Saturday, August 13, 2011

கடன் அமெரிக்காவை முறிக்கும்!

பொதுவாக ஓர் அரசாங்கம் பணப் பற்றாக்குறையை மூன்று வழிகளில் சமாளிக்கும். ஒன்று, வரி அதிகரிப்பு; இரண்டு, செலவுகளைக் குறைப்பது; மூன்று, கடன் வாங்குவது; அமெரிக்கா, தன் கடன் நெருக்கடியைச் சமாளிக்க இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. மூன்றாவது வழியையும்.

1950 தொடங்கி 1980 வரையிலான 30 ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவின் நிதி நிலவரம் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அதற்குப் பிறகு வருமானத்தை மீறிய செலவுகள். செலவுகளைச் சந்திக்கக் கூடுதல் கடன். கூடுதல் கடனை அடைக்க வட்டியுடன் கடன். வட்டியை அடைக்கக் கடன். பிறகு கூடுதல் வட்டி. கூடுதல் கடன். இப்படியே இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருந்தது அமெரிக்கா. சென்ற ஆண்டு 2.2 டிரில்லியன் டாலரை (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி ரூபாய்) வருமானமாக ஈட்டி 3.5 டிரில்லியன் டாலரைச் செலவழித்திருக்கிறது அமெரிக்கா. இந்த ஆண்டு விழி பிதுங்கி விட்டது.

ஏற்கெனவே நிதி நெருக்கடி டைஃபாய்ட் கொசுக்கடியாக இன்னொரு பக்கம் பிடுங்கி எடுத்துக்கொண்டிருக்கிறது. இதில் கடன் தொல்லை வேறு. நிலைமையைச் சமாளிக்க வேண்டுமானால், இவ்வளவுதான் கடன் வாங்கலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் உச்சபட்ச வரம்பை அதிகரிக்க வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தின் (காங்கிரஸ்) இரு அவைகளின் ஒப்புதல் பெறவேண்டும். எனவே, ஆளுங்கட்சியான ஒபாமாவின் டெமாக்ரடிக் கட்சியும் எதிர்க்கட்சியான ரிபப்ளிக் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி சில சமரசங்களுடன் ஒரு புரொபோசலை உருவாக்கின. செனட் சபை இதனை ஏற்றுக் கொண்டது. இதற்கு முன்னால் 14.3 டிரில்லியன் டாலர் என்பதே அமெரிக்காவின் கடன் உச்சவரம்பாக இருந் தது. இனி கூடுதலாக 2.1 டிரில்லியன் டாலர் சேர்த்துக்கொள்ளலாம்.

அப்பாடா என்று இப்போதைக்கு அமெரிக்கா மூச்சு விட்டுக்கொள்ளலாம் என்றாலும் இதில் சந்தோஷப்படுவதற்கு எதுவும் இல்லை. ‘எதற்கும் இரண்டு, மூன்று தடவை யோசித்துவிட்டு அந்தாளுக்குக் கடன் கொடுப்பா! நாளைக்கே கம்பி நீட்டிட்டா?’ வேடிக்கையல்ல, உண்மையாகவே அமெரிக்காவை உலகம் இப்படித்தான் பார்க்கிறது. நிறைய கடன் கொடுத்து அமெரிக்காவிடம் இருந்து கடன் பத்திரங்களை வாங்கி வைத்திருப்பவர்கள் திகிலில் இருக்கிறார்கள். பத்திரத்தைக் கொடுத்தால் அமெரிக்கா பணத்தைத் திருப்பிக் கொடுக்குமா? பயம் பற்றிக்கொண்டது.

கடன் பத்திரங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய நாடுகள் (உதாரணத்துக்கு சீனா), கொண்டா என் பணத்தை என்று பத்திரத்தை நீட்டினால் என்ன செய்வது? கடன் வாங்கித் திருப்பித் தர இயலாதவன் என்னும் அடையாளம் அல்லவா விழுந்து விடும்? இதனைத்தான் ‘டிஃபால்ட் ஆவது’ என்று அழைப்பார்கள். ஒரு மூன்றாம் உலக நாடு டிஃபால்ட் ஆகலாம். உலக வல்லரசு?

மற்றொரு பக்கம், அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. இதே நேரம் பார்த்து பட்ஜெட்டும் உதைத்தது. மிஸ்டர் ஒபாமா, ஏதாவது செய்யுங்கள்! உடனே!

சொல்லிவைத்தாற் போல் டாலரின் மதிப்பும் குறைய ஆரம்பித்தது. எனவேதான் அழுத்தம் தாங்காமல் நீட்டிய இடத்தில் கையெழுத்தைப் போட்டுக்கொடுத்து விட்டார் ஒபாமா.

ஆனால் பிரச்னை அவ்வளவு சீக்கிரம் தீரவில்லை. கடன் வாங்கினால் மட்டும் போதாது, செலவுகளையும் குறைத்துக் கொள்ளவேண்டும் என்றார்கள் பொருளாதார நிபுணர்கள். செலவுகள் என்றால் மக்கள் நலத் திட்டங்கள். இதற்கும் ஒப்புக்கொண்டார் ஒபாமா. ஆக, கடனுக்குக் கடன். நலத் திட்டங்களுக்கு வெட்டு போடுவதன் மூலம் லாபத்துக்கு லாபம். போதாது?

மக்கள் நலப்பணிகளை ரத்து செய்வது என்றால் என்ன? உதாரணத்துக்கு மின சோட்டாவில் வேலையில்லாதவர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் அமலில் இருந்தது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அரசிடம் இருந்து உதவித் தொகை பெற்று வந்தனர். இனி இது இருக்காது. இல்லினாய்ஸ் பகுதியில் முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை இனி கிடையாது. ஜார்ஜியாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்விக்கான உதவித் தொகைத் திட்டம் ரத்து. பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரத்து.

அலபாமாவில் உள்ள நீதிமன்ற அலு வலகங்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு இந்த மாத இறுதிக்குள் வேலை போய் விடும். நியூயார்க் நீதிமன்றம் 400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருக்கிறது. ஃப்ளோரிடாவில் அரசாங்கம் படிப்படியாகத் தனது பொறுப்புகளில் இருந்து விலகிக்கொண்டு, பல துறைகளில் தனியார்களை நியமித்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று சிறை நிர்வாகம். ஜனவரி 1, 2012க்குள் 30 சிறைச்சாலைகளை முழுமையாக ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று அரசு தவணை கொடுத்துள்ளது. அதே போல் குற்றவாளிகள் சீர்திருத்தத்துறையும் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் 7 சதவிகித செலவுகளைக் குறைக்க முடியுமாம். இவை சில உதாரணங்கள் மட்டுமே.

மொத்தத்தில், அமெரிக்கா சரிந்துபோன தனது சீட்டுக் கட்டு மாளிகையைத் தூக்கி நிறுத்த மேலும் சில சீட்டுகளையே இந்த முறையும் பயன்படுத்தியுள்ளது. அதுவும் கடன் வாங்கிய சீட்டுகள். புயல் எல்லாம் வேண்டாம் ஃப்பூ என்று கிட்டே போய் ஊதினாலே போதும், மீண்டும் மாளிகை சரிந்துவிடும். சாதா மாளிகைக்கு மட்டுமல்ல வெள்ளை மாளிகைக்கும் இது பொருந்தும்.

இந்தியாவில் எதிரொலி!

அமெரிக்கா ஹச்சென்றால் உலகம் முழுவதற்கும் குளிர் காய்ச்சல் பரவி விடும். அந்த அளவுக்கு அமெரிக்க நிதிச் சந்தை உலக நிதிச் சந்தையோடு பின்னிப் பிணைந்துள்ளது. உலகப் பங்குச் சந்தையை அமெரிக்க டாலர்தான் இன்றுவரை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது. டாலர் சரிந்தால் எண்ணெ விலை சரியும். பங்குச் சந்தை ஆட்டம் காணும். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை அவசரமாக இழுத்துக் கொள்வார்கள். பங்குகள் விலை சரியும். ஆசியாவில் இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான். ஆசிய நாடுகளில் குறிப்பாக சீனாவில் பங்குகள் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளன.

இந்தியாவில் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இந்த அளவுக்குக் கடுமையான சரிவு ஏற்பட்டதில்லை.

டாலர் தன் நிலைத்தன்மையை இழந்துகொண்டிருப்பதாக அஞ்சிய பலரும் தங்கத்தை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். அதனால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. பத்து கிராம் தங்கத்தின் விலை ரூ.25,0000. முதலீட்டாளர்கள் கொந்தளிக்க வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜி அவசர அவசரமாக அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார். நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று ரிசர்வ் வங்கியும் இந்திய அரசும் ஆலோசனைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

'ரேடிங்’னா என்ன?

கையில் பணம் இல்லாவிட்டால் நாம் கடன் வாங்குவதைப் போலவே நிறுவனங்களும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் அரசாங்கங்களும் தங்கள் தேவைக்காகக் கடன் வாங்குவது வழக்கம். அமெரிக்கா தம் தேவைகளுக்காக நீண்ட காலமாகக் கடன் பெற்று வந்துள்ளது. பதிலுக்கு ரசீது போல் கடன் பத்திரங்களை அமெரிக்கா வழங்குவது வழக்கம். இந்தப் பத்திரங்களுக்கு நல்ல வட்டி விகிதமும் நிர்ணயிக்கப்படும் என்பதால் பல வர்த்தகர்களும் நாடுகளும் அமெரிக்கக் கடன் பத்திரங்களைப் பெருமளவில் வாங்கிக் குவித்துள்ளன. தேவைப்படும் போது பத்திரங்களைத் திரும்பப் பெற்று வட்டியோடு கடனைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது ஏற்பாடு.

எந்த அடிப்படையில் கடன் தருவது?

கடனைத் திருப்பித் தரும் சக்தி அவர்களுக்கு இருக்கிறதா? அமெரிக்கா என்பதாலோ பெரும் நிறுவனம் என்பதாலோ மட்டும் கடன் கொடுத்துவிட முடியுமா? இந்த இடத்தில்தான் தர நிர்ணயத்துக்கான தேவையும் தர நிர்ணயம் செய்யும் அமைப்புகளின் தேவையும் ஏற்படுகின்றன. ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் என்பது சர்வதேச அளவில் புகழ் பெற்ற தர நிர்ணய நிறுவனங்களுள் ஒன்று.

இவர்கள் கடன் பெறுவோரின் நிதி நிலைமையைத் தொடர்ச்சியாக ஆவு செய்து, பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொண்டு அவற்றின் அடிப்படையில் ஏஏஏ,ஏஏ ப்ளஸ்,ஏஏ, ஏஏ நெகடிவ் என்று நிர்ணயம் செய்து வருகிறார்கள். பிபிபி தரத்துக்குக் குறைவாகப் பெற்றவர்களுடன் பொதுவாக யாரும் வர்த்தகம் செய்யமாட்டார்கள். அமெரிக்காவுக்கு இதுவரை ஏஏஏ என்னும் உயர்ந்த அந்தஸ்து இருந்து வந்தது. இப்போது அது ஏஏ ப்ளஸ் என்று சுருங்கிவிட்டது. இதுபோலவே மூடீஸ், ஃபிட்ச் ஆகிய தர நிர்ணய நிறுவனங்களும் இருக்கின்றன. அவை அமெரிக்காவின் கடன் பத்திரங்களின் மதிப்பீட்டைக் குறைக்கவில்லை.

No comments: