Tuesday, December 23, 2008

இன்டர்நெட் திருடர்கள் ஜாக்கிரதை!!

உலகம் இணையதளத்துக்குள் சுருங்கி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இன்று இன்டர்நெட் இல்லாவிட்டால், எதையோ பறிகொடுத்தது போலாகிவிடுகிறது பலருக்கு. காரணம் அதன் உபயோகம் அப்படி.

ஜஸ்ட் மவுஸ் கிளிக்கில் எல்லாமே இன்று கிடைக்கின்றன. பிளாட் வாங்குவது கூட இன்டர்நெட்டில் படத்தைப் பார்த்து கிளிக் செய்து இன்டர்நெட் வழியே பணம் ட்ரான்ஸ்பர் செய்து பிளாட் புக் செய்வது கூட இந்நாளில் எளிதான ஒரு காரியமாக மாறிவிட்டது. இப்படி இன்டர்நெட் வழி பணம் கைமாறும் போதுதான் நாம் கவிழும் வாய்ப்புகளும் அதிகமாகின்றன.

வீட்டில், அலுவலகத்தில் மற்றும் செல்லும் இடமெல்லாம் கம்ப்யூட்டர், பிராட்பேண்ட், நிறுவன சர்வர் என எங்கு சென்றாலும் இணைய இணைப்பு என்பதால் கிரெடிட் கார்டு, டெலிபோன் பில், ஹோம் டிவி கட்டணம் என எதனை வேண்டுமானாலும் நம் பேங்க் இன்டர்நெட் கணக்கின் வழி கட்டத் தொடங்குகிறோம். அப்படிச் செல்கையில் அதிகக் கவனம் தேவை.

இல்லையென்றால் நமது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் நம் அனுமதியோடு, ஆனால் நமக்குத் தெரியாமலே ஸ்வாகா ஆகிவிட்டிருக்கும்.

இந்த சிக்கல்களிலிருந்து தப்ப சில வழிகள் உள்ளன.

திருடுவதில் இதுவும் ஒரு வகை!


இதுவரை பிஷ்ஷிங் என்ற வகை-யில் நம்மை வேறு இணைய தளங்களுக்கு இழுத்துச் சென்று நாம் திசை மாறுகையில் நம் கம்ப்யூட்டரில் புரோகிராம்களைப் பதிந்து நம் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, வங்கி கணக்கு பாஸ்வேர்டுகளைக் கண்டறிந்து பணத்தை எடுத்து வந்தனர்.
இப்போது மக்கள் உஷாராகிவிட்டனர். பல ஆண்டி மால்வேர், ஆண்டி பிஷ்ஷிங் சாப்ட்வேர் புரோகிராம்களை நிறுவி பாதுகாத்துக் கொண்டனர். உடனே கிரிமினல்கள் பார்மிங் (Pharming) என்று ஒரு புதிய வழியைப் பயன்படுத்துகின்றனர்.

இதில், நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கிலிருந்து உங்களுக்கு ஒரு தகவல் போல இமெயில் ஒன்றை அனுப்புகின்றனர். சில வேளைகளில் பன்னாட்டளவிலான வங்கி ஒன்றிலிருந்து (உங்களுக்கு கணக்கு இல்லை என்றாலும்) உங்கள் கணக்குக்கு உடனே சில தகவல்கள் தந்தால் கணக்கில் பணம் சேரும் என்றெல்லாம் தூண்டில் போட்டு மெயில் அனுப்புகின்றனர். நாமும் இது நம் அதிகாரப்பூர்வ மெயில் தானே என்று மெயிலைத் திறக்கின்றோம். அங்கே ஒரு வங்கியின் வெப்சைட் என்று ஒரு இன்டர்-நெட் முகவரி வங்கியின் பெயரோடு தரப்பட்டிருக்கும்.

வங்கியின் பெயரைப் பார்த்தவுடன் இது சரியான முகவரி என்று எண்ணி கிளிக் செய்தால் வங்கியின் இணைய தளம் போலவே ஒரு வெப்சைட் திறக்கும்.

அங்கு உங்கள் அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் தருகிறீர்கள். அவ்வளவுதான், அதற்குப் பின் அந்த தளம் அமைதியாகிவிடும். அதன்பிறகு உங்கள் அக்கவுண்ட்டும் அமைதியாகிவிடும்… இதிலிருந்து உங்களையும் பணத்தையும் பாதுகாத்திட சில வழிகள் உள்ளன.

கவனம்… கவனம்!

முதலில் உங்கள் ஆண்டி வைரஸ் மற்றும் ஆண்டி ஸ்பை வேர் புரோகிராம்-களை எப்போதும் அப்டேட் செய்தே வைத்திருங்கள். வங்கியின் யு.ஆர்.எல். முகவரியில் https என்று இருக்கிறதா என்று பார்க்கவும்.

பாதுகாப்பான தளம் என்று அடையாளம் காட்ட “http” யுடன் இறுதியில் ‘s’ சேர்க்கப்படுகிறது. அண்மைக்காலத்தில் வந்த பிரவுசர்-கள் இது போன்ற பாதுகாக்கப்பட்ட தளம் எனில் அட்ரஸ் பாரின் வண்ணத்தை மஞ்சளாக மாற்றி ஓரத்தில் ஒரு பூட்டின் ஐகானைக் காட்டுகின்றன. இப்படி அடையாளங்கள் தெரிந்தால் உங்கள் கம்ப்யூட்டருக்கும் இணைய தளத்திற்குமான தகவல்கள் என்கிரிப்ட் என்ற வகையில் சுருக்கி மாற்றி அனுப்பப்படுகின்றன என்று பொருள்.

பெரும்பாலான போலியான தளங்களில் இந்த வசதிகள் இருக்காது. ஆனால் உங்கள் வங்கியின் இணைய தளம் மிகவும் பலவீனமாக இருந்தால் ஒன்றும் செய்திட முடியாது. ஆனால் பெரும்பாலும் அது போல பாதுகாப்பற்ற தளங்களை வங்கிகள் அமைத்திருப்பதில்லை.

இதிலிருந்து காப்பாற்றிக் கொள்ள இன்னொரு வழியும் உண்டு. எந்த வங்கிக்கு இமெயிலில் முகவரிகள் தரப்பட்டாலும் அந்த லிங்க்கில் கிளிக் செய்திடாமல் நீங்களாக வங்கியின் இணைய முகவரியை டைப் செய்து அதன் தளத்திற்குச் செல்லவும். மேலும் அந்த முகவரியை புக்மார்க்காக வைத்துக் கொண்டு அடுத்த முறை அதில் கிளிக் செய்து இணைய தளம் செல்லவும்.

மேலும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள இன்னொரு அருமையான வழி உள்ளது. வங்கியின் இணைய தளத்தில் முதலில் போலியான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தரவும். உங்களிடமிருந்து விஷயங்களைக் கறந்திட உள்ள போலியான இணைய தளம் என்றால் நன்றி சொல்லி அந்த தகவல்களை வாங்கிக் கொள்ளும். வங்கியின் உண்மையான இணைய-தளம் என்றால் பாஸ்வேர்ட் சரியில்லை, மீண்டும் முயற்சி செய்க என்று சொல்லி உங்களின் அடுத்த முயற்சிக்குக் காத்திருக்கும்!

வங்கியின் இணையதளங்கள் உள்ளே நுழைவது மிகவும் சிரமம் என்பதால் பணம் திருடுபவர்கள் உங்கள் கம்ப்யூட்டரின் உள்ளே தான் வர முயற்சிப்-பார்கள். எனவே எவ்வளவு அதிகமான பாதுகாப்பு வழிகளை உங்கள் கம்ப்யூட் டரில் மேற்கொள்ள வேண்டுமோ அந்த அளவிற்கு பாதுகாப்பினைப் பலப்படுத்துங்கள்.

சிறந்த ‘ஆண்டி வைரஸ்’ புரோகிராம்களை நிறுவி ஆண்டுதோறும் அதனை புதுப்பித்து அவ்வப்போது அப்டேட் செய்து வைக்கவும். பொதுவாக இது போன்ற திருடர்கள் விண்டோஸ் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களையே குறி வைக்கின்றனர்.

லினக்ஸூக்கு மாறுங்கள்!

லினக்ஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இவர்களின் முயற்சி வெற்றி அடைவதில்லை. எனவே உங்கள் கம்ப்யூட்டரில் இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களாக லினக்ஸ் சிஸ்டத்தையும் போட்டு வைக்கலாம். நிதி மற்றும் பேங்க் விவகாரங்களைக் கம்ப்யூட்டரில் கையாளுகையில் லினக்ஸ் மூலம் செல்லலாம்.

அடுத்ததாக நாம் பயன்படுத்தும் பிரவுசரின் தன்மை. நாம் பெரும்பாலும் இன்டர்-நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 பயன்படுத்துகிறோம். அண்மையில் செகுனியா(www.secunia.com) என்ற இன்டர்நெட் வல்லுநர்களின் தளத்தில் ஓர் ஆய்வு முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் இன்னும் ஒன்பது (மொத்தம் 21 பக்ஸ்) பலவீனமான இடங்கள் சரி செய்யப்படவில்லை என்ற தகவல் தரப்பட்டுள்ளது.

இதன் பொருள் என்னவென்றால் நம்மைத் திருடும் ஹேக்கர்கள் வர இன்னும் ஒன்பது வழிகள் அடைக்கப்படவில்லை என்பதே. எனவே பயர்பாக்ஸ் அல்லது ஓபரா போன்ற பிரவுசர்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குப் பதிலாகப் பயன்படுத்துவது நல்லது. நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால் PhishTank site checker என்ற புரோகிராமினை இணைக்கவும். இது போலியான வங்கி தளங்களிலிருந்து உங்களைக் காப்பாற்றும். இந்த தளத்திற்குச் சென்றவுடனேயே உங்களை எச்சரிக்கும்.

எப்போதும் பாஸ்வேர்டினை மிகவும் பாதுகாப்பானதாகவும் அடுத்தவர் கணக்-கிட்டு அறிந்து கொள்ளும் வகையிலும் வைத்துக் கொள்ள வேண்-டாம். பாதுகாப்பான பாஸ்வேர்ட் வைத்துக் கொள்வது எப்படி என்று இந்த இதழில் இன்னொரு இடத்தில் வந்துள்ள குறிப்புகளைப் படிக்கவும்.

பணம் மாற்றும் போது…

வங்கிக் கணக்கில் இன்டர்நெட் மூலம் பணம் அடுத்தவர் அக்கவுண்ட்-டிற்கு மாற்றுகையில் மிகவும் கவனமாக அந்த அக்கவுண்ட் எண்ணை டைப் செய்திட வேண்டும். தவறுதலாக ஏதே-னும் ஒரு எண்ணை டைப் செய்துவிட்டால், அப்படி ஒரு எண்ணில் இன்னொரு அக்கவுண்ட் இருந்தால் நிச்சயம் உங்கள் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. வங்கியும் பொறுப்பேற்காது. அந்த அக்கவுண்ட் கொண்டவர் தன் மன சாட்சிக்குப் பயந்து திருப்பித்தந்தால்தான் உண்டு. எனவே எந்த அவசரம் என்றாலும் அதிகக் கவனம் கொள்வது நல்லது. தேதி, அக்கவுண்ட் எண், பணம் எவ்வளவு என்பதை நுணுக்க-மாகப் பார்த்துக் கையாள்வது நல்லது.

எந்த நிலையிலும் பொதுமக்களுக்கான இன்டர்நெட் மையங்களில் உங்கள் பேங்க் அக்கவுண்டினைக் கையாள வேண்டாம். இது நடு ரோட்டில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டைச் சத்தமாகக் கூறுவதற்கு ஒப்பாகும். எனவே எந்நிலையிலும் இந்த பழக்கத்தை மேற்கொள்ள வேண்டாம். வெளியூர் சென்றாலும் அந்த வங்கியின் கிளைக்குச் சென்று நிதி பரிமாற்றத்தை மேற்கொள்ளும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். அல்லது இப்போது மொபைல் போனில் இந்த வசதி கிடைத்துள்ளது. உங்கள் மொபைல் போன் மூலம் பணத்தைக் கையாளலாம்.

தகவல்: கார்த்தி

No comments: