Friday, August 12, 2011

நிலநடுக்கத்தில் 2,800 குற்றங்கள் : அ.தி.மு.க. ரிக்டர் ஆபரேஷன்!

ஜெயலலிதா திட்டமிட்டு உருவாக்கும் 'நிலநடுக்கத்தின்’ ரிக்டர் அளவு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இது தி.மு.க - வின் உள்கட்டமைப்பில், அளவுக்கு மீறிய அதிர்வுகளையும் சரிபண்ண முடியாத பிளவுகளையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. ஆளும் கட்சியான அ.தி.மு.க-வின் தவறுகளைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பு அரசியல் பண்ண முடியாமல், தங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அரசியல் மட்டுமே செய்தாக வேண்டிய நெருக்கடியை இந்த நிலநடுக்கங்கள் தி.மு.க-வுக்கு உருவாக்கிவிட்டன!

முதல்வர் ஜெயலலிதா தெரிந்து செய்தாரா அல்லது தெரியாமலே தொடங்கினாரா எனத் தெரியவில்லை. தி.மு.க-வின் அஸ்திவாரத்தை ஆட்ட நிலப் பிரச்னைதான் சரியான வழிமுறை என்று கையில் எடுத்தார். முதலாவது கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுக்குப் பின்னால், ''தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நில அபகரிப்புகள் தொடர் பான ஏராளமான புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதே, அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்ட நிலங்களைத் திரும்பப் பெற்றுத் தருவேன்’ என்று நான் அறிவித்து இருந்தேன். அந்த நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதுவரை 2,800-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து குவிந்து உள்ளன'' என்று அறிவித்தார் முதல்வர். கடந்த ஆட்சியில் புகார் கொடுக்காதவர்கள், புகார் கொடுக்கவிடாமல் தடுக்கப்பட்டவர்கள், புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைவிடப்பட்ட வர்கள், யாருக்கும் சொல்லாமல் உயிர் பயத்தால் மறைத்துக் கொண்டவர்கள் எனப் பலரும் தங்கள் மனுக்களுடன் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் முன்னால் நின்றார் கள். 'இதற்குத்தானடா காத்திருந்தோம்’ என்பது மாதிரி, மொத்தமாக கோழிகளை அமுக்க ஆரம்பித்தது ஆளும் அரசு!

''நியாயமான வழக்குகளாக இருந்தால், அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்ட நிலங்களாக இருந்தால், வழக்குப் போடுவதில் தவறு இல்லை. இந்த நடவடிக்கைகளைக் கடந்த தி.மு.க. ஆட்சி என்று மட்டும் வைத்துக்கொள்ளாமல், அதற்கும் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தட்டிப் பறிக்கப்பட்டவைக்கும் சேர்த்து வழக்குகள் போட வேண்டும். விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக, முதல்வர் ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட சிறுதாவூர் நிலமும் இத்தகைய புகாருக்கு உள்ளானதுதான்'' என்று கருணாநிதி பதிலடி கொடுக்க, ''ஏற்கெனவே அன்றைய விலைக்கு நிலங்களை விற்றவர் கள், இன்று விலை கூடிவிட்டதற்காக அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு புகார் கொடுக்கிறார்கள். நான் ஒரு நிலத்தை டி.ஆர்.பாலுவிடம் 10 லட்சம் கொடுத்து வாங்குகிறேன். அதன் விலை கூடிய பிறகு, அதிக பணத்துக்கு பாலு ஆசைப்பட்டு, என் மீதே வழக்குப் போட்டால் ஏற்க முடியுமா?'' என்று மன்னார்குடி கூட்டத்தில் கேட்டார் ஸ்டாலின். இவை அனைத்துக்கும் தமிழக அரசின் பதில் இரண்டே வரிகள்தான். 'பொதுமக்கள் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யார் மீதும் இட்டுக்கட்டி, எந்தப் பொய் வழக்கையும் போடவில்லை!’

மூன்று மாதங்களுக்கு முன்னால் விவசாயத் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், கைத்தறித் துறை அமைச்சராக இருந்து கருணா நிதியால் பதவியைவிட்டும் கட்சியை விட்டும் நீக்கப்பட்டு, மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஈரோடு என்.கே.கே.பி.ராஜா ஆகிய இருவரும் கோவை சிறை யில் இருக்கிறார்கள். மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியும் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனும் பாளை சிறையில் வைக்கப்பட்டார்கள். தென் சென்னை மாவட்டச் செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ- வுமான ஜெ.அன்பழகன் கோவை சிறையில் இருக்கிறார். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் மு.க.அழகிரியின் வலதுகரமுமான 'பொட்டு’ சுரேஷ் பாளை சிறையிலும், மதுரை வேளாண் விற்பனைக் கிடங்கின் முன்னாள் தலைவரும் மு.க.அழகிரியின் இடதுகரமுமான 'அட்டாக்’ பாண்டி, திருச்சி சிறையிலும் இருக்கிறார் கள். தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் கைதாகி விடுதலை பெற்ற எஸ்ஸார் கோபி மதுரை சிறையில் இருக்கிறார். மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவரும் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பின ருமான வி.கே.குருசாமி பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் 'பொட்டு’ சுரேஷ், 'அட்டாக்’ பாண்டி, வி.கே.குருசாமி, புரசை ரங்கநாதன் ஆகிய நால்வருடன் சேர்த்து பூண்டி கலைவாணன் மீதும் குண்டர்கள் தடுப்புச் சட்டம் பாய்ந்து உள்ளது. திருச்சி மாவட்டத் தி.மு.க. துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வலது கரமுமாகிய குடமுருட்டி சேகர், கஞ்சா வைத்துஇருந்ததாகக் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரத்திலும் திருப்பூரிலும் தி.மு.க-வின் கீழ்மட்டப் பதவிகளில் இருந்த பலரும் நில அபகரிப்பு வழக்குகளில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பலர் மீது புகார்கள் வரிசை கட்டி வரத் தொடங்கி உள்ளன.

செய்தித் துறையின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது வில்லிவாக்கத்தில் நில அபகரிப்புப் புகார், சென்னை மாநகரக் காவல் துறையில் பதிவாகி உள்ளது. திருச்சி யில் உள்ள காஞ்சனா ஹோட்டல் சொத்தைக் கைமாற்றி விடும் விவகாரத்தில் போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோர் சம்பந்தப்பட்டதாக நாமக்கல்லைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் கொடுத்த புகார் இப்போதுதான் புகைய ஆரம்பித்துள்ளது. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் போட்டார் நேரு. '16-ம் தேதி வரைக்கும் அவரைக் கைது செய்யக் கூடாது’ என்று விசாரணை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

வருவாய்த் துறை அமைச்சராக இருந்த திண்டுக்கல் ஐ.பெரியசாமி மீது காவல் துறை இயக்குநரிடம் அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் சுந்தர்ராஜன், என்பவர் தந்திருக்கும் புகாரைப் படிக்கவே பயமாக இருக்கிறது. சொத்தை அபகரிக்க நடந்த மோதலில் பல திடுக்கிடும் திருப்பங்களும் மர்ம மரணங்களும்கொண்ட திகில் கதைபோல அது இருக்கிறது. உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி தன்னுடைய கல்லூரியின் வளர்ச்சிக்காக மற்றொரு நிர்வாகத்தின் கல்லூரியை எப்படி முடக்கினார் என்பதும், தனது கல்லூரிக்கான இடத்தைக் கையகப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளும் போலீஸ் விசாரணையில் உள்ளன.

அனைத்துக்கும் மேலாக, மதுரை உத்தங்குடியில் நாகர் ஆலயத்துக்குச் சொந்தமான இடம், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி பேருக்குக் கைமாறியதில் வில்லங்கம் இருக்கிறதா என்பதையும், கருணாநிதியின் படங்களுக்கு ஆஸ்தான தயாரிப்பாளராக இருந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் பங்களிப்பு எத்தகையது என்பதையும் போலீஸ் விசாரித்துக்கொண்டு இருக்கிறது. திருவொற்றியூர் பரணிகுமாரை மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் சாமியும் அவரது தம்பி சொக்கலிங்கமும் தாக்கியதாகப் புகார்.

''பொய் வழக்குகளை வேகவேகமாகப் போட்டு, கழக மாவீரர்களை சல்லடைக் கண்களால் துளைத்துவிடலாம் என்று நினைக்கிறார் ஜெயலலிதா. குண்டர் சட்டத்தை தி.மு.க-வினர் மீது பயன்படுத்துவதைப் பார்த்து, 'ஒரு பயங்கரமான ஆட்சியை நான் நடத்துகிறேன் பார்’ என்று காட்ட நினைக்கிறார்'' என்று கருணாநிதி திருவாரூரில் சொல்லி இருக்கிறார்.

கைதானவர்கள் குற்றவாளிகள்தானா என்பதை போலீஸ் நிரூபிக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கட்டும். ஆனால், புகார் கொடுத்தவர்கள் பலர் அப்பாவிகள்தான். மதுரை திருமலை நாயக்கர் கோயிலுக்கு அருகில் இருக்கும் வீட்டை யும் கடையையும் பறிகொடுத்த கல்பனா, ''நான் அட்டாக் பாண்டியோட சொந்தக்காரங்க. அவர் பேரைச் சொன்னா, ஊரே அதிரும்ல'' என்று சொல்லி, தன்னை மிரட்டியதாகச் சொல்கிறார். திருமங்கலம் பாப்பாவையும் அவரது கணவர் சிவனாண்டி யையும் பொட்டு சுரேஷ் தன் அலுவலகத்துக்கு வரச் சொல்லி மிரட்டியதாகச் சொல்கிறார்கள். சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள 23 குடும்பங்கள் நான்கு ஆண்டுகளாக நடுத்தெருவில் நிற்கின்றன. உத்தங்குடி நாகர் ஆலயத்தின் வி.வி.சுப்பிரமணியன் ஐயர் நில அபகரிப்பையும், அதனால் ஒருவர் காணாமல் போன கதையும் பரபரப்பு. காடுவெட்டிப் பாளையத்தில் பேப்பர் மில்லை கை மாற்றிவிடும் விவகாரத்தில் ஜெ.அன்பழகனின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக சீனிவாசன் புகார் கொடுத்துள்ளார். அவனியாபுரம் பாண்டியராஜின் மனைவி பாண்டீஸ்வரி தனது கணவரைக் கொன்று, அதை ஒரு விபத்தாகக் காட்டிவிட்டார்கள் என்று எஸ்ஸார் கோபி தரப்பு மீது கை நீட்டுகிறார். மிகமிக மேலோட்டமாகப் பார்த்தால், கஞ்சா வைத்து இருந்ததாகக் கைது செய்யப்பட்ட திருச்சி பிரமுகர் தவிர, அனைத்துமே பாதிக்கப்பட்டவர்களால் போடப்பட்ட வழக்குகளாகவே இருக்கின்றன.

இந்த நடவடிக்கைகளைப் பார்த்து நம்பிக்கைகொண்ட பலரும், புதிய புகார்களுடன் புறப்பட்டு உள்ளார்கள். போகிற போக்கைப் பார்த்தால், இந்த நில நடுக்கத்தில் இருந்து தி.மு.க. தப்பிப்பது பெரும்பாடாக இருக்கும். சிவில் வழக்குகளில் கிரிமினல் செக்ஷன்களும் சேரும்போது சிக்கிய தனி மனிதர்களின் மொத்த வாழ்க்கையும் வழக்குடன் மல்லுக்கட்டுவதாகவே முடிந்துபோகும். அத்தகைய சுழலில் தி.மு.க-வினர் சிக்கியது மட்டும் அல்ல... கட்சியையும் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறார் கள்!

No comments: