Sunday, July 24, 2011

விகடன் குழுமத்துக்கு நன்றியுடன்!

ஒரு காம்பவுண்டு கொட்டடிக்குள் இருப்பது ஒன்றைத்தவிர திஹார் சிறையில் வேறு குறை ஏதுமில்லாததனால் ஆ.ராசாவுக்குத் தெனா வெட்டும்,நக்கலும் கொஞ்சம் கூடக் குறையவில்லை போல!

மனிதர் சிறையில் இருப்பதைக் குறித்து எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறார்!கம்பி எண்ணுவது உறுதியானால், தான் மட்டுமே அல்ல, கூடவே பெட்டிகளை வாங்கிக் கொண்ட பேர்வழிகளும் தன்னுடன் கூடவே வரவேண்டியிருக்கும் என்பதை அவ்வப்போது குறிப்பால் உணர்த்திவிட்டு அமைதியாக இருக்கிறார்.

எல்லாமே பிரதமருக்குத் தெரிந்து, அவருடைய ஒப்புதலுடன் தான் நடந்தது என்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமரையும் மாட்டி விடுகிற மாதிரித் தான், அவருடைய தற்காப்புவாதமாக இருக்கும் என்பதை அடிக்கடி கோடி காட்டி விட்டு அமையாதிவிடுகிறார்.கனிமொழிபோல அழுது புலம்புவதில்லை!


பிரதமரைக் காப்பாற்றுவதற்காகவோ என்னவோ, கடந்த சில நாட்களாக சி பி ஐ எடுத்து வைக்கும் வாதங்கள், ராஜா பிரதமரை நம்ப வைத்து, முடிவுகளைத் தன்னிச்சையாக எடுத்தார், தனக்கு வேண்டப் பட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தார், அமைச்சரவைக் குழு கூடி எடுக்கவேண்டிய முடிவுகளைத் தானே தன்னிச்சையாக எடுத்தார், பிரதமரிடமிருந்து உண்மையை மறைத்தார் என்ற ரீதியில் இருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னாள் சிபிஐ, நீதிபதி அனுமதியுடன் ஆ.ராசாவை மறுபடி விசாரித்தது. வருமானவரித்துறை மறுபடியும் விசாரிக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறது.

சம்மரி ஷீட் என்ற ரகத்தில் சிபிஐ, ஆ.ராசா தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு லைசன்ஸ் அளித்தது , ஸ்வான் நிறுவனம் அனில் அம்பானியின் முகமூடி நிறுவனம்,அரசுக்கு இழப்பு ஏற்படும் விதத்தில் முடிவுகளை மேற்கொண்டது, டிபி ரியாலிடி நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் கொடுத்தது, அப்புறம் அது திருப்பிச் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுவது எல்லாவற்றையும் தொகுத்து ஒரு ஆவணமாகத் தாக்கல் செய்திருக்கிறது.

சிபிஐ விசாரணையை, இன்றைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தபோது, சந்தடிசாக்கில் நக்கல் செய்திருக்கிறார் ஆ.ராசா! சிபிஐ வழக்கு நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறதாம்!

சிபிஐ தரப்பு வழக்கறிஞர் லலித் பேசுவது சரியாகக் காதில் விழவில்லை என்று குற்றம் சாட்டப் பட்டவர்கள் சார்பில் சொல்லப் பட்டபோது, சந்தடிசாக்கில் ஆ.ராசா புகுந்து, இந்த கமென்ட் அடித்திருக்கிறார். யுனிடெக் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "திரு லலித்! நேற்றைக்காவது கொஞ்சம் சத்தமாக பேசினீர்கள் இன்றைக்கு உங்கள் குரல் மிகவும் தணிவாக இருக்கிறது" என்று சொன்னபோது, ஆ.ராசா இடைமறித்து, "அது நாளுக்கு நாள் அவர்கள் தரப்பு பலவீனமாகிக் கொண்டிருப்பதால் தான்!" என்று சொன்னாராம்.

நுணலும் தன் வாயால் கெடும் என்ற கதையாகிவிடப்போகிறது!!
---------------------------------------------------------------------------------------
******
கம்பல்சரி ரிடைர்மென்ட்டில் இருக்கும் சுர்ஜீத் சிங் பர்னாலாவிடம் திமுகவினர் மனுக்கொடுத்து இன்னொரு கேலிக் கூத்தை இன்றைக்கு அரங்கேற்றியிருக்கிறார்கள்!


கோவை ராசியே இல்லை, பொதுக்குழு திருப்பூருக்கு மாற்றப்படுமா, தொடர்ந்து கைதுகள், புறக்கணிக்கப்போவதாக அழகிரி தரப்பில் இருந்து மிரட்டல்,இப்படி வரிசையாக வதந்திகள் கிளம்பிக் கொண்டிருந்தாலும், திமுக பொதுக்குழு நாளை மறுநாள் கோவையில் கூட இருப்பதாகத்தான் இந்த நிமிடம் வரை செய்திகள் சொல்கின்றன.

எப்போதும்போல, காங்கிரசுடன் உறவு முறிவு, ஆட்சிக்கு ஆதரவு வாபஸ், உள்ளாட்சித் தேர்தலைத் தனியாகவே சந்திப்பது (இவர்கள் இப்படி முடிவெடுப்பதற்கு முன்னாலேயே, பாமக உட்பட அத்தனை கூட்டாளிகளும்,உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்!!}என்று டமாரங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

ஆட்சியில் இருந்தபோது, டமாரங்கள் சத்தத்தில் கேட்பவர் காது கிழியும்!இப்போதோ, டமாரங்களே கிழிந்து கிடக்கின்றன!

இந்த வார ஆனந்தவிகடன் இதழில் வெளியாகியிருக்கும் செய்திக் கட்டுரை நாட்டு நடப்பை நன்றாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது! விகடன் குழுமத்துக்கு நன்றியுடன்!

No comments: