Sunday, November 30, 2008

அரசியல் வாதிகளும் இதை படிக்கலாம்

தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம்.

முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை

புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் பட்டு சுமார் ஒன்பதரை மணி நேரம் பின்னர். பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுவது "தாக்குதல் நடைபெற்ற 30 நிம்டங்களுக்குள் பதில் தாக்குதல் நடத்தா விட்டால், எதிரிகளை அளிப்பது கடினமான காரியம் ஆகிவிடும்". (நன்றி:டைம்ஸ் ஒப் இந்தியா)

இப்படி வியாழன் காலை 7.00 மணிக்கு உள்ளே சென்ற இந்திய கமாண்டோக்கள் தீவிரவாதிகளை அழிக்க மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி இங்கே பார்போம். (நன்றி: மும்பை மிர்றோர்)

தாஜ் ஹோட்டல் ஒரு மிகப் பெரிய கட்டிடம். இதில் பல நூறு சொகுசு அறைகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. மேலும் பல "கூட்டம் நடத்துவற்கான" அரங்குகளும், உணவகங்களும் உண்டு. ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. இந்த ஹோட்டல் இரு பிரிவுகளாக உள்ளது. அதாவது பழைய தாஜ் அரண்மனை கட்டிடம் மற்றும் புதிய தாஜ் டவர். மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உள்ளே மாட்டிக் கொண்டு இருக்க, தீவிரவாதிகளை அழிக்கும் பணி மிக கடினமாகவே இருந்தது. தூரதிர்ஷ்டவசமாக, தாஜ் ஹோட்டலின் வரைபடம் கமாண்டோக்களுக்கு வழங்கப் படவில்லை. கண்காணிப்பு கேமரா அறையினையும் தீவிரவாதிகள் சேதப் படுத்தி விட்டனர். ஹோட்டலுக்குள்ளே பல இடங்களில் இவர்கள் தீ வைத்ததால், உள்ளே புகை மண்டலமாகவும் கடும் இருட்டாகவும் வேறு இருந்தது. இந்த கடினமான சூழலிலும் கூட வெற்றிகரமாக எதிரிகளை வென்ற நமது படைவீரர்களின் சாகசம் பாராட்டுக்குரியது.

இந்திய வீரர்களின் திட்டத்தின் அடிப்படை, முதலில் தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் நெருக்குவது, அங்கே அவர்களுடன் சண்டை நடத்துவது, அதற்குள் உள்ளே இருப்பவர்களை காப்பாற்றி வெளியேற்றுவது. இதன் அடிப்படையில் ஒரு குழு தீவிரவாதிகளை தேடி முதல் தளத்திற்கு சென்றது. மற்றொரு குழு மேல் தளத்தில் இருந்து உள்ளே நுழைந்தது. இன்னொரு குழு உள்ளே மாட்டி கொண்டவர்களை மீட்க சென்றது. இது சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், உண்மையில் ஒரு மிகப் பெரிய போராட்டமாக இருந்தது. அந்த தீவிரவாதிகள் மிகுந்த போர் தேர்ச்சி பெற்றிருந்ததுடன் கட்டிடத்தின் உள்ளமைப்பு பற்றி நன்கு தெரிந்து கொண்டிருந்தனர். இதனால், அவர்களால் எளிதாக தளம் மற்றும் கட்டிடம் மாற முடிந்தது.

பலமணி நேரம், கட்டிடத்தின் அடித்தளத்தில் கழித்த இந்திய வீரர்கள் மிக நிதானமாக முதல் மாடியை நோக்கி முன்னேறினர். தீவிரவாதிகள் வீசும் குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் சுடும் சத்தம் இவற்றின் அடிப்படையிலேயே நம் வீரர்களால் அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தை கணிக்க முடிந்தது. இவர்கள் முன்னேறும் போது, பின்னே வந்த மற்றொரு குழுவினர் பாதுகாப்பு தந்தனர். முதல் மாடியில் ஒவ்வொரு அறையாக இவர்கள் சோதனை இட்டனர். அப்போது, அந்த தளத்தின் முழு விவரத்தையும் அறிந்திருந்த தீவிரவாதிகள் இவர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டினர். கையெறி குண்டுகளை நம் வீரர்கள் மீது எறிந்தனர். மேலும் பல இடங்களில் தீ வைத்தனர். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க நடை பெற்ற சண்டைக்கு பின்னர், நம் வீரர்களால், அந்த தளத்தின் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள முடிந்ததுடன், தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் நெருக்க முடிந்தது.

தீவிரவாதிகளை நேரில் பார்த்த ஒரு கமாண்டோவின் கூற்றுப் படி, அந்த தீவிரவாதிகள் மிகவும் இளைய வயதினராய் இருந்தனர். ஒரு குறிப்பிட்ட நேர சண்டைக்கு பிறகு களைத்துப் போய் விட்டனர். மிகவும் பயந்து போய் கூட இருந்தனர். கைகளை தூக்கி சரணடைவது போல நடித்த ஒருவன் தப்பி ஓட முயல நம் வீரர்கள் அவனை சுட்டுக் கொன்றனர். அவன் முகத்தை கூட பார்க்க விரும்பாமல் தப்பி சென்ற மற்றொருவனை தேடும் பணியை தொடர்ந்தனர்.

இதே சமயம், உள்ளே மாட்டி கொண்டிருந்தவர்களில் (அறைகளில் தங்கி இருந்த )பலருடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்ட போலீஸார், அவர்களை அங்கேயே இருக்கும் படி அறிவுறுத்தினர். பின்னர் உள்ளே சென்ற மற்றொரு குழுவினரால் அவர்கள் பத்திரமாக காப்பாற்றப் பட்டனர்.

மேல்தளத்தின் வழியாக , உள்ளே நுழைந்த கமாண்டோக்களின் பணி இன்னும் சிரமாக இருந்தது. தீயை அணைக்க பாய்ச்சப் பட்ட நீர் ஆறாவது மாடியில் கழுத்து வரை நிரம்பி இருந்தது. கொல்லப் பட்டவர்களின் உடல்கள் நீரில் மிதந்து கொண்டிருந்தன. அவர்கள் கொல்லப் பட்டு 24 மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டதால், அந்த உடல்கள் அழுகி கடும் நாற்றம் கிளம்பி இருந்தது. ஒரு கமாண்டோ கூறுகிறார். " என்னால் அந்த சூழல் எப்படி இருந்தது என்று சொல்லவே முடிய வில்லை"

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் தீவிரவாதிகளை நெருக்குவது அதே சமயத்தில் உள்ளே மாட்டிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்பது என்ற "ஆபரேஷன் சைக்ளோன்" என்ற திட்டத்தை முதல் பாதியை சிறப்பாக செயல் படுத்திய நம் வீரர்கள், ஹோட்டலுக்குள் உயிரோடு இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டனர் என்று தெரிய வந்தவுடன், தமது தாக்குதலை தீவிரப் படுத்தினர்.

அதே சமயம் பல மணி தூங்காமல் தீவிரவாதிகள் மிகுந்த களைப்படைந்திருந்தனர். அவர்களை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் சண்டையிடச் செய்ததும் நமது வீரர்களின் போர்த்தந்திரம். ஒரு தீவிரவாதி "ரப்பா! ரெஹம் கர்!", அதாவது கடவுளே என்னைக் காப்பாற்று என்று ஒலமிட்டதாகவும் நம் கமாண்டோ தெரிவித்தார். மற்றொருவன், தாக்குதலை நிறுத்துங்கள், வெளியே வந்து விடுகிறேன் என்று கதறியதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, அனைத்து அப்பாவிகளும் தப்பித்தனர் என்று உறுதி செய்து கொண்ட நம் வீரர்கள், அவர்களை நெருக்கி அறைகளுக்குள் ஒளிந்து கொள்ள செய்தனர். பின்னர், தீவிரவாதிகள் ஒளிந்து இருந்ததாக சந்தேகிக்கப் படும் அறைகளின் கதவினை குண்டுகள் கொண்டு தகர்த்தனர். உள்ளே சென்று சில குண்டுகளை மீண்டும் எறிந்தனர்.

சுமார் 50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அனைத்து தீவிரவாதிகளும் ஒழித்துக் கட்டப் பட்டனர். பின்னர் அவர்கள் உடல்களை முற்றிலும் சிதைந்த நிலையில் இவர்கள் கண்டுபிடித்தனர். அதைப் பற்றி ஒரு கமாண்டோ கூறியது. "அவர்கள் ஒரு கொடூரமான சாவை அதற்கான வலியை மெல்ல மெல்ல உணர்ந்தவாறே அடைந்தனர். அவர்கள் உடல்கள் சின்னா பின்னமாகின நிலையில் கண்டெடுக்கப் பட்டன.. ஒருவனது கண்களுக்குள்ளே கூட குண்டுகள் பாய்திருந்தன".

50 மணி நேரம் சாப்பிடாமல், தூங்காமல் போராடி தீவிரவாதிகளை ஒழித்து கட்டியது மட்டுமல்லாமல் பலரின் உயிரை காப்பாற்றிய நம் வீரர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் சொல்லும் அதே நேரத்தில் இந்தியாவை தாக்க நினைக்கும் தீவிரவாதிகளுக்கு ஒரு செய்தி.

"ஆயுதம் இல்லாத அப்பாவிகளை கொல்லும் பேடிகளே! ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள், உங்களால் எங்கள் படை வீரர்களை ஒருநாளும் நேருக்கு நேர் சந்திக்கவே முடியாது. அதற்கு வேண்டிய ஆண்மையும் வீரமும் உங்களிடம் இல்லை. மேலும், இந்தியா எனும் வல்லரசுடன் மோதினால் உங்கள் சாவு மிகக் கொடூரமாக இருக்கும். அந்த சாவு கூட, பல ஆண்டுகள் பெருவியாதியால் வேதனைப் பட்டு இறக்கும் ஒருவனது வேதனை முழுவதும் முழுமையாக உணர்ந்த பின்னரே நிகழும். அது மட்டுமல்ல, தாய் நாட்டிற்காக உயிர்நீத்த எங்கள் அருமை வீரர் உடல்கள் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப் படும் அதே வேளையில் உங்களது உடலுக்கு தெருவில் அடிப்பட்ட சொறி நாய்க்கு கிடைக்கும் மரியாதை கூட கிடைக்காது. இறப்பிலும் நாறும் கேவலமான நிலை உங்களுக்கு தேவையா என்பதை இந்தியா வருவதற்கு முன்னரே (உங்களுக்கு மூளை என்று ஒன்று இருந்தால்) முடிவு செய்து கொள்ளுங்கள்"

"மேலும், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை என்று ஒன்று இருந்தால் மற்றும் சொர்க்கம் நரகம் என்றவற்றின் மீதும் நம்பிக்கை இருந்தால் ஒரு செய்தி. அப்பாவிகளை கொல்லுபவனுக்கு கடவுள் இறந்த பிறகும் நரகத்தில் கடும் தண்டனை அளிப்பார் என்று எல்லா மதங்களின் புனித வேத நூல்களும் கூறுகின்றன. எனவே, இறக்கும் முன்னரும், இறந்த பின்னரும் இவ்வவளவு கடும் தண்டனை தேவையா என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்"

No comments: