Sunday, November 23, 2008

யார் இந்த கடல் கொள்ளைகாரர்கள் ?

உலகின் மேற்கு பகுதியையும் கிழக்கு பகுதியையும் இணைக்கும் மிக முக்கிய கடல் வழிப் பாதையான ஏடன் கடல் பகுதியில் சோமாலிய நாட்டைச் சேர்ந்த கடற் கொள்ளையர்கள் பல கப்பல்களை கொள்ளையடித்தும் கடத்தியும் பன்னாட்டு கப்பல் போக்குவரத்து கம்பெனிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே.

மிகப் பழங்காலத்திலேயே அரேபியா கடல் பகுதியில் மிகப் பெரும் கொள்ளைகள் நடை பெற்றதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. பண்டைய சரித்திரத்தின் அடிப்படையில் எழுதப் பட்ட புகழ் பெற்ற நவீனமான கல்கியின் "பொன்னியின் செல்வன்" படித்திருக்கிறீர்களா? அதில் கூட இவர்களைப் பற்றி சில குறிப்புகள் (மூர்க்கமான புதிய வகை அரேபியா கடல் கொள்ளைக்காரர்கள்) உள்ளன. அருள்மொழி செல்வன் உத்தம சோழரை பதவியில் அமர்த்தி விட்டு இந்த கொள்ளை கும்பலை அடக்க செல்ல விரும்புவதாக ஒரு குறிப்பு கூட இருக்கும். இந்தியாவின் மேற்கு கடலோரம் இருக்கும் "வெல்ல முடியாத கடற் கோட்டையை" கட்டியவர்கள் கூட இந்த சொமாலியரே. கொள்ளை அடிக்கும் தொழில் இவர்கள் ஜீன்களிலேயே இருக்கும் போலிருக்கிறது.

சோமாலியா வடகிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு ஏழை நாடு. இங்கு சரியான ஆட்சிமுறை அமையாததும் தொடரும் உள்நாட்டு குழப்பங்களும், எதிஒபியா- சோமாலியா சண்டையும், சோமாலியாவின் பூகோள ரீதியான நிலவமைப்பும் கடற் கொள்ளைகாரர்கள் உருவாகவும் வளரவும் முக்கிய காரணங்கள். ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் (சூயஸ் கால்வாய்) முக்கிய வழியாக ஏடன் கடல் இருப்பதால், இந்த கடல் வழியாக தினசரி ஏராளமான கப்பல்கள் பிரயானிக்கின்றன. சோமாலியா அரசின் கட்டுப்பாடு இந்த நாட்டைச் சார்ந்த கடல் பகுதியில் குறைவாக இருப்பதால், கடற் கொள்ளையர்களுக்கு நல்ல வசதியாக போய் விட்டது.

இந்த கொள்ளைகாரர்கள் பெரும்பாலும் 20 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள். இவர்கள் மூன்று வகையாக உள்ளனர். கடல் பற்றி நன்கு தெரிந்து கொண்டு கடற் கொள்ளையர்களின் கண்களாக இயங்கும் உள்ளூர் மீனவர்கள், உடல் பலத்தை காட்டும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் இவர்களை இயக்கும் மூளைகளான அதி நவீன தொழிற் நுட்ப வல்லுனர்கள். ஒரு முக்கிய விஷயம். இவர்கள் பல குழுக்களாக பிரிந்து கொள்ளையடித்தாலும் தமக்குள்ளே சண்டைகள் இட்டு கொள்ளுவதில்லை. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். Pirates of Caribbean படம் பார்த்துள்ளீர்களா? (பார்க்க வில்லையென்றால் நிச்சயம் பாருங்கள். ஜாலியான படம் ) அதில் உள்ளது போல் தமக்குள்ளே சில சட்டதிட்டங்கள் எல்லாம் கூட வைத்திருப்பார்கள் போல.

மேலும் ஒரு வேடிக்கையான தகவல். இவர்கள் வறுமை நாடான சோமாலியாவில் மிக ஆடம்பர வாழ்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்து கூட உண்டு. சமூகத்தின் பெரிய மனிதர்களாக இவர்கள் கருதப் படுகின்றனர். (நம் நாட்டில் கூட சில சமூக கொள்ளையர்களுக்கு மிக பெரிய அந்தஸ்து உண்டுதானே?) இந்த கொள்ளையில் கிடைக்கும் பணத்தை கொண்டு அங்குள்ள தொழில் அதிபர்களுக்கு இவர்கள் கடன் கூட கொடுக்கிறார்கள். (இது மட்டுமே திவால் ஆகாத வெளி நாட்டு வங்கி).

இவர்களை அடக்க உலக நாடுகள் (குறிப்பாக நேடோ நாடுகள்) எவ்வளவோ முயற்சி செய்தும் பலிக்கவில்லை. உலக நாடுகளின் கடற்படைகள் இவர்களை துரத்தும் போதெல்லாம், தப்பி சென்று சோமாலியா கடல் எல்லைக்குள் இவர்கள் நுழைந்து விடுவதால் இவர்களை முழுமையாக அடக்க முடிய வில்லை. இதற்காக, ஜுன் 2008 இல் ஐ.நாவில் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் அடிப்படையில் சோமாலிய கடல் எல்லைக்குள்ளும் உலக நாடுகளின் கடற்படைகள் இவர்களை துரத்தி செல்ல முடியும். ஆனால் இதற்கு பிறகும் கூட, இவர்களை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சிரமமான காரியமாகவே இருக்கிறது. 2008 இல் மட்டுமே 92 முறை கடல் தாக்குதல்கள் நடத்தி உள்ள இவர்கள் 36 முறை கப்பல்களை கடத்தி சென்றுள்ளனர். இவற்றில் இன்னும் 17 கப்பல்கள் மீட்கப் படாமல் உள்ளன. சமீபத்தில் கூட, உலகின் மிகப் பெரிய எண்ணெய் கப்பலொன்றை (Sirius Star) இவர்கள் கடத்தி சென்று உள்ளனர்.

இந்தியா கூட ஒன்பதாவது நாடாக ஒரு போர்க்கப்பலை இங்கே நிலை நிறுத்தி உள்ளது. காரணம், இந்த கடல் பாதை வழியே தினமும் ஏராளமான இந்திய சரக்குக் கப்பல்கள் பயணம் செய்கின்றன. மேலும் வெளி நாட்டுக் கப்பல்களில் கூட ஏரளாமான இந்திய மாலுமிகள் பணியாற்றுகின்றனர். நமது கடற் படை இந்த கடல் பகுதியில் மிகச் சிறப்பாக செயல் புரிந்து வருகிறது. இந்தியக் கப்பல்களுக்கு மட்டுமன்றி வேறு நாட்டு கப்பல்களுக்கும் சிறந்த பாதுகாப்பு அளிக்கப் படுகிறது. இந்தியக் கடற்படைக்கும் இந்த கொள்ளையருக்கும் சமீபத்தில் கூட ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு சிறு படகை கப்பலின் மீது வேகமாக மோதி விட்டு பின்னர் கப்பலிலிருந்து தாக்குதல் நடத்துவது இவர்களது பாணி. இதை திறம்பட முறியடித்த நமது கடற்படை கொள்ளையர்களின் கப்பலை மூழ்கடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இவர்களை முழுமையாக அடக்க ஒரு "பொன்னியின் செல்வன்" வருவானா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

No comments: