறது, அவராவது நிம்மதியாக உறங்கட்டும் என மறுத்தேன்.

ஒருமணி நேரம் கூட இருக்காது, வலி உச்சமடைந்தது. என்னால் பொறுக்க இயலவில்லை. ஆத்திரம் அதிகரித்தது அந்த நடத்துனர் மேல். உடனே யாரேனும் அனுப்பி சரி செய்கிறேன் என்று கூறினாரே. எங்கே போனார்? சட்டென எழுந்து, முன்பக்கம் நோக்கி நடந்தேன். அப்போது அனைவரும் தூக்கக்கலக்கத்தில் என்னை வித்யாசமாக பார்ப்பதை உணர்ந்தேன். ஏன் என தெரியவில்லை. அனைத்து பார்வைகளையும் தாண்டிச்சென்று முன்பகுதியில் இருந்த கதவை தட்டினேன். ஓட்டுனரை தவிர மூவர் அங்கு அமர்ந்து இருந்தனர். ஆனால் நான் தேடிச்சென்ற அந்த நபரை காணவில்லை. பல முறை தட்டிய பிறகு கதவு திறக்கப்பட்டது. திறந்தவர் ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன். “என்ன சார் யூரின் போகனுமா” என கதவை திறந்தவாறு அவர் கேட்க, ஓட்டுனர் அவராகவே வண்டியின் வேகத்தை குறைத்து ஓரங்கட்டினார். ஆஹா இப்போது புரிந்தது அந்த பயணிகளின் பார்வையின் அர்த்தம். அது இல்லை பிரச்சனையை என கூறி என் நிலையைச்சொன்னதும் வண்டி மீண்டும் வேகமெடுத்து.

அந்த நபரும் வந்து நான் அமர்ந்திருந்த அந்த சீட்டை பின்னால் சாய்க்க முயற்சித்து பார்த்தார். அவராலும் இயலவில்லை. “பேருந்தில் ஏறியபோதே சொல்ல வேண்டியது தானே சார், இவ்வளவு தூரம் வந்த பிறகு சொல்லறீங்களே” என சலித்துக்கொண்டார். “டிக்கெட் சரி பார்க்க வந்த அவரிடம் சொன்னேனே… ஆள் அனுப்புறேன் என்று அவரும் சொன்னாரே” என்றேன் நான். “சரியா போச்சி சார், அவர் வேலை அங்கேயே முடிஞ்சிது. என்னிடம் சொல்ல வேண்டிது தானே” என்றார். ஹம்ம்.. பயணிகளை பற்றி கவலை ஏதும் இன்றி, தன் வேலை முடிந்தால் சரி என புறப்பட்டு சென்ற அந்த நபரை என்னவென்று சொல்ல?.

“சரி, இப்போ நான் என்ன செய்ய. என்னால் உறங்க முடியவில்லை. கழுத்து மிகவும் வலிக்கிறது. இங்கே சத்தியமாக உட்கார முடியாது. அதுவும் சென்னை வரை சான்சே இல்லை” என்றேன். “இப்போதைக்கு இந்த பேருந்தில் வேறு சீட் ஏதும் இல்லை சார். அப்படி இருந்தால் மாத்தி கொடுத்து விடுவேன். இன்னும் சிறுது நேரத்தில் உளுந்தூர் பேட்டை வந்து விடும். அங்கு வேண்டுமானால் வேறு பஸ் மாற்றி தருகிறேன்” என்றார். இன்னும் அங்கு சென்றடைய நீண்ட நேரம் ஆகும் என்பது எனக்கு தெரிந்திருந்ததால், நான் அப்படியே ஒவ்வொரு சீட்டாக, ஏதேனும் காலியாக இருக்கிறதா என பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒரே ஒரு சீட் நடுப்பகுதியில் காலியாக தென்பட்டது. “அவரிடம் அதை காண்பித்தேன். “ஆனால் பக்கத்தில் லேடீஸ் இருக்காங்க சார்.” என்று இழுத்தார். அப்போது தான் கவனித்தேன். தலையோடு மூக்கோடு போர்த்திக்கொண்டு அந்த சீட் அருகில் ஒரு பெண் எங்களை கவனித்துக்கொண்டு இருந்தார்.

சென்னை வரை காலியாக வரும் அந்த சீட்டை வெறுமனே பார்த்துக்கொண்டு வலியோடு உறக்கமின்றி வருவதில் எனக்கு விருப்பமில்லை. உடனே நான் “லேடிஸ் தான் பிரச்சனைனா, ஜென்ட்சை மாத்திவிடுங்கள்” என கூறினேன். “அவங்களை எப்படி ஜென்ட்ஸாக மாற்றுவது, என்ன சார் விளையாடறீங்களா” என குரலை உயர்த்தினார் அவர். “அவங்களை நான் ஜென்ட்ஸாக மாத்த சொல்லவில்லை, வேறு சீட்டில் ஜோடியாக அமர்திருக்கும் பெண்னருகே இவரை உட்கார வைத்து விட்டு, அந்த ஆணை இங்கே இங்கே மாற்றிவிடுங்கள்” என்றேன். “இல்ல சார்.. அதுக்கு யாரும் ஒத்துக்க மாட்டாங்க” என மீண்டும் இழுத்தார்.

அதுவரை இங்கு என்ன நடக்கிறது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த அந்த பெண் இதை கேட்டதும் சட்டென முகத்தை முன்பக்கம் திருப்பிகேகொண்டார். அதிலிருந்து அவருக்கு என்னை அங்கு அமரவைக்கவும் இஷ்டமில்லை, வேறொரு சீட்டில் மாற்றி அமரவும் இஸ்டமில்லை என்பதை உணர முடிந்தது. ஆணாக பிறந்ததால் இதையெல்லாம் அனுபவித்து தான் ஆகவேண்டும். “பெண் பாவம் பொல்லாதது” என அந்த யோசனை விட்டு விட்டு, மீண்டும் என் சீட்டிலேயே அமர்த்து ஜன்னலோர நிலவை ரசிக்க ஆயத்தமானேன்.

நேரம் நடு நிசியை கடந்து இருந்தது. அனைவரும் நித்திரையில் இருந்தனர். கழுத்துவலி இப்போது என்னை பாடாய்படுத்தியது. என்னுடைய மொபைலில், கூகிள் உலக வரைபடத்தின் மூலம் நான் இருக்கும் இடத்தை பார்த்தேன். கள்ளக்குறிச்சியை தாண்டித்தான் பேருந்து சென்று கொண்டிருந்தது! விரைவில் சென்னை போய் சேரமாட்டோமா என்று ஏக்கத்துடன் மொபைலை பாக்கட்டில் நுழைத்து விட்டு கண்களை மூடினேன்.

திடீரென ஓர் உள்ளுணர்வு. உடனே கண்விழித்தேன். அப்போது வலியையும் மீறி நான் கண்ணயர்ந்து இருக்கிறேன் என புரிந்தது. சாலையெங்கும் அமைதி. அனைவரும் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருந்தனர். பேருந்து பயனித்துக்கொண்டு இருந்தவாறு தெரியவில்லை. அது யாருமற்ற அந்த சாலையில் குறுக்கு வாக்கில் இன்ச் இஞ்ச்சாய் பின்னால் நகர்ந்துக்கொண்டு இருந்தது போல் இருந்தது. என்ன நடக்கிறது என்று எனக்கு சிறிது நேரம் வரை ஒன்றும் புரியவில்லை. வலது பக்கம் பார்க்கிறேன். நாங்கள் வந்த அந்த வழி அது. கண்ணுக்கெட்டிய வரை தூரம் வரை வாகனங்கள் ஏதும் தென்படவில்லை. பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து வந்த வழியில் மீண்டும் திரும்பிச்செல்ல முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள் என தெரிந்தது. இப்போது இடது பக்கம் பார்க்கிறேன். ஆனால் அந்த பக்கமோ நீண்டு செல்லும் சாலைக்கு பதில் முழுதாய் கட்டி முடிக்கப்படாத ஒரு பாலத்தின் விளிம்பு. இந்த கணப்பொழுதில் இங்கு என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடிந்தது.

ஓட்டுனர் வழக்கமான சாலையை விட்டு புதிதாய் அமைக்கப்பட்டுக்கொண்டு இருந்த ஒரு நான்கு வழிச்சாலையில் நீண்ட தூரம் சென்றிருக்கிறார். அந்த தவறை உணராமல் அங்கு கட்டி முடிக்கப்படாத ஒரு பாலத்தில் மேலும் ஏறி இருக்கிறார். பாலத்தின் உச்சியை அடைந்தபோது திடிரென சாலை முடிவடைவதை அறிந்து அதன் விளிம்பில் பேருந்தை உடனே ப்ரேக் போட்டு நிறுத்தி இருக்கிறார். இப்போது தான் நான் கண்விழித்து இருக்கிறேன். பாலம் கட்டப் படாததை கவனிக்காமல் இன்னும் சிறிது தூரம் சென்றிருந்தால் கூட அடுத்த நாள் பேப்பரில் எங்கள் பெயர்கள்! நினைத்தாலே குலை நடுங்குகிறது.

FLYOVER CONSTRUCTION

இது நடந்தது அந்த பேருந்தில் வேறு யாருக்கும் தெரியவில்லை. இன்னமும் அனைவரும் உறங்கிக்கொண்டு இருந்தனர். இதையெல்லாம் யோசித்துக்கொண்டு இருக்கும் போது கண்டக்டர் கடைசி ஜன்னலின் அருகே, எங்களுக்கு கீழே நின்று கொண்டு விசில் ஊதுவது கேட்டது. அருகில் இருந்த என் நண்பரும் அந்த சப்தம் கேட்டு இப்போது கண்விழித்து இருந்தார். ஜன்னலில் வெளியே எட்டிப் பார்த்த என் நண்பர் பதட்டமாகி டிரைவரை நோக்கி கத்த ஆரம்பித்தார்.

நானும் உடனே வெளியே எட்டி பார்த்தேன். இப்போது இன்னொரு பிரச்சனை. எங்கள் சீட்டின் கீழே 50 அடி அல்லது அடி 100 அடி பள்ளம் இருந்தது. அதாவது பேருந்து இப்போது ரிவர்ஸ் எடுத்து திரும்பும்போது பாலத்தின் ஓரத்தில் இருந்தது. எனக்கு மீண்டும் தூக்கி வாரி போட்டது. கண்டக்டர் நிறுத்தச்சொல்லி விசில் அடித்தும் பஸ் இன்னும் இன்ச் இஞ்சாய் பின்னால் நகர்ந்தது. இன்னும் ஓரிரு அடிகள் பின்னால் வந்தால் கூட டயர் கீழிறங்கி பஸ் கவிழ்ந்து விடும் நிலை. பதட்டம் இப்போது எனக்குள்ளும். நண்பரோடு சேர்ந்தும் நானும் ஓட்டுனரை நோக்கி நிறுத்தச்சொல்லி கத்த ஆரம்பித்தேன். பஸ் சட்டென நின்றது. இப்போது முன்னோக்கி இன்ச் இஞ்சாக நகர ஆரம்பித்தது. அப்பாடா மீண்டும் உயிர் தப்பினோம் என்ற நிம்மதி.

பேருந்தை திருப்புவதற்கு போதுமான அளவிற்கு அந்த பாலத்தின் அகலம் இல்லை. சரியாக அந்த பேருந்தின் நீளத்திற்கு தான் பாலத்தின் அகலம் இருந்திருக்கிறது. எங்களின் பின்பக்கம் இருந்த சாலையோரத்தில் நெடுகிலும் பாதுகாப்பிற்காக சிறு தூனைப்போன்ற தடுப்பு எழுப்பப்பட்டு இருந்தது. பஸ்ஸை இந்த பாலத்தில் திருப்ப வாய்ப்பே இல்லை. ஒரு இடத்தில் மட்டும் ஒரு பத்து அடிக்கு அந்த தடுப்பு இல்லை. அந்த இடைப்பட்ட இடத்தில் தான் பேருந்தை இப்போது முன்னேயும், பின்னேயும் மெதுவாக நகர்த்தி வந்த வழியில் திரும்ப முயன்றுக்கொண்டு இருந்தார் ஓட்டுனர். முன்னேயும் ஆபத்து. பின்னேயும் ஆபத்து. நிலைமை இன்னும் மோசமாவதை உணர்த்தேன்.

இப்போது சுமார் இரண்டு அடி முன்னே நகர்ந்த பேருந்து அதேபோல் மீண்டும் மெதுவாய் பின்னால் நகர்ந்து வந்தது. மறுபடியும் அது அந்த சாலை ஓர விளிம்பை தொட்டது. இந்த முறையும் பேருந்தை நிறுத்தச்சொல்லி கண்டக்டர் விசில் அடித்தும் அதை காதில் வாங்காமல் அந்த ஓட்டுனர் மெதுவாக விட்டு விட்டு பின்னால் நகர்த்திக்கொண்டு இருந்தார். இப்போது நாங்கள் அமர்ந்து இருந்த அந்த பின் சீட் பகுதி அந்த அதல பாதாளத்தில் மீது. ஜன்னலோரத்தில் நாங்கள் கீழே பார்க்க, மீண்டும் எங்களுக்கு உயிர் பயம். இருவரும் சேர்ந்து ஓட்டுனரை நோக்கி மறுபடியும் கத்த ஆரம்பித்தோம். அவர் உடனே ப்ரேக் போட்டு நிறுத்தி பேருந்தை முன்னே செலுத்தினார். சப்தம் கேட்டு எங்களுக்கு முன் சீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர் மட்டும் எங்களை வித்யாசமாக பார்த்து விட்டு மீண்டும் தூங்கினார். வேறு யாரும் இன்னமும் நிஜ உலகத்திற்கு வரவில்லை. உயிர் தப்பியது எங்களை தவிர அந்த பேருந்தில் வேறு எந்த பயணிகளுக்கும் கடைசி வரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது பேருந்து முழுதாக திருப்பப்பட்டு வந்த வழியே மீண்டும் சீறிப்பாய்ந்தது.

கழுத்து வலி, முதுகு வலியை விட உயிர் பயம் என்னை தூங்க விடவில்லை. உளுந்தூர் பேட்டையை பேருந்து வந்தடைந்த போது ஒரு மன நிம்மதி. இரவில் அந்த வழியில் பயணம் செல்லும் அனைத்து கே.பி.என் பேருந்துகளும் வந்து நிற்கும் இடம் அது. வாழ்க்கை கனவுகள் நிறைய இருக்க இந்த பேருந்தில் என்னுடைய கடைசி இரவை முடித்துக்கொள்ள விருப்பமில்லை. ஓட்டுனர் முன்பு சொன்னது போல் இங்கு சென்னை செல்லும் வேறு பேருந்தில் மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

கண்டக்டரிடம் போய் வேறு பேருந்தில் சீட்டை மாற்றி தருவதாகச்சொன்னதை மீண்டும் ஞாபகப்படுத்தினேன். இதை சற்றும் எதிர்பார்க்காதவராய் அவர் முகம் மாறியது. நான் அதை மறந்து விடுவேன் என்று நினைத்திருந்தாரோ என்னவோ. அங்கு அனைத்து பேருந்துகளின் சீட்டுகளை சரி பார்த்து அனுப்பும் பணி செய்து கொண்டு இருந்த இன்னொருவரை காண்பித்து, அவர் தான் இதற்க்கு பொறுப்பு அகவே அவரிடம் சொல்லுகிறேன் என கூறிவிட்டு அவரை நோக்கி நடந்தார். நானும் அவர் பின்னாலேயே சென்றேன். மீதி இருக்கும் சில மணி நேரமாவது சென்னை போவதற்குள் தூங்கிவிடலாம் என்கிற நப்பாசை.

“சீட்டை பின்னால் தள்ள முடியவில்லையாம், கழுத்து வலிக்கிறதாம், பெசன்ஜெர் வேறு பஸ்சில் மாற்றி தரும்படி கேட்கிறார்” என அவரிடம் கூறினார். சரியாக அப்போது அவர்கள் அருகே சென்றேன். அதற்க்கு அந்த புதிய நபர் கூறிய பதிலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் அருகில் இருப்பதை அந்த இருவரும் உணரவில்லை. “வலிச்சா அதுக்க நான் என்ன பண்றது, அப்படியே ஒக்காந்து போக சொல்லு. பஸ் எல்லாம் மாத்தி தர முடியாது” என்ற தோரணையில் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் இருந்தது அந்த பதில். இங்கு மனிதாபிமானம் என்பது கூட அவசியமில்லை. அனைவரும் நானூறு ருபாய் செலுத்தி செல்லும் அதே பேருந்தில், அதே பணம் செலுத்தி முதுகு வலியோடு செல்வது எவ்விதத்தில் நியாயம்? நான் ஒன்னும் இலவசமாக செல்லவில்லையே? அந்த சீட் பழுதடைந்து இருப்பது தெரிந்தும் வருமானத்தை இழக்க மனமில்லாமல் எனக்கு அந்த சீட்டை விற்றது யார் தப்பு? எனக்கு கோபம் பயங்கரமாக வந்தது. இருப்பினும் அவரிடம் பொறுமையாக என் நிலையை விளக்கி வேறு பேருந்து மாற்றி தருமாறு கேட்டேன்.

நான் அருகில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இப்போதும் அதே தோணியில் “வேற பஸ் எல்லாம் இல்ல சார். எல்லா சீட்டுலயும் ஆளுங்க இருக்காங்க. அஜ்ஜெஸ் பண்ணிகோங்க” என்று என்னை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். பெயருக்கு கூட மற்ற பேருந்துகளை அவர் விசாரிக்கவில்லை. தன்னுடைய பதிவேடுகளையும் அவர் புரட்டி பார்க்கவில்லை. இத்தனைக்கும் அங்கு இருபது அல்லது முப்பது கே.பி.என் பேருந்துகள் நின்று கொண்டு இருந்தது. எப்படியும் அதில் பாதி சென்னை செல்வதாகத்தான் இருக்க வேண்டும்.

எனக்கு அவர் பதிலில் திருப்தி இல்லை. அதுவரை கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் இருந்தது அவர் செயல். வேறு பேருந்து மாற்றி தர வேண்டும் என்று என் தரப்பு நியாயங்களை கூறி நான் பிடிவாதமாய் இருந்தேன். உடனே அவர் மேலும் கோபமாகி, மீண்டும் பொறுப்பற்ற பதிலையே கூறிக்கொண்டு இருந்தார். நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின்பு கடைசியில் அவர் அருகில் இருந்த சென்னை பேருந்துகளை விசாரிக்க சென்றார். ஐந்து நிமிடத்தில் மீண்டும் திரும்பி வந்து “அந்த பேருத்தில் சீட் இருக்கிறது, நீங்களும் உங்கள் நண்பரும் போய் ஏறிக்கொள்ளுங்கள்” என்று ஒரு பேருந்தை காண்பித்தார். அவர் வார்த்தைகளில் கோபம் தெரிந்தது, அவர் உடல் மொழி அசாதாரணமாய் இருந்தது.

நானும் நண்பரும் அவர் கூறிய அந்த பேருந்தில் ஏற முயன்றோம். நடத்துனர் எங்களை ஏற விடவில்லை. நாங்கள் தூரத்தில் சென்று கொண்டிருத்த அந்த நபரை காண்பித்து, அவர் தான் இதில் மாற்றி அமர சொன்னார் என்றோம். எங்களுடைய டிக்கெட்டையும் காண்பித்தோம். “டிக்கெட் காண்பித்தால் ஏற்றிவிடுவோமோ? யாரும் எங்களிடம் இதை பற்றி சொல்லவில்லை” என்றனர். அவர்கள் பேச்சும் கடுமையான தோனியில் இருந்தது. மீண்டும் அந்த நபரை அழைத்து வந்து சொல்லச்சொல்வோம் என்று நான் தூரத்தில் இருந்த அவரை நோக்கி நடந்தேன்.

என்னை மீண்டும் பார்த்ததும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சம்பந்தம் இல்லாமல் கடுமையாக பேச ஆரம்பித்து விட்டார். நான் இன்னும் பேருந்தில் ஏறாமல் அவரிடம் நடந்து வந்தது அவருக்கு எரிச்சலை தந்து இருக்கிறது. நான் அந்த பேருந்தில் எங்களை ஏற விடவில்லை என்று கூறுவதை கூட அவர் காதில் விழாமல் தடுத்தது அவர் கோபம். இதை பார்த்த அந்த பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் சம்பந்தமே இல்லாமல் இவருடன் சேர்ந்து எங்களுடன் வாக்குவாதத்தில் இடுபட்டனர். அவர்கள் யாருமே அந்த சூழ்நிலையை புரிந்து கொள்ளும் மன நிலையில் இல்லை. அவர்கள் நோக்கம் எங்களை காயப்படுத்த்துவதாக மட்டுமே இருந்தது. நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு தான் நாங்கள் அந்த பேருந்தில் அனுமதிக்கபட்டோம். பேருந்தில் ஏறியவுடன் என் மனதில் இருந்தது ஒன்றே ஒன்றுதான். கே.பி.என்’னில் என் உயிர் போய் விடக்கூடாது என்பது மட்டும் தான். உயிருடன் இருக்கும் மனிதர்களுக்கே அவர்களிடம் மதிப்பில்லை!



பின் குறிப்பு:

இந்த பதிவை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி. கே.பி.என் டிராவல்ஸில் இந்த போக்கு ஏற்புடையதா? இது போல் உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ ஏதேனும் அனுபவம் நிகழ்ந்து இருக்கிறதா? இந்த சம்பவத்தை பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
Thanks to :
http://www.cpraveen.com/suvadugal/the-death-fear-that-kpn-travels-showed-me/

பேயை நீங்கள் பார்த்திருக்கீங்களா அய்யா என்று கேட்டேன்.

65 வயதான ஜோதிடர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்..அந்த கால அனுபவங்கள் பற்றி வயதானவர்களிடம் கேட்பது எனக்கு பிடித்தமான ஒன்று.பேயை நீங்கள் பார்த்திருக்கீங்களா அய்யா என்று கேட்டேன்..அட ஏம்பா இரண்டு தடவை உயிர் தப்பி வந்த அனுபவமே இருக்கு என்றார்.இனி அவர் சொல்கிறார்..நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.
=====================================================================================
1970 ஆம் வருசம்.பெரம்பலூர் டவுனில் இருந்து என் கிராமம் குறும்பலூர் க்கு ஒத்தயடி காட்டுப்பாதையில் நானும் என் நண்பனும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.அவன் நன்றாக பாடுவான்..சைக்கிளை ஓட்டிக்கொண்டே பாடிக்கொண்டு வந்தான்...பயம் தெரியாம இருக்கத்தான் இந்த பாட்டெல்லாம்.நான் பின்னால் உட்கார்ந்திருந்தேன்.இரவு 10 அல்லது 11 இருக்கலாம்..லைட் இல்லாத காலம் என்பதால் 7 மணிக்கே நடுச்சாமம் மாதிரி இருக்கும்..நிலா வெளிச்சம் தான் ஒரே லைட்.


புளிய மரம் சாலையோரம் நெடுக வளர்ந்திருக்கும்...ஒரு பெண் கையில் காலி குடத்துடன் எங்கள் முன்னால் சென்றுகொண்டிருந்தாள்....பின்பக்கம் பார்க்கும் போதே நாங்கள் வாயை பிளந்துவிட்டோம்..அவ்வளவு அழகு...இடுப்பை அசைத்தப்டி அவள் நடக்கும் அழகை கண்டு எங்கள் சைக்கிள் ஸ்லோ ஆகிவிட்டது.

யாருமற்ற பாதையில்,பக்கத்தில் எதுவும் வீடுகளற்ற பகுதியில் நிலா வெளிச்சத்தில் நமீதா மாதிரி ஒரு பெண் நடந்து போனா எப்படி இருக்கும்...?என் நண்பன் செம மூடு ஆகிட்டான்..மாப்ள..வா வளைச்சிரலாம்...ரொம்ப நாள் ஆசையை தீர்த்துக்கலாம்..என்றான்....

அக்காலத்தில் பகலில் கூட பெண்கள் வெளியே வரமாட்டார்கள்..சோளக்காட்டு வழியே சோறு கொண்டு போகும் பெண்களை மாடு மேய்க்கும் இளைஞர்கள் தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்..ஆசை தீர்ந்த பின் போ..என துரத்தி விடுவார்கள்..அப்பெண்களும் சோற்று பானை சேதம் ஆகாமல் தப்பித்தால் போதும் என எடுத்துக்கொண்டு போய்விடுவார்களாம்.யாரிடமும் சொல்ல மாட்டார்கள்.சொன்னால் கெட்டுப்போனவள் என சொல்லி புருசன் வேறு பெண்ணை கட்டிக்கொண்டு இவளை துரத்தி விடுவான்.இதனால் பெண் வேட்டை அக்காலத்தில் மிக அதிகம்..அதனால் எங்கு போனாலும் பெண்கள் கூட்டமாகவே செல்வார்கள்.


நிலாவெளிச்சத்தில் இந்த பெண் இவ்வளவு தைரியமாக வருகிறாளே என டவுட் வந்துருச்சி....டேய் அவசரப்படாதே இது பெண் மாதிரி தெரியல...முந்தா நாள் தூக்கு போட்டு செத்து போனாளே சாந்தி அவ மாதிரி தெரியுது என உசார் செய்தேன்..உடனே என் நண்பனுக்கு வேர்த்து கொட்டி விட்டது...

நான் உடல்கட்டு மந்திரம் உபதேசம் பெற்றதால் பயப்படவில்லை...இது பேயா இருந்தா அந்த வளைவு தாண்டினதும் இடது புறம் இருக்குற புளியமரம் பின்னாடி மறைஞ்சி போயிடும் என்றேன்.

நாங்கள் உசார் ஆனதும் அந்த பெண் நடப்பதை நிறுத்தினாள்.....திரும்பவில்லை...என் நண்பன் உசிரை கையில பிடிச்சிகிட்டு நின்னான்.என்னாகும் பார்க்கலாம் என்று நாங்களும் நின்று கொண்டோம்....வேறு வழியும் இல்லை..அந்த பெண்ணை தாண்டிதான் ஊருக்கு போயாக வேண்டும்.சைக்கிளை வேகமாக மிதித்து போயிரலாமா என கேட்டான்..உனக்கு சாமர்த்தியம் இருந்தா போ..ஆனா அவ முகத்தை பார்த்துடாதே என்றேன்...

ஏண்டா இப்படி பயமுறுத்துற என அழுதான்...கொஞ்சம் இரு என சொல்லிக்கொண்டிருந்தபோதே அந்த புளியமரம் பின்னால் அது மறைந்தது...காணவில்லை...அப்புறம் தலை தெறிக்க வீடு வந்து சேர்ந்தோம்.

அதன் பின் சில வருடங்களுக்கு பின் அதே பெரம்பலூர் குறும்பலூர் சாலையில் நான் தனியாக வந்து கொண்டிருந்தபோது....அய்யோ கொல்ல வர்றாங்க யாராவது காப்பாத்துங்க என ஒரு ஆள் மிளகாய் தோட்டத்துக்குள் ஓடினான்..நான் பதறிப்போய் பார்த்தபோது..ஒரு நாலு பேர் அரிவாளுடன்.. அவனை துரத்தி கொண்டிருந்தார்கள்..

உடனே நான் பக்கத்தில் ஒரு வீட்டின் கதவை தட்டினேன்..யாருப்பா அது..<என கதவி திறக்காமலே கேட்டார் வீட்டுக்காரர்...நான் பொன்னான் மகனுங்க...இங்கே ஊருக்கு போற வழியில ஒரு ஆளை வெட்ட நாலு பேர் துரத்துறாங்க...பாவம் அந்தாளை காப்பாத்துங்க என்றேன்...

அட..ஏம்பா நீ வேற ஒரு வருசமா இந்த பேய்க்கும்பல் இப்படித்தான் அட்டகாசம் பண்ணுது..போய் கோவில் திண்ணையில படுத்து தூங்கிட்டு போ என்றார் அசால்ட்டாக.

எனக்கு வியர்த்துவிட்டது..ஆனாலும் ஒரு குருட்டு தைரியம்...மறுபடியும் போய் என்னாச்சு ந்னு மேட்டுல நின்னு பார்க்கலாம்..என போனேன்...அந்த காட்சி அதிர செய்து துரத்தப்பட்டவன் வெட்டப்பட்டு ,ரத்தம் ஒழுக...தவழ்ந்து கொண்டே கிணறு பக்கம் போனான்..அது மொட்டை கிணறு..கிணற்றுக்குள் அப்படியே விழுந்தான்..எனக்கு அதிர்ச்சி..உடனே கிணறை நோக்கி ஓடினேன்...

கிணறை எட்டி பார்த்தேன்..கிணற்றில் தண்ணீர் தழும்பக்கூட இல்லை...சலனமே இல்லாமல் இருந்தது.

திகிலில் உறைந்து போய், வீடு வந்து சேர்ந்தேன்.

நடிகர் செந்தாமரையின் நாடிஜோதிட அனுபவம்

நடிகர் ராஜேஷ் ராணி வார இதழில் எழுதி வரும் ஜோதிட தொடரில் இருந்து ஒரு பகுதி;

நடிகர் செந்தாமரை மூன்றுமுகம் படத்தில் ரஜினிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வில்லன்...அலெக்சு..என் பேரை சொன்னா கர்ப்பத்துல இருக்குற குழந்தை கூட வாயை பொத்தும்....என போலீஸ் ஸ்டேஷனில் கால்மேல்போட்டுக்கொண்டு ரஜினியை மிரட்டுவாரே அவர்தான்....இனி ராஜேஷ் சொல்வதை பார்ப்போம்.
-------------------------------------------------------------------------------------


படப்பிடிப்பின் இடைவேளைகளில் பல விசயங்களப்பற்றி கல்ந்துரையாடும்போது செந்தாமரை அண்ணனுக்கும் ,எனக்கும் அடிக்கடி விவாதம் நடக்கும்.குறிப்பாக அவர் எண்கணிதத்தில் (நியூமராலஜி)நல்ல ஈடுபாடும்,முழு நம்பிக்கையும் உள்ளவர்,அதன்படி எதிர்காலத்தை கணித்து சொல்வார்.பலருக்கு அவர் கூறியபடியே நடந்திருக்கிறது.ஆனால் அவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.எண்கணிதத்தில் மட்டும் முழு நம்பிக்கை உண்டு.

தூறல் நின்னுபோச்சு’படத்தில் நடித்த பிறகு அவருக்கு பல திரைப்படங்கள் ஒப்பந்தம் ஆனது.குறிப்பாக ரஜினியின் மூன்று முகம் ரஜினியின் மூன்றுமுகம்,அப்படியிருந்தும்,1984 -ஆம் ஆண்டு ஒருநாள் என்னிடம் ,ராஜேஷ் ஏதோ நாடி ஜோதிடம் போன்றவற்றில் நீ அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறாய்.எனக்கும் நாடி பார்க்க வேண்டும்.அத்ற்கு ஏற்பாடு பண்ண முடியுமா...?என்று கேட்டார்.நான் வைதீஸ்வரன் கோவிலில் உள்ள ஒருவரின் விலாசத்தை கொடுத்து அவரை நாடி பார்க்க அனுப்பி வைத்தேன்.அதன்படி பூசமுத்து என்பவரிடம் நாடி பார்த்திருக்கிறார்.நாடியில் சொந்த வீடு ,கார் போன்றவைகளை நீ வாங்குவாய்...குளிர் அறையில் தூங்குவாய்...என வந்துள்ளது.இதை கேட்டதும் ,நாடியில் நம்பிக்கையில்லாமல் திரும்பி வந்துவிட்டார்.

காரணம் அப்போது அவருக்கு சொற்ப சம்பளம்....என்னிடம் அவர்,என்ன ராஜேஷ்,சொந்த வீடு,கார்,குளிர் சாதன அறை என்று எழுதி கொடுத்துள்ளார்கள்.இதெல்லாம் என்றைக்கு நடப்பது..?என்றார் சலிப்பாக்.

சில ஆண்டுகளுக்கு பின் மாரடைப்பால் அவர் இறந்தபோது,சொந்த வீடு,கார்,குளிர் சாதன அறை எல்லாமே அவருக்கு சொந்தமாக இருந்ததை சொல்ல தேவையில்லை..!!

செந்தாமரை தி.மு.க கட்சியையை சேர்ந்தவர்.மனதில் எந்த சூது வாதும் கிடையாது.மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார்.1987 ஆம் ஆண்டு சென்னை கே.கே நகரில் ஒரு வீடு வாங்கினேன்.அந்த வீட்டின் கதவு இலக்கம் 43.அது என்னுடைய பிறந்த தேதிக்கு ஒத்து வராத எண்.ஆகையால் இந்த வீடு உனக்கு நிலைக்காது.சீக்கிரம் விற்றுவிடுவாய்.அதுமட்டுமில்லாமல் ..அந்த வீட்டில் ஒருநாள் கூட தூங்க மாட்டாய் என்றார்.அதன்படியே வீட்டுக்கு கூட வர முடியாமல் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நேரம்..பிறகு பெரிய வீடாக கட்டிக்கொண்டு அந்த வீட்டை விற்று விட்டேன்.

என்னை கலைஞர்தான் தூக்கி போடுவார் என அடிக்கடி சொல்வார்.அதுபோலவே கலைஞர்தான் அவர் இறுதி சடங்கில் கலந்துகொண்டார்.ஒரு மனிதன் நினைத்தபடியே இறுதி சடங்கு நடந்தது...

Read more: http://www.astrosuper.com/2011/08/blog-post_2778.html#ixzz1VOSSUzur

Tuesday, August 16, 2011

ஸ்டாலின் அதிரடி: “குடும்பத்துக்குள் எனக்கே சீன் காட்டுகிறீர்களா?”

தி.மு.க.வுக்குள் உட்கட்சி மோதல்கள் ஒருபக்கமாக நடந்துகொண்டிருக்க, தலைவரின் குடும்பத்துக்குள் மோதல்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது. தி.மு.க.வில் தலைவர் குடும்பத்துப் பிரச்சினையே கட்சியின் பிரதான பிரச்சினை என்பதால், குடும்ப மோதல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இன்றைய நிலையில், குடும்பத்துக்குள் கிட்டத்தட்ட அனைவருமே ஸ்டாலினுக்கு எதிராகத் திரும்பியிருப்பதாக சொல்கிறார்கள். கடந்த சில வாரங்களாகவே நிலைமை ஸ்டாலினுக்கு எதிராக இருப்பதாகவும் கூறுகிறார்கள். சமீபத்தில் கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவுக்கு ராசாத்தி அம்மாள் போனதுகூட, தயாளு அம்மாள் சொல்லித்தான் என்கிறார்கள்.

ராசாத்தி அம்மாளும், அழகிரியும் பொதுக்குழுவில் கலந்து கொண்ட காரணத்தால்தான், ஸ்டாலினைத் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்த பலரும் தயங்கினார்கள் என்பது தி.மு.க.வில் பலரும் அறிந்த ரகசியம்.

அப்படியிருந்தும் பொதுக்குழுவில் ஸ்டாலினுக்கு ஆதரவாக சிலர் பேசத்தான் செய்தார்கள். அவர்களது பேச்சுக்களைக் கூர்ந்து கவனித்த கருணாநிதி, அப்படிப் பேசிய அனைவருமே, முன்கூட்டியே திட்டமிட்ட முறையில் பேசியதாகக் கருதுகிறாராம்.

அந்தத் திட்டமிடலைச் செய்து கொடுத்தது ஸ்டாலின்தான் என்பது, அவரது ஊகம்.

ஸ்டாலினை அழைத்து நேரடியாகவே, “கட்சிக் கூட்டத்தில் கட்சிக்காரர்களையே செட் பண்ணிப் பேசவைப்பது எப்படி என்று எனக்கே காட்டுகிறீர்களா? இதுபோல எத்தனை பேரைப் பார்த்தவன் நான்? எத்தனை வருடங்களாக இந்தக் கட்சியை நடத்துகிறேன். இதில் யார் சொந்தமாகப் பேசுவார்கள், யார் சொல்லிக் கொடுத்ததைப் பேசுவார்கள் என்பதை, மொத வாக்கியத்திலேயே புரிந்து கொள்பவன் நான்” என்று கொதித்து விட்டாராம் கருணாநிதி.

அதற்குப் பிறகு, ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்கும் இடையே பேச்சுவார்த்தை பெரிதாக இல்லை என்கிறார்கள். இருவரும் வெவ்வேறு துருவங்களாக அரசியல் செய்யத் தொடங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்த நிலைப்பாடு அழகிரி தரப்புக்கும், கனிமொழி தரப்புக்கும் திருப்தியைக் கொடுத்தாலும், ஸ்டாலின் வேறு ஏதாவது பிளான் பண்ணி தலைமையைக் கைப்பற்றி விடக்கூடும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது.

அதற்கு ஏற்றா மாதிரித்தான் ஸ்டாலினின் சமீபகால நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.

தி.மு.க.வின் ‘தூண்கள்’ எல்லாம் வரிசையாக போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்லத் தொடங்கியுள்ள நிலையில், வெளியே கட்சி வேலைகளைக் கவனிக்கும் ஒரேயொரு ஆக்டிவ்வான தலைவராக ஸ்டாலின்தான் வளைய வருகிறார். ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார். அதிரடிக் கருத்துக்களை அள்ளி வீசுகிறார். அ.தி.மு.க. அரசுக்கு சவால் விடுகிறார்.

கோவை சிறைக்குச் சென்று வீரபாண்டியாரையும் மற்றையவர்களையும் பார்த்துவிட்டு வருகிறார். பாளையங்கோட்டை சிறைக்குச் சென்று பூண்டி கலைவாணனை சந்திக்கிறார். ஊர் ஊராகச் சுற்றுப் பயணம் செய்கிறார். தொண்டர்களைச் சந்திக்கிறார். ஆர்ப்பாட்டங்களில் கைதாகும்போது, தொண்டர்கள் அனைவரும் பத்திரமாக போலீஸ் வேனில் ஏறும்வரை தானும் வெளியே காத்திருக்கிறார்.

ஸ்டாலினின் இந்த சமீபகால நடவடிக்கைகள் கட்சித் தொண்டர்களிடையே அவரது இமேஜை பூஸ்ட் பண்ணியிருப்பது உண்மை.

அழகிரியோ, தனது நெருங்கிய சகாக்கள் ஒவ்வொருவராக போலீஸின் பிடிக்குள் போவதைத் திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். எந்த நிமிடமும் தனது வீட்டுக் கதவை போலீஸ் வந்து தட்டலாம் என்ற பயத்தில், மதுரைப் பக்கத்தில் அதிகம் தலைகாட்டாமல் டில்லியிலேயே அதிகம் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

கனிமொழி, கட்சிக்காரர்களுடன் தொடர்பற்ற நிலையில் திகார் சிறையில் இருக்கிறார்.

இந்த நிலையில், அழகிரியும் கனிமொழியும் குடும்பத்துக்குள் ஆதரவைப் பெற்றாலும், கட்சிக்குள் ஸ்டாலினின் கைதான் ஓங்கியிருக்கின்றது.

-சென்னையிலிருந்து கலியபெருமாளின் குறிப்புகளுடன், ரிஷி.

எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா?

“துரிதமாக நெருங்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்க, அ.தி.மு.க.வுக்கு தூது விடுகிறார் அழகிரி” இந்தப் பேச்சு, மதுரை தி.மு.க.வினரிடம் மிக அழுத்தமாக அடிபடத் தொடங்கியிருக்கிறது. டில்லிக்கு சென்றாலும் சனி, ஞாயிறு தினங்களில் மதுரைக்கு வந்துவிடும் அழகிரியை, கடந்த இரு வாரங்களாக மதுரைப் பக்கமே காண முடியவில்லை.

எப்போதும் கலகலப்பாக இருக்கும் அழகிரி வீடு வெறிச்சோடிப்போய் உள்ளது. குடும்பத்தினர் யாருமே மதுரையில் இல்லை. அவருடைய வலது, இடது கரங்கள் பாளையங்கோட்டை சிறையில் இருக்கிறார்கள். அழகிரி ஆதரவு போலீஸ் அதிகாரிகள் அனைவருமே, மதுரைக்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார்கள். அண்ணனின் புதிய கட்-அவுட் எதையும் காணவில்லை.

உண்மையில் என்னதான் நடக்கிறது? அஞ்சா நெஞ்சர் சரணாகதியா? எமது தொடர்புகள் மூலம் தகவல் திரட்டினோம்.

எமக்கு கிடைத்த தகவல்களில் இருந்து, சரணாகதி பேச்சுக்கள் நடப்பது உண்மைதான். ஆனால், இரண்டாவது மூன்றாவது பார்ட்டிகள் ஊடாகவே பேச்சுக்கள் நடக்கின்றன.

மனைவி காந்தி அழகிரியைத் தவிர, மகன், மகள் குடும்பத்தினரை இந்தியாவை விட்டே வெளியே அனுப்பி விட்டார் அண்ணன். இதனால், லோக்கல் கேஸ்களில் விசாரணை, கைது, விவகாரங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றி விட்டதாக நினைக்கிறார் அவர்.

அதுவும் ஓரளவுக்கு உண்மைதான்.

நிலம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான சிவில் கேஸ்களில், இந்தியாவுக்கு வெளியே உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதானால், மாநில அரசு, மத்திய அரசை தொடர்புகொண்டு, பைல் உட்துறை அமைச்சின் ஒப்புதல் பெற்று, வெளியுறவு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டு, இன்டர்போலின் தென் ஆசிய மையத்துக்கு தகவல் கொடுத்து…. மிக நீளமான நடைமுறை அது.

பெரிய அளவிலான கிரிமினஸ் கேஸ்கள் இருந்தால்தான் அதெல்லாம் சுலபம். அல்லது அரசு ஊழல் தொடர்பான ஒரு பிளாங்கெட் கேஸ் என்டோஸ்மென்ட் இருக்க வேண்டும். அழகிரி குடும்பத்தினர் யாருமே தமிழக அரசின் முக்கிய பதவிகளில் இருந்ததில்லை. எனவே, அதற்கும் சான்ஸ் இல்லை.

மனைவியையும் இந்தியாவுக்கு வெளியே அனுப்பி விடுமாறு அட்வைஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் அண்ணனின் தன்மானப் பிரச்சினையும் இருப்பதால், ஒரு முறைக்கு இரு முறையாக யோசிக்கிறார் என்கிறார்கள். தவிர அழகிரி நாளைக்கே தி.மு.க.வைக் கைப்பற்ற சந்தர்ப்பம் கிடைத்தால், மொத்த குடும்பமுமே வெளிநாட்டுக்கு தப்பியோடியது என்ற இமேஜ் ஏற்படுவது நன்றாக இருக்காது.

“ஹை.. ஒரே செல்லில போட்டா சீட்டு வெளையாடுவோமே!”

தற்காலிகமாக வெளிநாட்டில் வசிப்பதென்றால், அழகிரியின் சாய்ஸ் மலேசியாதான் என்கிறார்கள். ஆனால், மகன், மகள் குடும்பத்தினர் பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் சென்றுவிட்ட நிலையில், மலேசியா செல்ல அவர்கள் தயாராக இல்லை. மேற்கே செல்ல இவர்களுக்கு விருப்பம் இல்லை.

கட்சிக்குள்ளும், அழகிரிக்கு எதிராகவே காரியங்கள் வேகம் எடுத்துள்ளன. ஸ்டாலின், கட்சிக்குள் தனது இருப்பை உறுதிப் படுத்திக் கொள்ள, மிகச் சுறுசுறுப்பாக காய் நகர்த்தத் தொடங்கிவிட்டார். தமிழகம் முழுவதும் டூர் அடித்து ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதுடன், கட்சிக்காரர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டார்.

இந்த ரேட்டில் போனால், தென் மாவட்டங்களில் உள்ள அழகிரி ஆதரவுக் கூட்டம் கரையத் தொடங்கிவிடும். அதன்பின் கட்சியைக் கைப்பற்றுவது என்பது வெறும் கனவாகவே போய்விடும்.

காங்கிரஸ்-தி.மு.க. உறவும், சொல்லிக் கொள்ளும் விதத்தில் இல்லை. உறவு முறிந்தால் மத்திய அமைச்சர் பதவியும் காலியாகிவிடும். அந்தப் பதவி கொடுத்த பாதுகாப்பு வளையமும் காணாமல் போய்விடும். சில்லரை கேஸில் விசாரிப்பதற்குகூட, போலீஸ் வந்து கதவைத் தட்டும்.

சிறையில் இருக்கும் ‘உற்ற நண்பர்கள்’ விவகாரம்வேறு தலைக்குமேல் கத்தியாகத் தொங்குகிறது. பொட்டு சுரேஷ் வாயைத் திறக்க முடிவெடுத்தால், கதை கந்தலாகிப் போய்விடும். சிறையிலுள்ள அட்டாக் பாண்டி, கோபி உட்பட மற்றைய உடன்பிறப்புகளுக்கு எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். ஆனால் உதையும் தாங்கும் உடம்பு இருக்கிறதா தெரியவில்லை.

போலீஸ் ‘கவனிப்பு’ தாங்காமல், அவர்களும் எதையாவது கக்கித் தொலைத்து விடலாம்.

இதுதான், 4 மாதங்களுக்கு முன் மதுரையை அரசாண்ட அஞ்சா நெஞ்சரின் இன்றைய நிலைமை. இதிலிருந்து ஓரளவுக்காவது விடுபட (குறைந்த பட்சம் தானும் மனைவியும் கைதாவதிலிருந்து தப்பித்துக் கொள்ள), அண்ணன், அ.தி.மு.க.வுடன் ஒருவித கம்பிரமைஸ் செய்து கொள்ள தயார் என்றுதான் அவரது நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

செகன்ட், தேர்ட் பார்ட்டி தூதுப் பேச்சுக்கள் டில்லியிலும், சென்னையிலும் நடப்பதாகத்தான் அடித்துச் சொல்கிறார்கள். எல்லாமே ஆரம்ப ஸ்டேஜில் இருக்கிறது. முழுமையான விபரங்கள் தெரியவர சில நாட்களோ, வாரங்களோ ஆகலாம்.

தற்போது அண்ணன், டில்லியில் உள்ள சொந்த பங்களாவில்கூட அதிகம் தங்காமல், தினத்துக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ், ஹோட்டல் என்று நாடோடித் தென்றலாக வலம் வருகிறார்.

-மதுரையிலிருந்து அதிபன் தங்கராசு, டில்லியிலிருந்து நர்மதா பானர்ஜி ஆகியோரின் குறிப்புகளுடன்,
Thanks to Viruvirupu