Tuesday, September 20, 2011

அழகிரி திக்திக்… மதுரையில் கிளைமாக்ஸ் நெருங்குகிறது

மதுரை, இந்தியா: “நீங்க பாட்டுக்கு அதிரடியா ஏதாவது பேசிட்டு போயிருவீங்க. உடனே அந்தம்மா நடவடிக்கை எடுக்கிறேன்னு என்னை புடிச்சுக்குவாங்க. அவங்க ஆட்சி பற்றி அதிகமா போசாம கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசியுங்க” சமீபத்தில் மதுரை முன்னாள் அரசர், பதட்டத்துடன் கலைஞரிடம் சொன்ன வார்த்தைகள் இவை.

அழகிரியின் இந்த வார்த்தைகளின் பின்னரே, புதிய சட்டமன்றக் கட்டடத்தை வைத்தியசாலையாக மாற்றும் திட்டத்தை கலைஞர் எதிர்க்கவில்லை, மாறாக, ஆதரித்தார் என்கிறார்கள் தி.மு.க. வட்டாரங்களில். அப்படி அழகிரிக்கு என்ன பதட்டம்?

மதுரையில் கிளைமாக்ஸ் நெருங்குகிறது என்ற தகவல் அவருக்குக் கிடைத்திருக்கிறது என்கிறார்கள். அழகிரியின் வலது, இடது கைகளை தமது கஸ்டடியில் வைத்திருக்கும் போலீஸ், அடுத்ததாக அழகிரியின் கைகளைத் தேடி ‘காப்பு’டன் வரலாம் என்ற தகவல்தான் அஞ்சா நெஞ்சரை மிரள வைத்துள்ளதாம்.

ஒரேயொரு நாள் போலிஸ் கஸ்டடி விசாரணையிலேயே பாண்டியராஜன் கொலை வழக்கில் உண்மையை எல்லாவற்றையும் கக்கிவிட்டார், எஸ்ஸார் கோபி. அதையடுத்து, நில அபகரிப்பு விவகாரம் மாத்திரமின்றி, பாண்டியராஜன் கொலை கேஸ் விஷயத்தில் ஆழமாக தோண்டத் தொடங்கியுள்ளது மதுரை போலீஸ்.

ஒருநாள் விசாரணையின்பின் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், பாண்டியராஜனை கொலை செய்ய ஆட்களை அனுப்பியதை ஒப்புக்கொண்ட கோபி, பொட்டு சுரேஷ் சொல்லித்தான் ஆட்களை அனுப்பி வைத்ததாக கூறியிருக்கிறார். அதுவரைக்கும் சரி. ஆனால், அதற்குப் பின், காட்சிக்குள் அழகிரி வரும் வாக்கியத்தில்தான் போலிஸ் திணறுகின்றது.

கோபி வாக்குமூலத்தில் போலிஸ் திணறும் அந்த வாக்கியம் எதுவென்றால், “பாண்டியராஜனைக் கொல்ல ஆட்களை அனுப்பச் சொன்ன பொட்டு சுரேஷ், அது அழகிரியின் உத்தரவு என்றும் சொன்னார்” என்பதுதான்.

உண்மையில் இந்த வாக்கியத்தை வைத்துத்தான் அழகிரியை கைது செய்ய நினைத்தது மதுரை போலீஸ். சாதாரண நபர் ஒருவர் சம்மந்தப்பட்ட கொலை வழக்கு என்றால், இந்த ஒரு வாக்கியத்தை வைத்தே போலீஸ், ஒரு ஆளை தூக்கி வந்து விடலாம். ஆனால், ஒரு மத்திய அமைச்சரைத் தூக்குவதற்கு இது போதாது!

காரணம், இது இந்திய குற்றவியல் சட்டத்தில், ‘தேர்ட் பார்ட்டி ஹியர் சே’ என்ற வகையில் வருகிறது. அதாவது, மூன்றாவது தரப்பு நபர் ஒருவர் சொன்னதாக, இரண்டாம் தரப்பு நபர் கூறியதை, முதல் தரப்பு (வாக்குமூலம் கொடுத்தவர்) நபர் ஒப்புக் கொள்வது.

இந்த ‘ஹியர் சே’ வாக்கியத்தை வைத்துக்கொண்டு ஒரு மத்திய அமைச்சரைக் கைது செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தில் எந்தவொரு மாஜிஸ்திரேட்டும் கையெழுத்திட மாட்டார்.

எஸ்ஸார் கோபியின் வாக்குமூலத்திலுள்ள இந்த வாக்கியம், இரண்டே இரண்டு சந்தர்ப்பங்களில்தான், அழரியைக் கைது செய்ய வைக்க, ஏற்றுக்கொள்ளப்பட முடியும்.

1) சப்போர்ட்டிங் ஸ்டேட்மென்டாகப் பயன்படலாம். அதாவது, இதிலுள்ள இரண்டாம் தரப்பு நபரும் (பொட்டு சுரேஷ்) இதே கூற்றைக் கூறினால், அந்தக் கூற்றை வலுப்படுத்த, இந்தக் கூற்றை சப்போர்ட்டிங் ஸ்டேட்மென்டாகப் பயன்படுத்தலாம்.

2) இரண்டாவது தரப்பு நபர் போலிஸால் அணுகப்பட முடியாத நிலையில் (தலைமறைவு) இருந்தாலோ, அல்லது போலீஸால் வாக்குமூலம் எடுக்க முடியாத பிஸிகல் ஸ்டேஜில் (கோமா ஸ்டேஜில் இருந்தாலோ, உயிரிழந்திருந்தாலோ) இருந்தாலோ, இந்தக் கூற்றைப் பயன்படுத்தி தேர்ட் பார்ட்டியை (அழகிரி) கைது செய்யலாம்.

இதுதான் போலிஸ் துறைக்கு தற்போதுள்ள சிக்கல்.

இதிலுள்ள முதலாவது சாத்தியத்தில், பொட்டு சுரேஷ் வாக்குமூலம் கொடுக்க வேண்டும். மயிலே மயிலே என்று கேட்டும் மயில் இறகு போடுவதாக இல்லை என்று தெரிகிறது. மயிலை போலிஸ் காவலில் எடுத்தால், இறகு பிடுங்குவது சுலபம்.

நீதிமன்றம் ஒன்றில் போலீஸார் எத்தனை நாட்கள் கஸ்டடி கேட்கிறார்களோ, அத்தனை நாட்கள் பொட்டு சுரேஷை ஒரு மாஜிஸ்திரேட் கஸ்டடிக்கு அனுமதி கொடுத்தால் போதும், அழகிரி தொடர்பான அத்தனை விவரங்களையும் கக்க வைத்து விடுவார்கள், மதுரை போலீஸார். அதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

அதுதான் அழகிரியின் பதட்டத்துக்குக் காரணம்.

எந்த நிமிடமும் பொட்டு சுரேஷ் மனது மாறி வாக்குமூலம் கொடுத்து விடலாம். அல்லது வாக்குமூலம் கொடுக்க வைக்கப்படலாம் என்பது அவருக்கு உள்ள பெரிய திக் திக். போலிஸ் நடைமுறைகள் யாருக்குத் தெரிகிறதோ, இல்லையோ, பொட்டு சுரேஷ், கோபி, அழகிரி போன்ற ஆட்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஒருவேளை முதலாவது வழிமுறை சரிவராமல், இரண்டாவது வழிமுறை பலித்து விட்டால் என்னாகும்? என்பது கிடுகிடுக்க வைக்கும் அடுத்த சாத்தியம்.

அதாவது, பொட்டு சுரேஷை ஜெயில் மாற்ற அழைத்துச் செல்லும்போதோ, நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போதோ, அவர் தப்பிச் செல்ல முயன்று, வேறு வழியில்லாமல் போலிஸ் அவரை…..

-ஒரு சட்ட ஆலோசகரின் சில குறிப்புகளுடன், ரிஷி.
Viruvirupu, Saturday 20 August 2011, 10:08 GMT

No comments: