Saturday, August 16, 2008

ரஜினிகாந்த் சம்பளமாக வாங்கிய தொகை திருப்பிக் கொடுக்க முடிவு

குசேலன் படத்தில் நடிப்பதற்காக சம்பளமாக வாங்கிய தொகையில் ரூ.10 முதல் 15 கோடிகள் வரை திருப்பிக் கொடுக்க ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடித்து வெளியான படம் குசேலன். ஆகஸ்ட் 1ம் தேதி வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர். ரஜினிகாந்த் படத்தில் ஒரு மணி நேரமே வருவதால் ரசிகர்கள் குசேலனை பார்க்க வரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்கள். இதையெல்லாம் தெரிந்துதானே கோடிக்கணக்கில் பணம் கொடுத்து குசேலன் படத்தை வாங்கினீர்கள் என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பதில் வந்ததால், படம் வெளியாகும் நேரத்தில் ரஜினிகாந்த் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதுதான் குசேலன் ஓடாதற்கு காரணம் என்று ரஜினிகாந்த் மீது பழியை தூக்கிப் போட்டார்கள் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தரும்.

இந்த தகவல் அமெரிக்காவில் ரோபோ சூட்டிங்கில் இருந்த ரஜினிகாந்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகுதான் இப்பிரச்னையில் முடிவு எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பு கூறியிருந்த நிலையில், ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து விட்டார். குசேலன் பிரச்னைக்கு அவர் என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்று போயஸ் கார்டன் வட்டாரத்தில் உலாவி விசாரித்தபோது, தான் வாங்கிய ரூ.30 கோடி சம்பளத்தில் ரூ.10 முதல் ரூ.15 கோடிகள் வரை திருப்பிக் கொடுக்க ரஜினி முடிவு செய்திருப்பதாக தெரியவருகிறது.

குசேலன் படத்தை பிரமிட் சாய்மீரா ரூ.60 கோடிக்கு வாங்கி, மினிமம் கியாரண்டி அடிப்படையில் விநியோகித்தது. தயாரிப்பாளர்கள், இயக்குனர் மற்றும் மற்ற கலைஞர்களுக்கு ரூ.30 கோடியும், ரஜினிகாந்த்துக்கு ரூ.30 கோடியும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பாபா படம் பிளாப் ஆனபோதும் ரஜினிகாந்த் பணத்தை திருப்பிக் கொடுத்து தியேட்டர்காரர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதில் இன்னொரு சென்டிமென்ட்டும் அடங்கியிருக்கிறது. அதுதான் ஆகஸ்ட் மாத செண்டிமென்ட். பாபா வெளியானதும் ஆகஸ்ட்தான், குசேலன் வெளியானதும் ஆகஸ்ட்தான்.

No comments: