Monday, December 1, 2008

Monday, 01 December 2008 19:32 இது .....நிகழ்வுகள் .காம் , வலை இன் பதிப்பு...

ஒன்றரை ஆண்டு கால மோதலுக்குப் பின்னர் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு. கருணாநிதி தனது மனசாட்சியின் முரசொலி மாறனின் மகன்கள் கலாநிதி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரை சந்தித்துப் பேசியது ஏன் என்பதற்கான பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

முரசொலி மாறனின் மறைவுக்கு பிறகு மாறன் குடும்பத்தினருக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டு விட்டது. இந்த விரிசல் தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்ட கருத்து கணிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து மதுரையில் தினகரன் நாளிதழ் தாக்கப்பட்ட பிறகு பிளவாக மாறியது.

தினகரன் பிரச்சனைக்கு முன்பே இரு குடும்பத்தினருக்கும் இடையே உறவில் இருந்த விரிசலை சமீபத்தில் கலாநிதி மாறன் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் வெளிப்பட்டது.

சமீபத்தில் கருணாநிதி சன் டிவி பற்றியும் மாறன் சகோதரர்கள் பற்றியும் அறிக்கை வெளியிட அதைத் தொடர்ந்து கலாநிதி கடிதம் எழுதி அதை பத்திரிகைகளுக்கு அளத்தார். இதனால் மோதல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மாறன் சகோதரர்கள் இன்று கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சந்திப்பின் போது மாறன் சகோதரர்களை கடுமையாக எதிர்த்து வந்த அழகிரியும் இருந்தது பரபரப்பை மேலும் அதிகரித்தது. சுமார் 45 நிமிடம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது இரு குடும்பத்தினருக்கும் இடையே உள்ள மோதலை மறந்து இரு குடும்பங்களும் முன்பைப் போலவே இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்ப்பட்டதாக தெரிகிறது.

சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இரு குடும்பங்களும் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

திடீரென இரு குடும்பங்களும் சந்தித்து பகையை மறந்து இணைய முடிவு செய்வதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தயாநிதி மாறன் தனது தந்தை முரசொலி மாறன் பெயரில் பேரவை ஒன்றை தொடங்குவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது இந்த முயற்சிக்கு ஆதரவாக திமுகவில் சிலர் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. இது திமுகவில் பிளவை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் திமுக தலைமைக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம், இலங்கை பிரச்சனை, வெள்ள நிவாரணப் பணிகளில் தொய்வு, அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் போன்ற பிரச்சனைகளில் திமுகவுக்கு எதிராக ஜெயா டிவியை காட்டிலும் சன் டிவி செய்திகளை வெளியிட்டு வந்தது.

மேலும் விஜயகாந்த், சரத்குமார், வைகோ, ஜெயலலிதா போன்ற எதிர்க்கட்சியினரைப் பற்றி விரிவான செய்திகளையும் சன்டிவி வெளியிட்டது.

இது தொடருமேயானால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகி விடும் என்ற அச்சமும் திமுக தலைமைக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்தக் காரணங்களாலேயே இரு குடும்பங்களும் இணைய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இனி திமுக அரசுக்கு ஆதரவாக செய்திகள் முந்தித் தருவதை மட்டுமே சன் டிவி நோக்கமாகக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய நிலை போலவே விஜயகாந்த், சரத்குமார், வைகோ ஆகியோரை முன்னிலைப்படுத்துவது முற்றிலும் கைவிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

No comments: